ஒவ்வொருவர் வாழ்க்கைலயும் கடவுள் அவர் திருவிளையாடல நடத்திக்கிட்டுத்தான் இருக்கார். அவர் என் வாழ்க்கைல நடத்திய திருவிளையாடல இங்க பகிர்ந்துக்கிரேன்.
---------------------------------------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு முந்தய பதிவு இணைப்பு :
ஒரு செமி நாத்திகனா ஆண்டவனுக்கே சவால் விட்ட திமிருக்கு அந்த ஆண்டவன் சரியான பதில் சொன்னார்..
நான் கல்லூரி முடிக்கும் வரை எந்த பிரச்சினையும் இல்லை... படிப்பு முடிந்து ஹாஸ்டல் அறையை காலி செய்து வீட்டுக்கு வந்த ஒரு வாரத்தில், வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபரான எனது தகப்பனார் காலமானார்..
கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டம் என்பது எப்படி இருக்கும் என்ற பாடம் கற்க ஆரம்பித்தேன்... வேலையும் இல்லை... இரண்டு மாதங்கள் தீவிரமாக வேலை தேடியும் எந்த பலனும் இல்லை. எங்கள் குடும்பத்துக்கு தெரிந்த பல உறவினர்கள், குடும்ப நண்பர்கள் யாரும் உதவவும் இல்லை. இதில் சில நாள் சென்னை, மும்பை என்று வேலை தேடி அலைந்து விட்டும் வந்தேன்.. எதுவும் பலனளிக்க வில்லை.
சில நாட்கள் சாப்பாட்டுக்கு கூட வழி இல்லாத நிலை வந்து விட்டது...
எனது பல நண்பர்கள் சாப்பாட்டு கஷ்டம் பற்றி பேசும் போது புரியாத பல விஷயங்கள் அப்போது புரிந்தது. அவர்கள் அவ்வளவு கஷ்டத்திலும் போராடி வாழ்ந்த வாழ்வு பிரமிப்பூட்டியது. ஆரம்பத்திலிருந்து கஷ்டத்தில் வாழ்வதற்கும், வாழ்ந்து கெடுவதற்கும் இருக்கும் வித்தியாசம்தான் இதுவோ என உணர்ந்தேன். அதிலும் அப்போது எனக்கு சுயபச்சாதாபம் அதிகம்.
இனியும் தாங்கும் சக்தி இல்லை என்ற மனநிலை வந்தவுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என்றும் துணிந்து விட்டேன்.
அவ்வாறு துணிந்த அன்று இரவு, ஒரு கனவு... கனவில் ஒரு கோவில்... அதில் கடவுள்... உருவம் தெரியவில்லை... ஆனால் அது கோவில் என்பதும், அது கடவுள் என்பதும் புரிகிறது.
திடீரென்று விழிப்பு வந்துவிட்டது. இத்தனைக்கும் அன்றுவரை கடவுளைப் பற்றியோ கோவிலைப்பற்றியோ கொஞ்சமும் நான் சிந்திக்கவில்லை. சற்று யோசிக்க தொடங்கினேன்... பழைய நினைவுகள் வந்து அலை மோதியது...
கடவுளிடம் விட்ட சவால் நினைவுக்கு வந்தது... அவர் நேரில் வரவில்லை.. கனவில் வந்து விட்டார்.. இருந்தாலும் ஒருமுறை அவரை சென்று கோவிலில் தரிசித்துவிட்டு பிறகு தற்கொலை எண்ணத்தை செயல்படுத்தலாம் என்று எண்ணி மறு நாள் எங்கள் ஊரில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்றேன்.
அன்று கார்த்திகை மாதம் 2ம் நாள். முருகன் கோவிலில் உற்சவர் ஊர்வலம் ஆரம்பிக்க இருந்தது.. திடீரென்று ஏதோ ஒரு உள்-உணர்வு.. நான் பர பர வென்று சென்று அந்த உற்சவரை சுமப்பவர்களுடன் இணைந்து அவரை தூக்கி சுமந்து கொண்டு கோவிலை வலம் வர ஆரம்பித்துவிட்டேன். என்னை அறியாமலே கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.. ஒன்றும் புரியவில்லை... சில நிமிடங்களில் தோள் வலி எடுக்க ஆரம்பிக்கும் போது, யாரோ ஒருவர் வந்து அங்கு வந்து என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டு என்னை விடுவித்தார். உற்சவம் தொடர்ந்தது.. நான் கோவிலிலே அமர்ந்துவிட்டேன். முருகன் முன் அமர்ந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. அவர் ஏதோ சொல்வது போல இருந்தது...
மனதுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஏதோ ஒரு நம்பிக்கை கீற்று வர ஆரம்பித்தது. தற்கொலை எண்ணம் மங்கியது. மனதுக்குள் ஒரு சங்கல்பமாக இனி தினமும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தேன். அதன்படி செயல்பட ஆரம்பித்தேன்.
சதுரகிரி சுந்த மஹாலிங்கத்துக்கு அரோஹரா...
தொடரும்....