Showing posts with label உணர்வுகள். Show all posts
Showing posts with label உணர்வுகள். Show all posts

Thursday, March 1, 2012

கடலளவு அன்பு...

நம் ஆழ்மனதில் கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற பல எதிர்மறை உணர்வுகள் ஆழமாக படிந்து கிடக்கிறது.

இவற்றை தூண்ட வெளியிலிருந்து வரும் ஒரு எதிர்மறை சொல்லோ அல்லது நமக்குப் பிடிக்காத சிறிய செயலோ போதுமானதாக இருக்கிறது. உடனடியாக இந்த உணர்வுகள் மின் அலைகளாக நம் உடல் முழுதும் பரவ ஆரம்பித்துவிடுகிறது.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, நாம் இந்த சந்தர்ப்பத்தில் செய்யும் எதிர்வினைகளைத்தான். இநத உணர்வுகளுக்கு உயிர் கொடுப்பது இந்த எதிர்வினைகள்தான்.

இதுதான் நம் உறவுகளைப் பேணுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நம் வாழ்வில் பலவித மனிதர்களை பலவித சந்தர்ப்பங்களில் சந்திக்கிறோம். அவர்களுடனான நமது தகவல் பரிமாற்றங்களின் போது ஏற்படும் சில தவறான புரிதல்களால் நாம் செய்யும் எதிர்மறையான உணர்வு வெளிப்பாடுகள் நமக்கு பலவித இழப்புகளை ஏற்படுத்தி விடும். இது நமது உறவுகளில் மட்டுமல்ல; அலுவலக நிமித்தங்களிலும், தொழில் நிமித்தங்களிலும் மிகவும் முக்கியமானதுகூட‌.

நமக்கு சமமானநிலையில் இருக்கும் எதிரியிடமோ அல்லது நண்பருடனோ அல்லது சக ஊழியருடனோ இப்படிப்பட்ட எதிர்வினைகளால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் இது தவறாவனவர்கள் / நமக்கு சமமில்லாதவர்கள் முன்னிலையில், ஒரு தவறான சூழலில் வெளிப்படும்போது பிரளயமே எற்படுமளவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்த வல்லது.

ஒருவர் எவ்வளவுதான் நம் எதிர்மறை உணர்வுகளைத் தூண்டினாலும் ஒரு நேர்மறையான‌ எதிர்வினை செய்வது ஒரு சாமானிய செயல் அல்ல. ஆனால் இதை கற்றுக் கொள்ளவேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றுதான் நான் நினைக்கிறேன்.

இதை எப்படிக் கற்றுக் கொள்வது? நல்ல கேள்விதான்.

இதை கற்றுக் கொள்ளும் முன் நமக்கு ஒரு முன் தகுதி தேவைப்படுகிறது. அது நம் மனதை அன்பால் நிறைப்பது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பு நம் மனதில் நிறைத்துக் கொள்ளவேண்டும். கடலளவு, அந்த ஆகாயம் அளவுக்கு.

ஒரு குடம் நீரில் ஒரு துளி விசம் விழுந்தால் அந்த ஒரு குடம் நீரும் விசமாகிப்போகும்.

ஆனால் அதே ஒரு துளி விசம் கடலில் விழுந்தால்??? கடல் கடலாகவே இருக்கும். விசம் அதில் கரைந்துபோகும்.

இதுதான் சூட்சுமம். நம் மனம் அன்பால் நிறைந்திருக்கும்போது எதிரில் வரும் எதிர்மறை சொல்லாலோ செயலாலோ நம் மனம் எதிர்மறை உணர்வுகளை வெளியிடுவது குறைந்துபோகும். இன்னும் அன்பால் நம் மனம் நிறையும்போது மறைந்தே போகும்.

அன்பால் மனதை நிறைப்போம்... உலகை வெல்வோம்...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி...