Friday, March 18, 2011

நம் ஜனநாயகம் ஒரு பணநாயகம்....

நேற்று பாராளுமன்றத்தில், சில உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்த விஷயமாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஒரு கேபிள் பற்றி,  நடந்த புயலைப் பார்த்துவிட்டு, நம் நாட்டில் நடப்பது ஜனநாயகமா அல்லது பண நாயகமா என்ற சந்தேகம் மீண்டும் வந்துவிட்டது .

இதற்கு முன்பும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. ஒருமுறை பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் பணத்தை எடுத்து லஞ்சமாக கொடுக்க முயன்றதாக புயலைக் கிளப்பியுள்ளார்கள்.

மேலும், ஒருமுறை அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க லஞ்சம் பெற்றதாக சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது புகார் கூறப்பட்டது.

இதைவிடக் கேவலமாக, சில கேள்விகளை நாடாளுமன்றத்தில் கேட்பதற்காக, லஞ்சம் கேட்ட உறுப்பினர்களை சில ஆங்கில சேனல்கள் ஒளிபரப்பி தேசத்தின் மானத்தை காற்றில் பறக்க விட்டனர்.

இவ்வளவுக்குப்பிறகும் நாம்தான் உலகின் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கமாக இருக்கிறது.

என்ன செய்வது? இங்கு ஜனநாயகத்தின் எல்லாமட்டத்திலும், எல்லாவற்றிற்கும் பணம் விளையாடுகிறது...

தேர்தலுக்கு முன் :

கூட்டணி வைக்க பணம்.- கட்சிகளுக்கு

தனித்து நிற்கவும் பணம். - கட்சிகளுக்கு

தேர்தலில் நிற்க பணம் - கட்சிகளுக்கு, சில சுயேச்சைகளுக்கு

தேர்தலில் நிற்காமலிருக்கப் பணம் - கட்சிகளுக்கு, சில சுயேச்சைகளுக்கு

ஓட்டு சேர்க்க பணம். - வாக்காளர்களுக்கு

ஓட்டு பிரிக்கப் பணம். - வேட்பாளர்களுக்கு

ஓட்டு போடப் பணம். - வாக்காளர்களுக்கு

தேர்தலுக்குப் பின்:

கூட்டணி வைக்க பணம்.- கட்சிகளுக்கு

கூட்டணி மாற வைக்க பணம்.- கட்சிகளுக்கு

பிரதிநிதிகள் ஓட்டுப் போடப் பணம்.  - தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு

பிரதிநிதிகள் ஓட்டு மாற்றிப் போடப் பணம். - தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு

கேள்வி கேட்கப் பணம் - தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு

கேள்வி கேட்காமல் இருக்கப் பணம் - தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு

தமக்கு சாதகமான முடிவுகளுக்குப் பணம் - அமைச்சர்களுக்கு, கட்சிகளுக்கு

எதிரிகளுக்கு பாதகமான முடிவுகளுக்குப் பணம் - அமைச்சர்களுக்கு, கட்சிகளுக்கு


இன்றைய சூழலில் அரசியல் என்பது மக்கள் சேவை என்பது போய், பணம் சம்பாதிக்கும் அல்லது கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் ஒரு தொழில் என்ற நிலை வந்துவிட்டது. இதுவே நம் ஜனநாயகத்துக்கு விதிக்கப் பட்ட சாபக்கேடு.

யார் ஆண்டாலும் பணம், பணம், பணம்.....

நம் தேசத்தின் பணப்புழக்கம், நம் ஜனநாயகத்தைச் சுற்றியே இருக்கிறது. அதனால்தான் இன்று நல்லவர்கள் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள்.

இருக்கும் சில நல்லவர்களும் துரத்தி அடிக்கப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட நம் ஜனநாயகத்தை இனி பணநாயகம் என்றே அழைப்போம். இந்தப் பண வெள்ளத்தில் மக்கள் நலன் என்ற வீடு அடித்துச் செல்லப்பட்டுவிட்டதை நேர்மையாளர்கள் வேதனையோடு கவனிக்கிறார்கள்.


கடவுளே!!! இந்த நிலை மாறி அரசியல் என்பது மக்கள் சேவை என்ற உணர்வு உள்ளவர்கள் நம் பிரதிநிதிகளாகி, பணநாயகம் ஒழிக்கப்பட்டு, ஜனநாயகம் காப்பாற்றப் பட நீங்கள்தான் அருள் செய்யணும்.

ஓம் நம சிவாய... சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி....

0 comments: