Showing posts with label பள்ளி. Show all posts
Showing posts with label பள்ளி. Show all posts

Friday, March 2, 2012

பயமாக இருக்கிறது....

நேற்று என் மகன் பள்ளி விட்டு வந்ததும் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்னு சொன்னான். என்னடான்னு கேட்டா அவன் வகுப்பில் கூட படிக்கும் ஒரு பையன் சக மாணவியை லவ் பண்ணுவதாக சொன்னான்.

சற்று பகீரென்று இருந்தது. சமாளித்துக் கொண்டு இது எப்பிடி உனக்கு தெரியும்னு கேட்டேன். அந்த பையனே அவனிடன் சொன்னதாக சொன்னான். பிறகு அவனிடம் அந்த பையன் ஒரு பேட்பாய் (Bad Boy) , அவனோட சேராதேன்னு சொல்லி சமாளிச்சு டாபிக்க மாத்தினேன்.

இதில் முக்கியமான விசயம் என் பையன் வயது 5, படிப்பது ஒன்னாவது வகுப்பில்.

இந்த வயதில் இந்த குழந்தைகளுக்கு லவ் பண்ணுவது பற்றி தெரிவதும் அதை நடைமுறைப்படுத்த இறங்குவதும் ஒரு பெற்றோராக பயமாக இருக்கிறது.

பிரச்சினை பள்ளிகளில் மட்டும் இருப்பதாக தெரியவில்லை. வீடுகளிலும், நாம் பார்க்கும் டிவி சீரியல்களிலும், பார்க்கும் சினிமாக்களிலும்தான் முக்கியமான பிரச்சினை இருக்கிறது.

பெரியவர்கள் பார்க்கும் அதே சீரியலையும், சினிமாவையும்தான் குழந்தைகளும் பார்க்கிறார்கள். அதை அவர்கள் பக்குவத்துக்கு ஏற்ப புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த இறங்கி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட குழந்தைகள் வளர்ந்தவுடன் எப்படி இருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

என்ன செய்றதுன்னு தெரியல. நம்மாலயும் வீட்டுல டீவி பார்க்காம இருக்க முடியாது. இனிமேல் அந்த பசங்க பார்க்கர படங்களாகவே புரோகிராம்களாகவே நாமளும் பார்க்க பழகிக்கணும்னு நினைக்கிறேன்.

எல்லாம் அவன் செயல்.. இயற்கை ஏதோ சமூக மாற்றத்தை செய்யுது. இந்த மாற்றம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்னு சத்தியமா புரியல. அதை புரிஞ்சுக்கிற சக்தி நமக்கு இல்லையோன்னு தோணுது. நம்மால முடிஞ்சது எல்லாருக்காகவும் பிரார்த்தனை பண்றது மட்டும்தான்.

கடவுளே மஹாலிங்கம், எல்லாரும் எப்போதும் நிம்மதியா இருக்கணும்..

சதுரகிரி நாயகனே போற்றி. சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Tuesday, January 17, 2012

அடிப்படை ஆரம்பக் கல்வி..

எனது 5 வயது மகனையும் இன்னும் 4 மாணவர்களையும் இந்த கல்வியாண்டில் இருந்து , வகுப்பில் நன்றாக படிப்பதாக சொல்லி,  எல் கே ஜி யில் இருந்து நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர சொல்லி இருந்தார்கள்.

கடந்த சில நாட்களாக அவ‌ன் பள்ளி செல்லும்போது அழுதுகொண்டே செல்கிறான். புதிய வகுப்பில் சேர்ந்ததிலிருந்தே இந்த அவஸ்தைதான். நேற்று, எனது மகனை படிக்க சொன்னபோது அழ ஆரம்பித்து விட்டான். நானும் பொறுமையாக அவனுக்கு எடுத்து சொல்லி படிக்க வைத்தேன். ஆனால் அவனால் எழுத்துக்களை முழுமையாக ஞாபகம் வைக்க முடியவில்லை என்பதையும் எழுத்து கூட்டி படிக்க முடியவில்லை என்பதையும் கவனித்தேன்.

இன்று அவனது பள்ளியில் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து இது குறித்து பேசி சற்று சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் செய்வதாக சொல்லி இருக்கிறார்.

இது சம்பந்தமாக யோசித்துக் கொண்டிருந்தபோது டைம்ஸ் ஆப் இந்தியாவில் கீழ்க்கண்ட செய்தியை படிக்க நேர்ந்தது.


அதாவது நமது நாட்டின் கிராமப்புற ஆரம்பப் பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு படிக்கவும் கணித திறமையிலும் அதிகபட்ச‌ குறைபாடுகள் இருப்பதாக ஒரு சர்வே சொல்கிறது.

இந்த செய்தியையும் இன்றைய எனது மகன் சம்பந்தமாக பள்ளியில் பேசிய நிகழ்வையும் இணைத்து என்னால் இந்த செய்திக்கான மூல காரணங்களை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.

எழுத்துக்களை மாணவர்களுக்கு போதித்து, அடிப்படை வாசிக்கும் பயிற்சி அளிக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியமானது. இந்த திறமையை வைத்துத்தான் மற்ற பாடங்களை மாணவர்கள் கற்க  முடியும். இதிலேயே தகராறு எனும்போது மிகவும் சிரமம்தான். இதற்கு சற்று அதிக காலம் எடுத்துக் கொண்டாலும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த அடிப்படை பயிற்சியை சிறப்பாக கொடுக்க அனைத்து முயற்சியையும் எடுக்க வேண்டியது ஒவ்வொரு ஆரம்பப் பள்ளியின் தார்மீக கடமை.

ஆனால், பள்ளியில் பாடத்திட்டத்தை முடிப்பதில் கவனம் செலுத்தும் ஆசிரியர்கள், அதை எத்தனை மாணவர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதில் கவனம் செலுத்துவதில்லை. மேலும் பெரும்பான்மை மாணவர்களாவது புரிந்து கொள்ளுமளவுக்கு அடிப்படை கல்வியை கவனமாக‌ போதிப்பதில்லை.

இப்போது எழுதப்படிக்க கற்றுத்தரும் ஆரம்பக்கல்வி என்பது சில நாட்களுக்குள் முடித்து மேற்பாடங்களை போதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு அரசு தலையிட்டு சரியான பாடத்திட்டம் உருவாக்கி, அதை முறையாக பின்பற்ற ஆவன செய்ய வேண்டும்.

இன்றைக்கு அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், தனியார் பள்ளிகளில் இப்படிப் பட்ட சம்பளம் தருவதில்லை. இதனால் ஒரு சிலர் தவிர மற்ற ஆசிரியர்களின் கற்பிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

நம் குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்களா என கண்காணிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதில் ஏதேனும் குறைபாடுகள் தெரிந்தால் உடனடியாக பள்ளியில் சென்று வகுப்பு ஆசிரியரிடமும், தலைமை ஆசிரியரிடமும் இது குறித்து ஆலோசனை செய்து ஆரம்பக் கல்வி சரியாக குழந்தைகளை அடைய ஆவன செய்ய வேண்டும்.

இன்றைய சமூக சூழலில் டி வியும், இணையமும், சினிமாவும் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் படிக்கும் குழந்தைகள் வீட்டில் டிவியிலும் கணிணியிலும் தம் கவனத்தை அதிகம் வைக்கிறார்கள். நாம்தான் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது.


மொத்ததில் ஆரம்பக் கல்வியை குழந்தைகளுக்கு அளிப்பதில் அரசு, பள்ளி, ஆசிரியர், பெற்றோர் என்ற நான்கு சமூகமும் இணைந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கம், ஆரம்பக்கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் செம்மையாக கிடைக்க அருள் செய்யுங்க..

சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...