Showing posts with label எதிர்கட்சி. Show all posts
Showing posts with label எதிர்கட்சி. Show all posts

Tuesday, June 7, 2011

எங்கே எதிர் கட்சிகள் ????

இப்போதெல்லாம் தொடர்ந்து யாராவது ஊழல், கருப்பு பண விவகாரத்தை கையில் எடுத்து போராட்டம், உண்ணாவிரதம், சத்யாகிரகம் என்று அமர்க்களப்படுத்துகின்றனர். 

ஒரு அரசியல் இயக்கமாக சமூக ஆர்வலர்களான இவர்கள் மாற முடியாது என்பது நம் அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.  இருந்தாலும் ஒரு ஒப்புக்கு இவர்களை அனுசரித்து நடப்பதுபோல இப்போதைக்கு பாசாங்கு செய்கிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரும் நாங்கள் அரசியல் செய்யவில்லை என்று நூல் பிடித்தாற்போல் சொல்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் செய்யாமல் இதை எல்லாம் சரி செய்ய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்பதே ஒரு நேர்மையான பதிலாக இருக்கும்.

சமீபத்தில் பாபா ராம்தேவ் இதில் இறங்கி மாட்டிக் கொண்டார். பாபா அரசியல் பேசப்போவது முன் கூட்டியே தெரியாதது போல நம் அரசு நடந்து கொள்வது விந்தையிலும் விந்தை.  பெரிய ஆச்சரியம் இதில் என்னவென்றால் நம் அமைச்சர்கள் “யோகா செய்பவர்கள் யோகா மட்டுமே செய்யவேண்டும். அரசியல் பேசக்கூடாது” என்று எச்சரிக்கிறார்கள். 
இதில் ஒரு சவுகரியம்.. ஒரு அரசியல்வாதி ஊழல், கருப்புப் பணம் பற்றி கேள்விகேட்கும் போது “நீ மட்டும் என்ன யோக்கியமா??” என்று திருப்பி கேட்டால் அந்த போராட்டம் அத்தோடு ஒழிந்தது... அன்னா, பாபா, கிரண்பேடி, அரவிந்த் கேஜ்ரிவால் இவர்களிடம் இந்த கேள்வியை சத்தம்போட்டு கேட்க முடியாது. (இருந்தாலும் முணுமுணுத்தபடி கேட்கிறார்கள்) இந்த சவுகரியத்துக்காகவே அமைச்சர்கள் அரசியல் வாதிகளை மட்டுமே அரசியல் பேச அழைக்கிறார்களோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

அப்படியானால் அரசியல்வாதிகள் மட்டும்தான் இதை தட்டிக் கேட்க முடியுமா? அவர்களுக்கு மட்டுமே இந்த தகுதி இருப்பதாக அமைச்சர் பெருமக்கள் கருதுகிறார்களா?? வோட்டுப் போட்ட ஒரு சாமானியனுக்கு நம் தேசம் இப்படி இருக்கவேண்டும் அல்லது இருக்கக் கூடாது என்று கருத்துக் கூறக் கூட இந்த சுதந்திர நாட்டில் உரிமை இல்லையா??

அரசியலில் இருக்கும் நம் எதிர் கட்சிகள் ஊழல் பற்றியோ, கருப்பு பணம் பற்றியோ உரத்து குரல் கொடுக்க ஏன் தயங்குகின்றன??? இவர்களுக்கும் அதில் பங்கு இருக்கிறதா??  அரசியலில் இறங்கினாலே ஊழல் செய்து கருப்புபணம் சேர்க்கிறார்களா? இதற்காக ஏன் இவர்கள் மக்களை திரட்டி போராட்டம் நடத்த முடியவில்லை?? மக்களுக்கு எதிர்கட்சிகளின் மேல் நம்பிக்கை இல்லையா??

நிறைய கேள்விகள் எழுகின்றன... பதில் தான் சரியாக தெரியவில்லை.  நம் நாட்டின் இப்போதய சாபக்கேடு சரியான எதிர்கட்சிகள் இல்லாததே... தட்டிக் கேட்க வேண்டிய ஊடகங்களும் பெரும்பாலான நேரங்களில் ஆளும் கட்சிகளுக்கு அனுசரித்து நடந்து கொள்கின்றன. இதில் இருக்கும் சில விதி விலக்குகளால்தான் இந்த அளவுக்காவது நமக்கு ஊழல், கருப்பு பணம் பற்றி தெரிய வருகிறது. இன்னும் எவ்வளவு இருக்கிறதோ அந்த கடவுளுக்குதான் வெளிச்சம்.

இப்பொழுது உடனடியாக நடக்கவேண்டியது :

1) அன்னா ஹசாரே, கிரண்பேடி, பிரசாந்த் பூசன், சாந்தி பூசன், அப்துல் கலாம், அரவிந்த் கேஜ்ரிவால், பாபா ராம்தேவ், மனித நேய ஆர்வலர்கள் -  இவர்கள் இணைந்து உடனடியாக ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும்.

2) நேர்மையாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து இவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

3) ஒரு புதிய பொறுப்புள்ள எதிர் கட்சியாகவாவது அவர்கள் உருவெடுக்க வேண்டும்.

நடக்குமா??? காலமும் கடவுளும்தான் பதில் சொல்லணும்...
ஆண்டவா.... நல்ல பொறுப்பான எதிர்கட்சி அமைந்து அரசாங்கத்தின் செயல்பாடுகள் செம்மையாக நீங்கதான் அருள் செய்யணும்...

சதுரகிரியாரே போற்றி.. சுந்தர மஹாலிங்கமே சரணம்...