Friday, March 16, 2012

இலங்கை போர்க் குற்றங்கள்.. யார் பொறுப்பு??

நேற்று சானல்4 ஒளிபரப்பிய அந்த இலங்கை போர்க் குற்ற வீடியோவைப் பார்த்த பிறகு நெஞ்சு அடைத்ததுபோல இருந்தது. முதல் பாகம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இதை சற்று விட்டு விட்டுத்தான் பார்க்க முடிந்தது. கண்கள் பனித்தது. இதற்கு யார் பொறுப்பு என அந்த விடியோவில் காட்டினார்கள். எனக்கு அவர்கள் காட்டியவர்களுடன் இன்னும் அதிக பொறுப்புடையவர்களாக சிலர் தெரிந்தார்கள். அவர்கள் பற்றி..

 
இந்த போர்க் குற்றங்கள் நடைபெற்றபோது அதுபற்றி தெரிந்தும் முழுமையாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடாமல், நடிகைகளின் அங்கங்களையும், சினிமா/அரசியல் கிசுகிசுகளையும் பக்கத்துக்கு பக்கம் பதிப்பிற்று விற்றுக் கொண்டிருந்த நம் தமிழகத்துப் பத்திரிக்கைகள் / இதர ஊடகங்கள்.

இன்னும்கூட இதில் கள்ளமௌனம் சாதிக்கும் நம் ஊடகங்கள்தான் முதல் குற்றவாளி.

 
இதே நேரத்தில், அரசியல் பதவி பேரம் பேசிக்கொண்டும், வாரிசுச்சண்டையில் சமாதானம் பேசிக் கொண்டும், சொகுசு பங்களாக்களில் நிரந்தர ஓய்வு எடுத்துக்கொண்டும் இருந்த நம் தமிழக முன்னணி அரசியல் தலைவர்கள் இரண்டாவது குற்றவாளி.

இவர்களுக்கும் இதுபற்றி நன்றாக தகவல்கள் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மக்களை திசை திருப்பி இலங்கை அரசாங்கம் சொன்ன பொய்களை நம்மை நம்பவைத்த நயவஞ்சகர்கள். இன்று இதற்காக இவர்கள் சிந்தும் நீலிக் கண்ணீர் அவர்கள் குடும்பததை எரியாய் எரிக்கப் போகும் நெருப்புத் துண்டங்கள் என்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை.

 
இந்த இறுதிப் போரில் இலங்கைக்கு தார்மீக உதவிகளும், தளவாட உதவிகளும் செய்து போரை முடித்துவைக்க உதவியதாக சொல்லப்படும் நம் இந்திய மத்திய அரசாங்கம் இதில் மூன்றாவது குற்றவாளி.

நம் தமிழகத்தை முதலிலேயே நீர் மேலாண்மையில் வஞ்சித்துக் கொண்டிருந்த இந்திய மத்திய அரசு, ராஜீவ் கொலைக்குப் பிறகு முற்றிலும் கைகழுவி விட்டது. இன்னும் நம் வங்கக்  கடலில் தினமும் தாக்கப்படும் /  கொல்லப்படும் தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கில்லாத இந்த மத்திய அரசு, இப்போது ஒவ்வொரு தமிழனும் இனி இந்தியன் என சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட வைத்துவிட்டது.

 
இந்த போர்க் குற்றங்கள் நடைபெற்றபோது அதைத் தடுக்கத் தவறிய ஐநா சபையும் அதன் உறுப்பு நாடுகளும் நான்காவது குற்றவாளிகள்.

லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த ஒரு சமூகமே அழிக்கப்பட்டதை இவர்கள் தத்தமது சாட்டிலைட்டுகள் வழியாக அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இன்று படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெட்கக்கேடு. உண்மையில் நம் கம்யூனிஸ்ட் தோழர்கள் சொல்வதுபோல ஐநா சபை என்பது  அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் ஏவலை செய்து முடிக்கும் நாய்தான் போலிருக்கிறது.

 
இந்த போர்க்குற்றங்கள் நடந்ததை அறிந்தும் இன்னும் ஒன்றும் செய்யாமல் / செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கும் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும், நான் உட்பட, ஐந்தாவது குற்றவாளிகள்.

இன்னும் நம்மால் சாந்தமான மனநிலையில் வாழ முடிகிறது. ஒன்று நாம் முற்றிலும் காயடிக்கப்பட்டிருக்கிறோம், அல்லது முழு ஞானியாகி விட்டோம். இதில் முன்னதுதான் சரியானது என நினைக்கிறேன்.


ஒரு குற்றத்தை செய்பவனுடன் உடந்தையாக இருந்தவர்களும் பெரிய குற்றவாளிதான். இந்த வகையில் மேற்கண்ட அனைவருமே குற்றவாளிகளே.


கடவுளே மஹாலிங்கம், இந்த படுகொலையில் உயிர் நீத்த ஆன்மாக்களுக்கு நற்கதியைக் கொடுங்க. இன்னும் பிழைத்து இருப்பவர்களுக்கு எதையும் தாங்கும் மனோபலத்தையும் ஆத்ம பலத்தையும் கொடுங்க. என்னைப் போன்ற தமிழனுக்கு கொஞ்சமாவது வீரத்தைக் கொடுங்க..

சதுரகிரி சுந்தரனே சரணம்...

Friday, March 2, 2012

பயமாக இருக்கிறது....

நேற்று என் மகன் பள்ளி விட்டு வந்ததும் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்னு சொன்னான். என்னடான்னு கேட்டா அவன் வகுப்பில் கூட படிக்கும் ஒரு பையன் சக மாணவியை லவ் பண்ணுவதாக சொன்னான்.

சற்று பகீரென்று இருந்தது. சமாளித்துக் கொண்டு இது எப்பிடி உனக்கு தெரியும்னு கேட்டேன். அந்த பையனே அவனிடன் சொன்னதாக சொன்னான். பிறகு அவனிடம் அந்த பையன் ஒரு பேட்பாய் (Bad Boy) , அவனோட சேராதேன்னு சொல்லி சமாளிச்சு டாபிக்க மாத்தினேன்.

இதில் முக்கியமான விசயம் என் பையன் வயது 5, படிப்பது ஒன்னாவது வகுப்பில்.

இந்த வயதில் இந்த குழந்தைகளுக்கு லவ் பண்ணுவது பற்றி தெரிவதும் அதை நடைமுறைப்படுத்த இறங்குவதும் ஒரு பெற்றோராக பயமாக இருக்கிறது.

பிரச்சினை பள்ளிகளில் மட்டும் இருப்பதாக தெரியவில்லை. வீடுகளிலும், நாம் பார்க்கும் டிவி சீரியல்களிலும், பார்க்கும் சினிமாக்களிலும்தான் முக்கியமான பிரச்சினை இருக்கிறது.

பெரியவர்கள் பார்க்கும் அதே சீரியலையும், சினிமாவையும்தான் குழந்தைகளும் பார்க்கிறார்கள். அதை அவர்கள் பக்குவத்துக்கு ஏற்ப புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த இறங்கி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட குழந்தைகள் வளர்ந்தவுடன் எப்படி இருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

என்ன செய்றதுன்னு தெரியல. நம்மாலயும் வீட்டுல டீவி பார்க்காம இருக்க முடியாது. இனிமேல் அந்த பசங்க பார்க்கர படங்களாகவே புரோகிராம்களாகவே நாமளும் பார்க்க பழகிக்கணும்னு நினைக்கிறேன்.

எல்லாம் அவன் செயல்.. இயற்கை ஏதோ சமூக மாற்றத்தை செய்யுது. இந்த மாற்றம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்னு சத்தியமா புரியல. அதை புரிஞ்சுக்கிற சக்தி நமக்கு இல்லையோன்னு தோணுது. நம்மால முடிஞ்சது எல்லாருக்காகவும் பிரார்த்தனை பண்றது மட்டும்தான்.

கடவுளே மஹாலிங்கம், எல்லாரும் எப்போதும் நிம்மதியா இருக்கணும்..

சதுரகிரி நாயகனே போற்றி. சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Thursday, March 1, 2012

கடலளவு அன்பு...

நம் ஆழ்மனதில் கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற பல எதிர்மறை உணர்வுகள் ஆழமாக படிந்து கிடக்கிறது.

இவற்றை தூண்ட வெளியிலிருந்து வரும் ஒரு எதிர்மறை சொல்லோ அல்லது நமக்குப் பிடிக்காத சிறிய செயலோ போதுமானதாக இருக்கிறது. உடனடியாக இந்த உணர்வுகள் மின் அலைகளாக நம் உடல் முழுதும் பரவ ஆரம்பித்துவிடுகிறது.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, நாம் இந்த சந்தர்ப்பத்தில் செய்யும் எதிர்வினைகளைத்தான். இநத உணர்வுகளுக்கு உயிர் கொடுப்பது இந்த எதிர்வினைகள்தான்.

இதுதான் நம் உறவுகளைப் பேணுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நம் வாழ்வில் பலவித மனிதர்களை பலவித சந்தர்ப்பங்களில் சந்திக்கிறோம். அவர்களுடனான நமது தகவல் பரிமாற்றங்களின் போது ஏற்படும் சில தவறான புரிதல்களால் நாம் செய்யும் எதிர்மறையான உணர்வு வெளிப்பாடுகள் நமக்கு பலவித இழப்புகளை ஏற்படுத்தி விடும். இது நமது உறவுகளில் மட்டுமல்ல; அலுவலக நிமித்தங்களிலும், தொழில் நிமித்தங்களிலும் மிகவும் முக்கியமானதுகூட‌.

நமக்கு சமமானநிலையில் இருக்கும் எதிரியிடமோ அல்லது நண்பருடனோ அல்லது சக ஊழியருடனோ இப்படிப்பட்ட எதிர்வினைகளால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் இது தவறாவனவர்கள் / நமக்கு சமமில்லாதவர்கள் முன்னிலையில், ஒரு தவறான சூழலில் வெளிப்படும்போது பிரளயமே எற்படுமளவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்த வல்லது.

ஒருவர் எவ்வளவுதான் நம் எதிர்மறை உணர்வுகளைத் தூண்டினாலும் ஒரு நேர்மறையான‌ எதிர்வினை செய்வது ஒரு சாமானிய செயல் அல்ல. ஆனால் இதை கற்றுக் கொள்ளவேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றுதான் நான் நினைக்கிறேன்.

இதை எப்படிக் கற்றுக் கொள்வது? நல்ல கேள்விதான்.

இதை கற்றுக் கொள்ளும் முன் நமக்கு ஒரு முன் தகுதி தேவைப்படுகிறது. அது நம் மனதை அன்பால் நிறைப்பது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பு நம் மனதில் நிறைத்துக் கொள்ளவேண்டும். கடலளவு, அந்த ஆகாயம் அளவுக்கு.

ஒரு குடம் நீரில் ஒரு துளி விசம் விழுந்தால் அந்த ஒரு குடம் நீரும் விசமாகிப்போகும்.

ஆனால் அதே ஒரு துளி விசம் கடலில் விழுந்தால்??? கடல் கடலாகவே இருக்கும். விசம் அதில் கரைந்துபோகும்.

இதுதான் சூட்சுமம். நம் மனம் அன்பால் நிறைந்திருக்கும்போது எதிரில் வரும் எதிர்மறை சொல்லாலோ செயலாலோ நம் மனம் எதிர்மறை உணர்வுகளை வெளியிடுவது குறைந்துபோகும். இன்னும் அன்பால் நம் மனம் நிறையும்போது மறைந்தே போகும்.

அன்பால் மனதை நிறைப்போம்... உலகை வெல்வோம்...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி...