Monday, January 31, 2011

தீவிரவாதம் - ஒரு பார்வை

எது தீவிரவாதம்? இன்று வன்முறையில் ஈடுபடுபவர்கள் மட்டுமே தீவிரவாதிகள் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறோம். ஆனால்  தாம் நம்பும் ஒரு விசயத்தை எல்லோரும் நம்பவேண்டும் அல்லது அதுபடியே நடக்கவேண்டும் என்று தீவிரமாக இருப்பதே ஒரு தீவிரவாதம்தான். அவ்வாறு இருப்பவர்கள் அனைவருமே தீவிரவாதிகளே.

சிலர் ஒருவித ஆதர்ச லட்சியத்துக்காகவும் அதை அடைவதற்காகவும் தீவிரமாக முயற்சி செய்யும்போது வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுப்பதும் இதற்குக் காரணமாகிறது.

தீவிரவாதத்தின் விதையாகவும் வேராகவும் அடிநாதமாகவும் இருப்பது இந்த அதிதீவிர மனநிலைதான். ஒருவர் மனநிலையில் இவ்வாறு இருக்கும் போது வன்முறைக்கு செல்வதில்லை. ஒருவர் இருவராகி, இருவர் சிலராகி அவர்களும்  சமூகத்தில் அடிபட்டவர்களாக இருக்கும் போதுதான் வன்முறை எண்ணங்கள் வருகின்றன.

வன்முறை எண்ணங்கள் வரும்போதே அதை செயலாக்க ஆட்களைச் சேர்க்கத் துவங்குகிறார்கள். வறுமையிலும் சமூகக் கோபத்திலும் இருப்பவர்கள் சுலபமாக இவர்களிடம் பலியாகிவிடுகிறார்கள். வயதிலும் அனுபவத்திலும் முதிர்ச்சி அடையாதவர்கள் அடுத்த இலக்கு. பணத்துக்காகவும், பதவிக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் ஏங்குபவர்களும் இதில் இரை ஆகிறார்கள்.


ஏன் இவர்களுக்கு இப்படிப்பட்ட எண்ணங்கள் வருகின்றன?

1) குடும்ப சூழல், வளர்ப்புமுறை, கல்வி, இவை சரியாக இல்லாதபோது இப்படிப்பட்ட எண்ணங்கள் அதிகம் வருகின்றன. வறுமையும்,  பாதிக்கப் பட்ட குழந்தைப்பருவமும், பெற்றோரின், ஆசிரியர்களின்  அலட்சியமும் இதை மிகவும் அதிகப் படுத்துகின்றன.

2) நட்பும், சமூக சூழலும் சரியாக அமையாதபோதும் இந்த எண்ணங்கள் வரும். தவறானவர்களின் சேர்க்கை, குற்றப்பின்னணி உள்ள சமூகத்தில் வளர்தல், சமூக அவலங்களின் (தீண்டாமை, அடிமைத்தனம்) நேரடி அனுபவம்.

3) சரியான அரசியல் சூழல் இல்லாதது அல்லது இல்லாததாக நினைத்துக் கொள்வது.

4) தவறானவர்களை வழிகாட்டிகளாக ஏற்றுக் கொள்வது

5) ஊடகங்களின் வன்முறைத்தாக்கம் - சினிமா, தொலைக்காட்சி,  பத்திரிக்கைகள்

6) ஒரு மிகப்பெரிய லட்சிய விசயத்தை தானேசெய்து முடிக்கவேண்டும் என்ற தீவிரமான உத்வேகம்

7) சரியான வேலை (employment)  இல்லாத சூழல். சோம்பலை அதிகப் படுத்தி, சிந்தனையைச் சிதறடிக்கும்.

8) மக்களின் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படுதல். சரியான மறு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படாத நிலை.

8) தவறிய மனநிலை - மன நோய்.


என்ன செய்யலாம்?

தீவிரவாதத்தைக் குறைப்பதில் குடும்பத்தின் பங்கும், சமூகத்தின் பங்கும் மிக அதிகம். சரியான குடும்ப சூழலும் சமூக சூழலும் ஏற்படுத்தினால் வருங்காலத்தில் தீவிரவாதிகள் உருவாவதைக் குறைக்கலாம்.

ஊடகங்களின் வன்முறை, சமூக ஒழுக்கத் தாக்குதல்களை நிறுத்தவேண்டும்.

சரியான அரசாங்கமும் அதிகாரிகளும் அமைந்து, அமைதியான, சமத்துவமான  சூழல் ஏற்பட வேண்டும். நாட்டின் அனைத்துப்பகுதிகளுக்கும் சிறந்த சாலை, உள்கட்டுமான வசதி, கல்வி, மருத்துவ வசதிகள் செய்துதரப்படவேண்டும்.

மக்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படவேண்டும். அவர்களுக்கான உரிமைகள் மதிக்கப்படவேண்டும்.

வேலைவாய்ப்புத் திண்டாட்டம் ஒழிக்கப்படவேண்டும். அனைவரின் மனித உழைப்பும் உபயோகப்படுத்தும்படி திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். நாட்டின் வளர்ச்சி பரவலாக்கப்படவேண்டும்.

யோகாவும் தியானமும் அனைவருக்கும் கற்றுத்தரப்பட வேண்டும். ஒரு முழுமையடைந்த வாழ்க்கை நிலையை அடைய அனைவருக்கும் இது வழி செய்யும்.


இருக்கும் தீவிரவாதிகளை என்ன செய்யலாம்?

அனைத்துத் தீவிரவாதிகளுக்கும், யோகா, தியானம் கற்றுக் கொடுத்து அவர்களைத் திருத்த வழி செய்ய வேண்டும்.

மனநல மருத்துவம் அனைத்து தீவிரவாதிகளுக்கும் செய்யப்படவேண்டும்.

அவர்கள் தீவிரவாதிகள் ஆன காரணங்கள் ஆராயப்பட்டு, அவை சரியாக இருக்கும் பட்சத்தில்,  அதற்கான தீர்வுகள் செய்யப்படவேண்டும்.

அவர்கள் திருந்திவாழ மறுவாழ்வுத்திட்டங்கள் வகுக்கப்படவேண்டும்.


யோசிக்க யோசிக்க நல்லாவே இருக்கு... ஆனா நடைமுறையில் செயல் படணுமே.... அதுக்கு ஆண்டவன் அனுக்கிரகம் ரொம்பவே தேவை.

ஆண்டவா ஏதாவது செய்யுங்க!! சுந்தரமஹாலிங்கமே சரணம்!!! சதுரகிரியாரே போற்றி!!!

0 comments: