Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Monday, February 13, 2012

வாழ்க்கைத் தேடுதல்...

நம் வாழ்வில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைத்தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

பிறந்ததும் தாயைத் தேடுகிறோம்
வளரும்போது அறிவைத் தேடுகிறோம்
இளைஞனானதும் காதலைத் தேடுகிறோம்
நடு வயதில் பணத்தைத் தேடுகிறோம்
முதுமையில் பாசத்தை / அரவணைப்பைத் தேடுகிறோம்

தேடுதல் என்பது வாழ்வின் அங்கமாகி விட்டது. நமது எந்தத் தேடுதலும் முடிவடைவதில்லை என்பதே நிஜம். இதை நான் தேடி முடித்து விட்டேன் என யாராலும் முழு மனதுடன் சொல்ல முடிவதில்லை.

தாயைத் தேடுவதன் தொடர்ச்சியே காதலியை/மனைவியைத் தேடுதல்...
பணம் தேடுதல் நிறுத்தப்படுவதே இல்லை..
அறிவுத் தேடல் என்பது முடிவில்லாதது...
பாசத்தை எவ்வளவு தேடினாலும் உண்மையான பாசம் அதுதானா என்ற பரிதவிப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறதே...

இவ்வாறு மனிதன் பல விசயங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் எதிலும் முழுமை அடைய முடியாதவனாகவே இருக்கிறான்.

ஞானிகளும் யோகிகளும் சொல்லும் தேடுதல் வேறு விதமானதாக இருக்கிறது. அவர்கள் நம்மையே தேடச் சொல்கிறார்கள். இந்த தேடலின் முடிவு நம் எல்லாத் தேடல்களின் முடிவு எனவும் கூறுகிறார்கள். நம்மை அறிந்தால் நாம் அனைத்ததையும் அறிந்தவர்களாகிறோம் என்கிறார்கள்.

இதற்கு பக்தி, யோகா, தியானம், கர்மயோகம், மானுடசேவை  என பல வழிகளை சொல்கிறார்கள். "நம்மை அறிதல்" என்பது இந்த வழிகளின் மூலம் சாத்தியமே என்றும் உரைக்கிறார்கள்.

எந்த ஒரு மனிதனும் முழுமை பெற்றால்தான் வாழ்வில் ஒரு நிலைத்தன்மை ஏற்படும். அவ்வாறு முழுமை பெற இந்த ஆத்ம சாதகங்கங்கள் மிகவும் அவசியம்.

இதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. இருந்தால் இந்த தேடுதல் பயணம் சுலபமாக இருக்கும். அவ்வளவே..

கடவுளே மஹாலிங்கம்.. உங்க கடாட்சத்தினால் எல்லோருக்கும் இந்த "தன்னை அறிதல்" என்கின்ற விசயம் விரைவில் கைகூட அருள் செய்யுங்க..

சதுரகிரி சுந்தரனே போற்றி!! போற்றி!!

Tuesday, November 29, 2011

வாழ்க்கையும் கனவுகளும்...

கனவுகள்.. மூன்று வகை - முதல்வகை இது ஒவ்வொருவருக்கும் இருக்கும் லட்சிய கனவு.. இரண்டாவது வகை நாம் தூங்கும்போது காண்பது.. மூன்றாம் வகை, நம் கற்பனையில் கண்ணை விழித்துக்கொண்டே ஆசைப்படுவது.

லட்சிய கனவு :

அய்யா திரு அப்துல்கலாம் அவர்கள் நம் தேசத்து இளைஞர்களை காணச் சொன்னதுதான் இந்த லட்சிய கனவு. நம் வாழ்வின் லட்சியங்கள் தெளிவாக இருந்தால்தான் வாழ்வின் போக்கும் அது நோக்கி தெளிவாக நகரும்.

நாம் எதுவாக ஆகவேண்டும் என ஆழமாக சிந்திக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுகிறோம் என்பதால் இந்த லட்சியகனவு ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியத்துவம் பெறுகிறது. 

இந்த கனவுகள் ஒவ்வொருவரையும் அதை அடைய தூண்டி செயல்பட வைக்கும். செயல்பட ஆரம்பிப்பதுதான் லட்சியங்களை அடைய முதல்படி.

துக்கத்தில் காணும் கனவு :

இது நம் மூளை நம் உடல் ஓய்வு எடுக்கும் போது தூக்கத்தில் நமக்கு காண்பிக்கும் ஒரு காட்சி. பல நேரங்களில் நம் உடலில் ஏற்படும் அசதிகளை வெளியேற்ற நம் மூளையில் ஏற்படும் சில ரசாயன நிகழ்வுகளின் விளைவே இந்த கனவு.

சிலருக்கு கனவுகள் ஞாபகத்தில் இருக்கும் பலருக்கு ஞாபகம் இருப்பதில்லை. எல்லோரும் தூக்கத்தில் கனவு காண்கிறார்கள். ஆனால் நாம் தூக்கத்தினுள் சொல்ல முற்படும்போதோ அல்லது தூக்கத்திலிருந்து வெளியேறும் நேரத்திலோ வரும் கனவுகள்தான் பெரும்பாலும் நம் ஞாபகத்தில் இருக்கும் என கூறுகிறார்கள். 

சிலருக்கு கனவுகளில் எதிர்காலத்தில் நடக்கப் போவது பற்றிய விசயங்கள் வருவதுண்டு. சிலருக்கு கனவுகள் வழிகாட்டியாக செயல்படுவதும் உண்டு. நம் மூளையின் சில அற்புதங்களில் இதுவும் ஒன்று. 

கனவுகளுக்கு பலன்கள் சொல்கிறார்கள். எவ்வளவு தூரம் அவற்றை நம்ப முடியும் என்பது சர்ச்சைக்குரியதுதான். சும்மா ஒரு சுவாராசியத்துக்காக அது பற்றியும் நேரம் கிடைக்கும்போது படித்து பார்த்துக்கொள்ளலாம்.

சிலர் கனவுகளைப் பற்றி பயம் கொண்டிருப்பார்கள். அந்த பயமே அவர்களை பல நேரங்களில் பிரச்சினைகளில் மாட்டி விடும். எனவே கனவுகளை நினைத்து பயப்படாமல் அதையும் ஒரு சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை.

பகல் கனவு :

அதாவது விழித்திருக்கும்போதே நம் கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு யோசித்துக் கொண்டே இருப்பது. இதனால் நம் உடலிலும் மனதிலும் பலவித மாற்றங்கள் ஏற்படும். இவை பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. பல நேரங்களில் நம் செயல்பாடுகளை தடுத்து நிறுத்தி நம்மை கற்பனை உலகில் முடக்கி விடும்.

உண்மையில் மிகவும் ஆபத்தானது இந்த பகல் கனவு. இதனால் பெரிய பலன் ஏதும் இல்லை. மற்றபடி இது கால விரயமே. இந்த மாதிரி கற்பனையில் மனதை அலைபாய விடாமல் நிதர்சனத்தை நேரில் சந்தித்து வாழ்வை செம்மைப்படுத்திக் கொள்வது அனைவருக்கும் சிறப்பு.


கடவுளே மஹாலிங்கம், எல்லோரும் பகல் கனவு காண்பதை விடுத்து, சிறந்த லட்சியங்களை உருவாக்கி அது நோக்கி பயணம் செய்ய தூக்கத்தில் கூட வழி ஏற்பட அருள் செய்யுங்க..

சதுரகிரியாரே சரணம்.. சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Tuesday, July 19, 2011

முத்தான மூன்று..

திரு சிவ.சி.மா. ஜானகிராமன் அவர்களின் அழைப்பிற்கிணங்க முத்தான மூண்று என்ற தலைப்பில் இந்த சங்கிலிப் பதிவு :

குரு :
மூன்று என்றவுடன் நியூமராலஜியில் குருவைக் குறிக்கும். முதலில் என் குருவை வணங்கி இந்த சங்கிலிக் கண்ணிப் பதிவு நல்ல படியாக வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்...

கடவுள் கடாட்சம் :
அந்த உலகளந்த பெருமாள் மூன்று அடிகளால் இந்த உலகத்தை அளந்து மாபலிச் சக்கரவர்த்தியின் கர்வம் அடக்கி ஆட்கொண்டதாக புராணம் கூறுகிறது.. அந்த மாயவன் இறைவன் நம் அனைவரின் மும்மலங்களான கர்மங்களை அடக்கி ஆட்கொள்வானாக...

குடும்பத் துணை :
இந்துக்களான நம் திருமண வாழ்க்கை தாலியில் மூன்று முடிச்சுடன் தொடங்குகிறது.. அனைவருக்கும் சிறப்பான திருமண வாழ்வு அமைந்து சுபிட்சமாக வாழ ஆண்டவன் அருளட்டும்...

சந்தர்ப்பங்கள் :
நீரில் நீச்சல் தெரியாதவர்கள் விழுந்துவிட்டால் மூன்று முறை அவர்களை நீர் மேலே தூக்கி விடுமாம்.. அதுபோல் நம் வாழ்விலும் இக்கட்டான நிலைகளில் ஆண்டவனும் நம்மை பலமுறை தூக்கி விடுகிறான்.

மகிழ்ச்சி :
அந்த காலத்தில் சினிமாவில் ஹீரோ வில்லனிடம் எப்பவும் மூன்று அடி வாங்கி விட்டுத்தான் திருப்பி அடிக்க ஆரம்பிப்பார். அது என்ன செண்டிமெண்டோ தெரியவில்லை. இப்ப நினைச்சாலும் புரியவில்லை...ஆனா நம்மளால அத விசில் அடிச்சு சந்தோசமா எஞ்ஜாய் பண்ண முடிஞ்சது...


கடவுளே மஹாலிங்கம்,  உலக மக்கள் அனைவருக்கு அருமையான குரு அமைந்து, கடவுள் கடாட்சம் கிடைத்து, சிறந்த குடும்பத் துணை அமைந்து, வாழ்வில் முன்னேற சிறந்த சந்தர்ப்பங்கள் கிடைத்து, மகிழ்ச்சியான, நிறைவான ஒரு வாழ்க்கை ஏற்பட அருள் செய்யுங்க...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்....ஹரஹர மஹாதேவா போற்றி...

இந்த சங்கிலித் தொடரைத்தொடர திரு ஷண்முகவேல் அவர்களை அழைக்கிறேன்... http://counselforany.blogspot.com/