Showing posts with label ஆத்மா. Show all posts
Showing posts with label ஆத்மா. Show all posts

Tuesday, February 14, 2012

நம் சுய ஆத்ம தரிசனம்...

நம் சுயத்தை தேடி நமக்குள் நாம் பயணிக்கும்போது நமக்கு அதிர்ச்சி தரும் பல விசயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நம் சுயம் என்பது நம் நடத்தைதான். அது உண்மையானதாக இருக்கிறதா அல்லது போலியாக இருக்கிறதா என உணரவேண்டிய தருணம்தான் நம் ஆத்ம/சுய‌ தரிசனம்.

உண்மையில் நாம் ஒருவராக இருந்தாலும் பலவிதமான சமூக‌ செயல்பாடுகளை செய்யவேண்டிய‌வர்களாக இருக்கிறோம். ஒரு தாய்/தந்தைக்கு மகனாக/மகளாக‌, ஒரு மனைவிக்கு கணவனாக அல்லது கணவனுக்கு மனைவியாக, நம் குழந்தைகளுக்கு தாய்/தகப்பனாக, நண்பர்களுக்கு நண்பராக, சுற்றத்தார்களுக்கு ஒரு சக சுற்றத்தாராக இப்படி பல விதங்களில்.

இந்த சமூக சூழல்களில் நாம் சந்திக்கும் சில அசாதாரணமான சந்தர்ப்பங்களில் நம் அசல் சுயம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என நமக்கு சில‌ குறிப்புகள் கிடைக்கும். அந்த சில சந்தர்ப்பங்கள் :

* நமக்கு பிடிக்காதவர்கள் முன் நம் தேவைகளுக்காக கையேந்தி நிற்கும் நிலையில்

* நமக்கு பிடிக்காதவர்கள் நம் முன் அவர்கள் தேவைக்காக கையேந்தி நிற்கும் நிலையில்

* நமக்கு பிரியமானவர்களுக்கு நாம் உதவ முடிந்து உதவாமல் இருக்கும் பொழுது

* நமக்கு பிரியமானவர்களுக்கு நாம் உதவ நினைத்தும் முடியாமல் போகும்போது

* நமக்கு பிரச்சினையின் போது உதவாதவர்களுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்போது

* நமக்கு பிரச்சினையின் போது உதவியவர்களுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்போது நம் உதவ முடியாமல் போகும்போது

இப்படி இன்னும் பல அசாதாரண சூழல்களில் நம் மனதில் ஏற்படும் சிந்தனையின் செரிவுகள், நம்மை பண்படுத்தவோ அல்லது பாழ்படுத்தவோ செய்யும். அது நம் உண்மையான சுயத்தின் தரிசனமாகவும் பல நேரங்களில் அமைவதுண்டு.

நம் சுயத்தின் பிரச்சினை எங்கு இருக்கிறது என நாம் காணும் சில அபூர்வ சந்தர்ப்பங்கள் இவை. அவற்றை நாம் சற்று நிதானமாக அணுகி சிறப்பாக அந்த சூழலைக் கையாண்டால் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி அளவிட முடியாதது.

ஆனால் பெரும்பாலும் நமக்கு இருக்கும் அப்போதைய மனநிலை சுய ஆத்ம ஆராய்ச்சியைவிட சுய ஆதாய ஆராய்ச்சியிலேதான் கவனம் செலுத்தும். இந்த இயல்பை விடுத்து வெளியேறும் ஆத்ம பலம் இருப்பவர்கள் உண்மையிலேயே பெரியவர்கள்தான்.

கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் எங்க எல்லோருக்கும் இப்படிப்பட்ட ஆத்ம சுய சோதனைகளை செம்மையாக கடக்க அருள் செய்யுங்க..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்! சரணம்!!