Showing posts with label அன்னா ஹசாரே. Show all posts
Showing posts with label அன்னா ஹசாரே. Show all posts

Monday, August 29, 2011

திரு அன்னா ஹசாரே போராட்டத்தால் விளைந்த நன்மைகள்...

ஒரு வழியாக திரு அன்னா ஹசாரே தன் போராட்டத்தை முடித்துக் கொண்டுவிட்டார். இந்த போராட்டத்தினால் ஊழல் ஒழிப்புக்கு ஒரு புது சட்டம் வரப்போகின்றது. இந்த விசயத்தைத் தவிர இதனால் மேலும் சில நன்மைகளும் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது... அது பற்றி....


1) முதலில் ஜனநாயகத்தை விட்டு, ஓட்டுகூட போடாமல் விலகி இருந்த இளைய சமுதாயத்தினரின் ஒரு பகுதியினரை வீதிக்கு வரவழைத்தது...

2) ஜனநாயகத்தில் இனி இளைய சமூகமும் ஓரளவுக்கு பங்குபெறும் என்ற நம்பிக்கையை என்போன்ற சில சமூக கவலை இருப்போரிடம் ஏற்படுத்தியது.

3) நம் குரலுக்கும் நம் ஜனநாயகத்தில் இனி மதிப்பிருக்கும் என்ற ஒரு கருத்தை இளைய தலைமுறைக்கு கொடுத்தது...

4) போராட்டம் என்றால் ஏதோ பெரிய தியாகம் என்ற மனப்பான்மையை மாற்றி, ஓய்வு நேரத்தில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி ஊர்வலம் போனாலே நம் எதிர்ப்பை காட்டும் போராட்டமாக்கலாம் என் ஒரு புது வழியைக் காட்டியது.

5) ஒரு கார்பரேட் ஈவண்ட் போன்ற போராட்டங்களும் நடத்த முடியும் என காட்டியது..

6) பொது மக்களின் குரலையும் பாராளுமன்றம் கேட்டாக வேண்டும் என்ற ஒரு முன்னுதாரணம் ஏற்படுத்தியது(?????)

7)  பாராளுமன்றத்துக்கு ஊழலை ஒழிக்கும் உத்தேசமே இல்லை என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியது..

8) எனவே நம் போராட்டம் இன்னும் பெரிதாக  இன்னும் உத்வேகத்துடன் இருக்கவேண்டும் என்ற சிந்தனையை ஏற்படுத்தியது.



அந்த மஹாலிங்கம்தான் இந்த போராட்டங்களுக்கு ஒரு உத்வேகம் கொடுத்து இன்னும் பெரிய அளவில் மாற்றங்கள் வர அருள் செய்யணும்...

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா....

Tuesday, August 16, 2011

அரசாங்கத்திடம் இருந்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி..

இன்று (16 ஆகஸ்ட் 2011) காலை திரு அன்னா ஹசாரே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் திரு கிரண்பேடி, திரு அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் நம் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அனுப்பும் மறைமுக செய்தியை இப்போது எழுத்தில் வடிக்கிறேன். இது நாட்டு நடப்பை உற்று கவனிக்கும் ஒரு சாமானியனின் பார்வையே :

என் அன்பான குடி மக்களே, இந்த ஜனநாயகம் என்பது வோட்டுப் போட்ட வுடன் உங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாது. ஒரு ஓட்டு போட்டவுடன் உங்கள் ஜனநாயக கடமை முற்றிலும் முடிந்து விட்டது. அதன் பிறகு உங்களுக்கு அரசாங்கமாகிய எங்களை கேள்விகேட்க எந்த அதிகாரமும் இல்லை.

எங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதுவே சரி. அது உங்களை குழி தோண்டிப் புதைப்பதாக இருந்தால்கூட அதை நீங்கள் கேள்வி கேட்க உரிமை அற்றவர்கள். நாங்கள் விஷத்தை அமிர்தம் என்று கூறிக் கொடுத்தால்கூட அதை கேள்வி கேட்காமல் நீங்கள் குடிக்கத்தான் வேண்டும். அது இந்த தேசத்தின் குடிமகனாகிய உங்கள் ஜனநாயக கடமை. இதை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நீங்கள் தீவிரவாதிகள், ஜனநாயக விரோதிகள், நக்சலைட்டுகள.

உங்களுக்காக அரசாங்கத்தின் ஜெயில்கள் காத்திருக்கின்றன. உங்கள் பொருளாதார ஆதாரங்கள் நசுக்கப்படும். நீங்கள் ஊழல்வாதிகளாக விளம்பரப்படுத்தப் படுவீர்கள். உங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும். உங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளும், பாஸ்போர்ட்டும் முடக்கப்படும்.  திடீரென்று நீங்கள் வெளிநாட்டுக்காரராகவும் ஆக்கப்படலாம். நீங்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து எங்களை விட்டு விடுங்கள் என்று பிச்சை எடுக்கவேண்டும். அது வரை நீங்கள் துரத்தப்படுவீர்கள்.

இதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டும் போராட்டங்கள் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களும் நாங்கள் கொடுக்கும் அனைத்து கட்டுப் பாடுகளும் நிறைந்த 100 பக்க பாண்டு பேப்பரில் கையொப்பமிட வேண்டும். அதை கடைபிடிக்கவும் வேண்டும்.

சட்டம் என்ன சொல்லி இருந்தாலும் நாங்கள் சரி என்று நினைப்பதை மட்டுமே செய்வோம். மேலதிக விவரங்களுக்கு நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம். அதன் தீர்ப்பு சில பத்தாண்டுகளில் அல்லது நூற்றாண்டுகளுக்குள் வழங்க ஆவன செய்யப்படும். அதுவரை நீங்கள் எது செய்தாலும் கைது செய்து மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் பின்னும் போராட்டம் நடத்த முன்வரும் தைரிய சாலிகளுக்கு ஒரு முன் எச்சரிக்கை. பின் விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது. அதை முன் கூட்டியே எச்சரிக்கவே இந்த செய்தி...



கடவுளே மஹாலிங்கம். நாட்டு மக்களைப் பற்றியும் சிந்திக்கிற ஒரு அரசாங்கம் அமைய அருள் செய்யுங்க.

சதுரகிரி நாதனே போற்றி!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா !!!!

Friday, April 15, 2011

மக்களை விட்டு முற்றிலும் விலகிய அரசியல்வாதிகள்..

உயர்திரு அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரதம் நடந்த போது லோக்பால் குழுவில் பொதுமக்களின் பிரதிநிதிகள் இடம்பெறவேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஏற்கனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களும் அமைச்சர்களும் அந்தக் குழுவில் இடம்பிடித்துள்ளனர் என்பதே.

அப்படியென்றால் அவர்களெல்லாம் மக்கள் பிரதிநிதி இல்லையா? அப்படி இல்லை என்றால் ஏன்?

இந்த முக்கியமான கேள்வி என் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.. இதற்கு பதில் இது பற்றிய டிவி விவாதங்களில் கிடைத்தது..

இப்போது நம் சமூகம் மூன்று பெரிய பிரிவுகளாக இருக்கிறது. முதல் பிரிவு அரசியல்வாதிகள், இரண்டாம் பிரிவு அரசு அதிகாரிகள், மூன்றாம் பிரிவு பொதுமக்கள்.

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் மக்களை ஆள்வதற்காக இருக்கிறார்கள். அது நல்லாட்சியாக இருக்க வேண்டியதற்கு முக்கிய காரணி ஒருவ்வொருவர் மீதும் இருக்க வேண்டிய நம்பிக்கை. அது இப்போது இல்லாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.


அரசியல்வாதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் பெரும்பாலும் அவர்கள் உண்மையில் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கின்ற காரியங்களை செய்வதில்லை. எனவே அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் அல்ல..

அரசு அதிகாரிகள் மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் இவர்கள் தத்தமது சொந்த ஆதாயங்களுக்காகவும், அரசியல்வாதிகளுக்காவுமே காரியங்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே இவர்களும் மக்களுக்காக யோசிக்கப்போவதில்லை.

இப்போதய பெரும்பாலான அரசியல்வாதிகளும், மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் பொது மக்களைவிட்டு வெகுதொலைவு விலகிவிட்டார்கள். எனவேதான் மக்களுக்கு அவர்கள்மேல் நம்பிக்கை இல்லை.

என்வேதான் நமது பொதுமக்கள் எங்கள் பிரதிநிதியும் சட்டங்கள் உருவாக்குவதில் பங்குபெறவேண்டும் என்ற கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


இது உண்மையில் ஜனநாயகத்தின் அடிநாதத்தைக் கேலிக் கூத்தாக்குவதாக இருக்கிறது. 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகளான அரசியல்வாதிகளைவிட திரு அன்னா ஹசாரேயால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளை மக்கள் நம்புவது நம் ஜனநாயகத்தின் கோர நிஜம்.


இப்போது நாம் கவனமாக இருக்கவேண்டியது கீழ்க்கண்ட விசயங்களில்தான்:

1) எப்படிப்பட்ட சட்டமாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சரியாக இல்லாதபட்சத்தில் அது வீணாகவே போகும். அந்த கதி இந்த ஜன் லோக்பால் சட்டத்துக்கு ஏற்படாமல் இருக்கவேண்டும்.

2) எவ்வளவோ நேர்மையான அமைப்புகளை வெற்றிகரமாக ஆக்கிரமித்த, கெடுத்த நம் கேடுகெட்ட அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட பொதுமக்கள் அமைப்புகளையும் கெடுப்பதற்கு வெகுகாலம் ஆகாது.

இது நம் ஜனநாயகத்தின் இன்னொரு கோர முகம்.

கடவுள்தான் இதுக்கெல்லாம் ஒரு வழி சொல்லணும்.

சதுரகிரி சுந்தரமஹாலிங்கமே சரணம்!!!

Monday, April 11, 2011

சிவில் சமூகத்தின் பொறுப்பு...

வெற்றிகரமாக முடிந்த திரு அன்னா ஹசாரே யின் உண்ணாவிரதத்திற்குப் பின், நம் சிவில் சமூகம் மிக ஜாக்கிரதையாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது..

இப்போது ஒரு சமரசத்திற்கு நம் அரசியல்வாதிகள் ஒப்புக்கொண்டாலும் அவர்களின் வழக்கமான ஆயுதமான பிரித்தாளும் சூட்சுமத்தை நமது சிவில் சமூகத்திடம் ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதன் முதல் படியை திரு ராம் தேவின் ஒரு சிறு கருத்தை ஊதிப் பெரிதாக்குவதில் தொடங்கி இருக்கிறார்கள்.

மேலும் யார் சிவில் சமூகம் என்பதைப்பற்றிய ஒரு விவாதத்தை தமது ஆதரவு பெற்ற ஊடகங்கள் மத்தியில் உலாவ விட்டிருக்கிறார்கள்.

இப்போது மேலும் சில அமைப்புகள் இதில் குளிர் காய ஆரம்பித்திருக்கின்றன. ஏற்கனவே உண்மையான ஜனநாயகத்திற்காகப் போராடிக் கொண்டிருக்கும் இந்த பழைய அமைப்புகளுக்கு இந்தப் போராட்டத்தால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இவர்களுக்காக இதுவரை சிறு துரும்பைக்கூட அசைக்காத நமது சிவில் சமூகம் திரு அன்னா ஹசாரே யின் உண்ணாவிரதத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு தந்ததை இவர்களால் சகிக்க முடியவில்லை. இதன் உண்மையான காரணங்களை ஆராய்வதை விட்டுவிட்டு இவர்கள் இப்போது நம் அரசியல் வாதிகளின் சதிக்கு தம்மை அறியாமல் தூபம் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகள் விரும்புவது எல்லாம் கீழ்க்கண்டவற்றைதான் :

1) சிவில் சமூகம் எப்போதும் ஒரு நெல்லிக்காய் மூட்டைபோல ஒற்றுமை இல்லாமல் இருக்கவேண்டும்.

2) யாராவது அவர்களை ஒன்றுபடுத்துவதுபோல தோன்றினால் மக்கள் ஆதரவை கிரிக்கெட் சினிமா போன்ற பொழுதுபோக்கு விசயங்களில் திசை திருப்பிவிட வேண்டும்.

3) புதிதாக வரும் கிளர்ச்சிகளை ஏற்கனவே இருக்கக் கூடிய அமைப்புகளை முன் வைத்து ஒழித்துக் கட்டுவது.

4)  இல்லாவிட்டால் அவர்களுக்குள் ஒரு அதிகாரப் போட்டியை ஏறபடுத்தி, அவர்களின் ஒற்றுமையைக் குலைப்பது அல்லது ஒற்றுமை குலைந்ததுபோன்ற ஒரு மாயையை ஏற்படுத்துவது.

5) மக்களை கொஞ்சம் கொஞ்சமாக இந்த போராட்ட குணத்திலிருந்து கிரிக்கெட் சினிமா பொழுதுபோக்குகளுக்கு திருப்புவது.

இந்த பொறிகளில் ஏற்கனவே சில நடைபெறுவதை கண்கூடாகக் காண முடிகிறது.

நமது சிவில் சமூகம் இதைத் தாண்டி இந்த போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான பொறுப்பு அதன் தலைமைக்கும் நமக்கும் இருக்கிறது.

எனவே வேற்றுமையை மறப்போம், மக்களுக்காக ஒன்று படுவோம். சமூகப் போராட்ட நெருப்பைத் தக்க வைப்போம்.

இதுக்கு சதுரகிரியார்தான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி!!!

Wednesday, April 6, 2011

உண்ணாவிரதமிருக்கும் உயர்திரு அன்னா ஹசாரே...

உயர்திரு அன்னா ஹசாரே அவர்கள் நேற்றிலிருந்து உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார்.  இதுபற்றி “Times of India" வில் வந்த செய்திகளுக்கான லின்க் கீழே தரப்பட்டுள்ளது.



இவர் யார் என்பது பெரும்பாலோருக்கு தெரிந்திருந்தாலும் அவர் பற்றி ஒரு சிறு அறிமுகம் :

இவர் வயது 72. ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் ஒரு சமூக ஆர்வலர் / போராளி. பல காந்தீய வழிப் போராட்டங்கள் நடத்தி இருக்கிறார்.

இப்போது இவர் எதற்காக இந்த உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார் என்பதுதான் மிக முக்கிய செய்தி.

நம் அரசியல் வாதிகள் ஊழலுக்கு எதிராக சட்டம் இயற்றுவோம், ஊழலுக்கு எதிரான அமைப்புகள் உருவாக்குவோம் என்று கூவிக் கொண்டிருந்தாலும் சுமார் 42 ஆண்டுகளாக அப்படி ஒரு சட்டம் கொண்டுவர முயற்சிதான் செய்து கொண்டிருக்கிறார்கள்.  இன்னும் கொண்டு வர வில்லை.

அதுவும் அவர்களே கூடி முடிவு செய்வார்களாம். பொதுமக்கள் பிரதிநிதிகளோ, சமூக ஆர்வலர்களோ அதில் பங்கேற்கக் கூடாதாம்.

மிக முக்கியமாக அவர்கள் ஏற்படுத்த இருக்கும் அந்த ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு எந்த அதிகாரமும் தரப்படாதாம். அவர்கள் ஊழல்களை விசாரித்து என்ன நடவடிக்கை யார் மீதெல்லாம் எதற்காக எடுக்கலாம் என்று ஆலோசனை சொல்ல மட்டுமே செய்ய வேண்டுமாம்.

இதில் அரசியல்வாதிகளை மட்டுமே விசாரிக்கமுடியும் அரசு உயர் அதிகாரிகளை விசாரிக்க முடியாது.

இப்படிப்பட்ட நிலையில் இப்போது ஏற்படுத்தப்படும் விசாரணைக் கமிசன்களுக்கும் இந்த ஊழலுக்கு எதிரான அமைப்புகளுக்கும் எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.


இதைத் தான் 72 வயது திரு அன்னா ஹசாரே எதிர்த்துப் போராடுகிறார்.  அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள (???) லோக்பால் சட்டத்துக்கு மாற்றாக ஒரு ஜன லோக்பால் சட்ட வரைவு தயாரித்து அரசாங்கத்தில் அனைவருக்கும் அனுப்பி அலுத்து இப்போது சாகும் வரை உண்ணவிரதம் உட்கார்ந்துவிட்டார்.

இவர் தயாரித்துள்ள ஜன லோக்பால் சட்ட வரைவில் கீழ்க்கண்ட அம்சம்கள் சேர்க்கப்பட்டுள்ளன :

1) லோக்பால் அமைப்புக்கு ஒரு போலீசுக்கும், கோர்ட்டுக்கும் இருக்கும்  அதிகாரம் வேண்டும்.

2) நடவடிக்கை எடுப்பதிலிருந்து தண்டனை அமல் படுத்துவது வரை லோக்பால் செயல்பாடு இருக்கும்.

3) இதில் அரசியல் வாதிகளோடு, அனைத்து அரசு உயர் அதிகாரிகளையும் விசாரித்து தண்டனைதர முடியும்.

4) இந்த சட்டம் கொண்டுவர பொதுமக்களின் பிரதிநிதிகளையும் (அரசியல் வாதிகள் அல்ல), சமூக ஆர்வலர்களையும் பங்கேற்க செய்ய வேண்டும்.

5) இந்த சட்டத்தில் பிரதமர் அலுவலகத்தையும் விசாரிக்கும் உரிமை உண்டு.

ஆனால் நம் அரசியல் வாதிகள் வழக்கம்போல் கட்சிபேதமில்லாமல் இதை நடைமுறைப்படுத்த தாமதப்படுத்துவதிலேயே குறியாக இருப்பதால் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

நம் தேசத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு குடிமகனும் இதை ஆதரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திரு அன்னா ஹசாரே அவர்களின் போராட்டம் வெற்றி பெற்று இந்த சட்டம் வர வாழ்த்தி பிரார்த்தனை செய்கிறேன்.


கடவுளே மஹாலிங்கம், அவருக்கு நீங்கதான் துணையா இருந்து இதை நடைமுறைப்படுத்தித் தரணும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோகரா!!!!