Showing posts with label ஐம்புலன்கள். Show all posts
Showing posts with label ஐம்புலன்கள். Show all posts

Thursday, September 29, 2011

புலனடக்கம் - எது???

உண்மையான புலனடக்கம் என்பது என்ன?? புலன்களை அடக்கினால்தான் ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடியுமா?? 


உண்மையான புலனடக்கம் என்பது என்ன???

புலனடக்கம் என்பது ஐம்புலன்களாலான சுகங்களை அளவுடனோ அல்லது தேவைக்கேற்றவாறோ  நேர்மையான, தர்மமான வழியில் பயன்படுத்துவதே ஆகும்.

காந்தியடிகள் சொன்ன மூன்று குரங்கு தத்துவம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இது புலனடக்கத்துக்கு மிக முக்கிய வழிகாட்டி. கெட்டதைப் பார்க்காதே.. கெட்டதை கேட்காதே... கெட்டதை பேசாதே...இது ஒரு அடிப்படை வாழ்க்கைத் தத்துவம்.

ஆன்மீகத்தில் இதன் வெளிப்பாடு இன்னும் விரிவானது. நம் பார்வை என்பது அக்கினி தத்துவத்தின் வெளிப்பாடு. கேட்டல் என்பது ஆகாச தத்துவத்தின் வெளிப்பாடு. பேச்சு நீர்த்தத்துவத்தின் வெளிப்பாடு. எனவே நாம் பார்க்கும் / கேட்கும் / பேசும் ஒவ்வொரு விசயமும் நமது கர்ம வினைகளுக்கு ஒப்ப நம்முள் ஒரு சிறு பாதிப்பையாவது ஏற்படுத்தும். 

மேலும் ”நுகர்ச்சி”-நாசி (வாயு தத்துவம்) நமது மற்ற புலன்களை தன்னிச்சையாக தூண்ட வல்லதாக இருப்பதால் அதுவும் மிக முக்கிய இடம் வகிக்கிறது. நம் உடல் ரீதியான செயல்பாடுகளும், பாலியல் வெளிப்பாடுகளும் (பூமி தத்துவம்) ஆன்மீக புலனடக்கத்தின் அதி முக்கிய பங்கு வகிக்கின்றன.

தனி மனித ஒழுக்கத்துக்கான ஒரு முக்கிய வழிகாட்டியாகவும் இந்த புலனடக்கம் இருக்கிறது. தனிமனித ஒழுக்கம் என்பது இதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு மனிதனும்  இதை கடைபிடித்தால் நிச்சயம் சமூகம் முன்னேறும்..


புலன்களை அடக்கினால்தான் ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடியுமா??

நிச்சயமாக.. புலன்களை அடக்காமல் அவைகளின் இஷ்டத்துக்கு வாழும்பொழுது நமக்கு ஒரு தற்காலிகமான சந்தோசமே கிடைக்கிறது.. மேலும் அது நம் ஆணவத்தை அளவுக்கு அதிகமாக வெளிப்படுத்தத் தூண்டுகிறது.  நிரந்தர சந்தோசமே நிம்மதிக்கு அடிப்படை.  

தற்காலிகமாக நமக்கு சந்தோசம் தரும் விசயங்களில் பலவும் நம்மை சுற்றி இருப்பவர்களும் நம் உடம்புக்கும் பாதிப்பு ஏற்படுத்த வல்லதாகவே இருக்கிறது.. எனவே புலனடக்கம் என்பது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும் ஒன்றாக இருப்பதால் நிம்மதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் நிச்சயம் கிடைக்கும்.


கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் எல்லோருக்கும் புலனடக்கம் கைவரப் பெற்று நிம்மதியான வாழ்வு அமைய அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தரனே சரணம.... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Wednesday, April 27, 2011

எது காலம்???

காலம் என்பது எங்கே இருக்கிறது? எதை காலம் என்று சொல்கிறோம்? ஓடும் கடிகாரம்தான் காலமா? இது பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது எழுந்த சிந்தனைகள் :

காலம் என்பது நம் ஐம்புலன்களில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புலன்களால் நாம் உணரும் வெளிஉலக உணர்வுகள் நம் மனதில் உள்வாங்கும் போதுதான் காலம் என்பது உணரப்படுகிறது.

மிகச்சரியாக சொன்னால் காலம் என்பது நம் மனதின் உள்வாங்கும் அலைவரிசை (frequency).  இந்த அலைவரிசைக்குத் தகுந்தாற்போல் நம் உடலமைப்பும், புலன்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன.

ஐம்புலன்களும் வேலைசெய்யாமல் இருக்கும்போது, நமக்கு காலத்தின் பாதிப்பு தெரிவதில்லை. உதாரணம் தூங்கும் போது நமக்கு ஏற்படும் அனுபவங்கள். சில சமயம் 10 நிமிடம் தூங்கியதுபோல இருக்கும்.. ஆனால் 4-5 மணிநேரம் தூங்கி இருப்போம்.  இன்னும் சில சமயம் வெகு நேரம் தூங்கியதுபோல இருக்கும். ஆனால் 10-15 நிமிடம் தான் ஆகி இருக்கும்.

சில நேரங்களில் நாம் மனம் ஒருமுகப்பட்டு ஒரு காரியத்தில் மூழ்கி இருக்கும் போதும் இதேபோல நமக்கு காலத்தின் கணக்கு புரிபடுவதில்லை. இது ஒரு வித தியானம் போல. தியானம் செய்யும் போதும் சில நேரங்களில் இந்த அனுபவம் ஏற்படும்.

எனவே காலம் என்பது நம் மனதால் உணரப்படும் ஒன்று. எனவே மனதைக் கட்டுப்படுத்தினால் காலம் கட்டுக்குள் இருக்கும்.


இந்த சிந்தனையின் விளைவாக வந்த சில விதண்டாவாத கேள்விகள் :

1) நம் மனதின் காலமும், பிற உயிரினங்களின் காலமும் வேறு வேறாக இருக்குமா?

2) விலங்குகள், பறவைகள், ஊர்வன, தாவரங்கள், நீர்வாழ்  உயிரினங்கள் இவற்றின் காலக் கணக்கு எப்படி இருக்கும்?

3)  நம் மனிதனின் காலத்தின் படி நாம் பயணம் செய்யும் வேகம் நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படியானால் நாம் வேறு ஒரு உயிரினத்தின் கால நிர்ணயத்தின் படி மனிதனின் மனோவேகத்திலும் பயணிக்க முடியுமா??

4) எல்லா மனிதனுக்கும் ஒரே மாதிரி இந்த அலைவரிசை இப்போது இருக்கிறது. ஏதாவது சில மூலிகைகள், வேதிப் பொருட்கள் இந்த அலைவரிசையை மாற்றும் வல்லமை இருக்குமோ???

5) நாம் இருக்கும் பூமியின் ஈர்ப்பு விசையின் விளைவு இந்த காலத்தில் எவ்வளவு தூரம் இருக்கிறது??? இதே நாம் வேறு வித ஈர்ப்பு உள்ள கிரகங்களில் காலம் என்பது மாறுபடுமா? அது நம் மனதின் கால அலைவரிசையை பாதிக்குமா???

6) உயிரினங்களின் சராசரி வாழ்நாளுக்கும் இந்த கால அலைவரிசைக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?

7) நம் உடல் வயதாவதற்கும், நம் மனம் காலத்தை உணர்வதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா???


இந்த கேள்விகளுக்கு பதில் இன்னும் புரியவில்லை.  இந்த காலம்தான் இதுக்கும் பதில் சொல்லணும்.

கடவுளே மஹாலிங்கம் இந்த காலத்தைப்பற்றி இன்னும் தெளிவாப் புரிய நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா!!!