Showing posts with label சிவில் சமூகம். Show all posts
Showing posts with label சிவில் சமூகம். Show all posts

Monday, April 11, 2011

சிவில் சமூகத்தின் பொறுப்பு...

வெற்றிகரமாக முடிந்த திரு அன்னா ஹசாரே யின் உண்ணாவிரதத்திற்குப் பின், நம் சிவில் சமூகம் மிக ஜாக்கிரதையாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது..

இப்போது ஒரு சமரசத்திற்கு நம் அரசியல்வாதிகள் ஒப்புக்கொண்டாலும் அவர்களின் வழக்கமான ஆயுதமான பிரித்தாளும் சூட்சுமத்தை நமது சிவில் சமூகத்திடம் ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதன் முதல் படியை திரு ராம் தேவின் ஒரு சிறு கருத்தை ஊதிப் பெரிதாக்குவதில் தொடங்கி இருக்கிறார்கள்.

மேலும் யார் சிவில் சமூகம் என்பதைப்பற்றிய ஒரு விவாதத்தை தமது ஆதரவு பெற்ற ஊடகங்கள் மத்தியில் உலாவ விட்டிருக்கிறார்கள்.

இப்போது மேலும் சில அமைப்புகள் இதில் குளிர் காய ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கனவே உண்மையான ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த பழைய அமைப்புகளுக்கு இந்தப் போராட்டத்தால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இவர்களுக்காக இதுவரை சிறு துரும்பைக்கூட அசைக்காத நமது சிவில் சமூகம் திரு அன்னா ஹசாரே யின் உண்ணாவிரதத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு தந்ததை இவர்களால் சகிக்க முடியவில்லை. இதன் உண்மையான காரணங்களை ஆராய்வதை விட்டுவிட்டு இவர்கள் இப்போது நம் அரசியல் வாதிகளின் சதிக்கு தம்மை அறியாமல் தூபம் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் விரும்புவது எல்லாம் கீழ்க்கண்டவற்றைதான் :

1) சிவில் சமூகம் எப்போதும் ஒரு நெல்லிக்காய் மூட்டைபோல ஒற்றுமை இல்லாமல் இருக்கவேண்டும்.

2) யாராவது அவர்களை ஒன்றுபடுத்துவதுபோல தோன்றினால் மக்கள் ஆதரவை கிரிக்கெட் சினிமா போன்ற பொழுதுபோக்கு விசயங்களில் திசை திருப்பிவிட வேண்டும்.

3) புதிதாக வரும் கிளர்ச்சிகளை ஏற்கனவே இருக்கக் கூடிய அமைப்புகளை முன் வைத்து ஒழித்துக் கட்டுவது.

4)  இல்லாவிட்டால் அவர்களுக்குள் ஒரு அதிகாரப் போட்டியை ஏறபடுத்தி, அவர்களின் ஒற்றுமையைக் குலைப்பது அல்லது ஒற்றுமை குலைந்ததுபோன்ற ஒரு மாயையை ஏற்படுத்துவது.

5) மக்களை கொஞ்சம் கொஞ்சமாக இந்த போராட்ட குணத்திலிருந்து கிரிக்கெட் சினிமா பொழுதுபோக்குகளுக்கு திருப்புவது.

இந்த பொறிகளில் ஏற்கனவே சில நடைபெறுவதை கண்கூடாகக் காண முடிகிறது.

நமது சிவில் சமூகம் இதைத் தாண்டி இந்த போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான பொறுப்பு அதன் தலைமைக்கும் நமக்கும் இருக்கிறது.

எனவே வேற்றுமையை மறப்போம், மக்களுக்காக ஒன்று படுவோம். சமூகப் போராட்ட நெருப்பைத் தக்க வைப்போம்.

இதுக்கு சதுரகிரியார்தான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!