Tuesday, February 14, 2012

நம் சுய ஆத்ம தரிசனம்...

நம் சுயத்தை தேடி நமக்குள் நாம் பயணிக்கும்போது நமக்கு அதிர்ச்சி தரும் பல விசயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நம் சுயம் என்பது நம் நடத்தைதான். அது உண்மையானதாக இருக்கிறதா அல்லது போலியாக இருக்கிறதா என உணரவேண்டிய தருணம்தான் நம் ஆத்ம/சுய‌ தரிசனம்.

உண்மையில் நாம் ஒருவராக இருந்தாலும் பலவிதமான சமூக‌ செயல்பாடுகளை செய்யவேண்டிய‌வர்களாக இருக்கிறோம். ஒரு தாய்/தந்தைக்கு மகனாக/மகளாக‌, ஒரு மனைவிக்கு கணவனாக அல்லது கணவனுக்கு மனைவியாக, நம் குழந்தைகளுக்கு தாய்/தகப்பனாக, நண்பர்களுக்கு நண்பராக, சுற்றத்தார்களுக்கு ஒரு சக சுற்றத்தாராக இப்படி பல விதங்களில்.

இந்த சமூக சூழல்களில் நாம் சந்திக்கும் சில அசாதாரணமான சந்தர்ப்பங்களில் நம் அசல் சுயம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என நமக்கு சில‌ குறிப்புகள் கிடைக்கும். அந்த சில சந்தர்ப்பங்கள் :

* நமக்கு பிடிக்காதவர்கள் முன் நம் தேவைகளுக்காக கையேந்தி நிற்கும் நிலையில்

* நமக்கு பிடிக்காதவர்கள் நம் முன் அவர்கள் தேவைக்காக கையேந்தி நிற்கும் நிலையில்

* நமக்கு பிரியமானவர்களுக்கு நாம் உதவ முடிந்து உதவாமல் இருக்கும் பொழுது

* நமக்கு பிரியமானவர்களுக்கு நாம் உதவ நினைத்தும் முடியாமல் போகும்போது

* நமக்கு பிரச்சினையின் போது உதவாதவர்களுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்போது

* நமக்கு பிரச்சினையின் போது உதவியவர்களுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்போது நம் உதவ முடியாமல் போகும்போது

இப்படி இன்னும் பல அசாதாரண சூழல்களில் நம் மனதில் ஏற்படும் சிந்தனையின் செரிவுகள், நம்மை பண்படுத்தவோ அல்லது பாழ்படுத்தவோ செய்யும். அது நம் உண்மையான சுயத்தின் தரிசனமாகவும் பல நேரங்களில் அமைவதுண்டு.

நம் சுயத்தின் பிரச்சினை எங்கு இருக்கிறது என நாம் காணும் சில அபூர்வ சந்தர்ப்பங்கள் இவை. அவற்றை நாம் சற்று நிதானமாக அணுகி சிறப்பாக அந்த சூழலைக் கையாண்டால் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி அளவிட முடியாதது.

ஆனால் பெரும்பாலும் நமக்கு இருக்கும் அப்போதைய மனநிலை சுய ஆத்ம ஆராய்ச்சியைவிட சுய ஆதாய ஆராய்ச்சியிலேதான் கவனம் செலுத்தும். இந்த இயல்பை விடுத்து வெளியேறும் ஆத்ம பலம் இருப்பவர்கள் உண்மையிலேயே பெரியவர்கள்தான்.

கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் எங்க எல்லோருக்கும் இப்படிப்பட்ட ஆத்ம சுய சோதனைகளை செம்மையாக கடக்க அருள் செய்யுங்க..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்! சரணம்!!

Monday, February 13, 2012

வாழ்க்கைத் தேடுதல்...

நம் வாழ்வில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைத்தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

பிறந்ததும் தாயைத் தேடுகிறோம்
வளரும்போது அறிவைத் தேடுகிறோம்
இளைஞனானதும் காதலைத் தேடுகிறோம்
நடு வயதில் பணத்தைத் தேடுகிறோம்
முதுமையில் பாசத்தை / அரவணைப்பைத் தேடுகிறோம்

தேடுதல் என்பது வாழ்வின் அங்கமாகி விட்டது. நமது எந்தத் தேடுதலும் முடிவடைவதில்லை என்பதே நிஜம். இதை நான் தேடி முடித்து விட்டேன் என யாராலும் முழு மனதுடன் சொல்ல முடிவதில்லை.

தாயைத் தேடுவதன் தொடர்ச்சியே காதலியை/மனைவியைத் தேடுதல்...
பணம் தேடுதல் நிறுத்தப்படுவதே இல்லை..
அறிவுத் தேடல் என்பது முடிவில்லாதது...
பாசத்தை எவ்வளவு தேடினாலும் உண்மையான பாசம் அதுதானா என்ற பரிதவிப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறதே...

இவ்வாறு மனிதன் பல விசயங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் எதிலும் முழுமை அடைய முடியாதவனாகவே இருக்கிறான்.

ஞானிகளும் யோகிகளும் சொல்லும் தேடுதல் வேறு விதமானதாக இருக்கிறது. அவர்கள் நம்மையே தேடச் சொல்கிறார்கள். இந்த தேடலின் முடிவு நம் எல்லாத் தேடல்களின் முடிவு எனவும் கூறுகிறார்கள். நம்மை அறிந்தால் நாம் அனைத்ததையும் அறிந்தவர்களாகிறோம் என்கிறார்கள்.

இதற்கு பக்தி, யோகா, தியானம், கர்மயோகம், மானுடசேவை  என பல வழிகளை சொல்கிறார்கள். "நம்மை அறிதல்" என்பது இந்த வழிகளின் மூலம் சாத்தியமே என்றும் உரைக்கிறார்கள்.

எந்த ஒரு மனிதனும் முழுமை பெற்றால்தான் வாழ்வில் ஒரு நிலைத்தன்மை ஏற்படும். அவ்வாறு முழுமை பெற இந்த ஆத்ம சாதகங்கங்கள் மிகவும் அவசியம்.

இதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. இருந்தால் இந்த தேடுதல் பயணம் சுலபமாக இருக்கும். அவ்வளவே..

கடவுளே மஹாலிங்கம்.. உங்க கடாட்சத்தினால் எல்லோருக்கும் இந்த "தன்னை அறிதல்" என்கின்ற விசயம் விரைவில் கைகூட அருள் செய்யுங்க..

சதுரகிரி சுந்தரனே போற்றி!! போற்றி!!

Wednesday, February 8, 2012

எது அன்பு??!!

அன்பு செலுத்துதல் என்பது எல்லோரும் செய்யும் ஒரு சாதாரண நிகழ்வு என்றாலும் எனக்கு சில நாட்களாக இதில் பெருத்த மனக் குழப்பம். பல கேள்விகள் என்னுள் எழுந்து ஆட்டிப்படைக்கின்றன. அதில் சில...

*  எது அன்பு?
*  எந்த‌ விஷயத்தை நாம் அன்பு என சொல்கிறோம்?
*  கருணையும் அன்பும் ஒன்றா?
* அன்பும்/ கருணையும் உடையவரையே பெரும்பாலும் எளிதாக ஏமாற்றுகிறார்களே? அது ஏன்?
* அன்பு இருப்பவர்கள் மீது அதிகம் கோபம் கொள்வது இயல்பானதாக இருக்கிறதே அது ஏன்?
* அன்பு பலமுள்ளது என்றால் ஏன் அன்புள்ளவர்களை பலவீனமானவர்களைப் போல் நடத்துகிறார்கள்?
* கடமைக்கு பிரியமாக இருப்பது என்பது இருக்கிறதா? அதுவும் அன்பு ஆகுமா?

இந்த குழப்பக் கேள்விகளுக்கு எல்லாம் நேரடியாக விடைகள் கிடைக்காவிட்டாலும், ஓரளவுக்கு அடிப்படையான சில கேள்விகளுக்கு விடை கிடைத்தாலே குழப்பம் தீரும் என்று எண்ணுகிறேன்.

எது அன்பு?

நம் மனதில் சக மனிதன் மேல், உயிரின் மேல் ஏற்படும் ஒருவித மகிழ்ச்சியான ஈடுபாடுதான் அன்பு என நான் அனுமானிக்கிறேன். மேற்கண்ட குழப்பக் கேள்விகளுக்கான பதில் இந்த அனுமானத்தில்தான் அடங்கி இருக்கிறது.

நம் வாழ்வியலை நிர்ணயிக்கும் மற்றும் பல சந்தேகங்களுக்கான விடைகாண உதவும் கிளைக்கேள்வி இதிலிருந்துதான் பிறக்கிறது.

இந்த பிறர் மீது வெளிப்படும் மகிழ்ச்சியான ஈடுபாடு இயல்பாக இருக்கிறதா அல்லது அது ஒரு போலியான நடிப்பாக இருக்கிறதா அல்லது ஒரு கயமைத்தனத்துடன் வெளிப்படுகிறதா அல்லது கடனே என்று வெளிப்படுகிறதா அல்லது ஏதாவது ஆதாயத்துக்காக நடிக்கும்போது வெளிப்படுகிறதா?

இந்த கிளைக் கேள்விக்கான நம் ஆத்மார்த்தமான உண்மையான பதில் என்ன என்பதில்தான் நமக்கு இந்த அன்பினால் கிடைக்கும் பிரதி பலிப்புகளின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது.

எதை நாம் எண்ணுகிறோமோ அதுவாகவே ஆகிறோம் என உளவியல் சொல்கிறது. அதுபோல் நாம் என்ன நினைத்து எப்படி அன்பு செலுத்துகிறோமோ அதுபோன்ற பிரதிபலிப்புதான் நமக்கும் கிடைக்கும். அன்பு செலுத்துவதால் நமக்கு ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாம் தான் மூல காரணம்.

பிறர் மேல் காட்டப்படும் அன்பு மட்டும் அன்பு அல்ல.. நம்மை நாமேயும் அன்பு செய்து கொள்ள வேண்டும். அதாவது சற்று சுய நலமாகவும் சிந்திக்க பழகவேண்டும்.

சுயநலமும் பொதுநலனும் நம் சிந்தனையில் கலந்தே இருக்க வேண்டும். இதில் ஒரு சமநிலை அல்லது சரிவிகித நிலை ஏற்படும்போதுதான் அன்பினால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாக குறைக்கமுடியும். அந்த சரிவிகிதம் என்பது ஒவ்வொருவரின் சுற்றத்தையும் சூழலையும் வாழ்வியலையும் வளர்ப்பையும் பொறுத்தே அமையும்.

இயல்பாக செலுத்தப்படும் சரிவிகித அன்புதான் பாதுகாப்பான சுபிட்சமான வாழ்வின் சூட்சுமம்.

உண்மையில் பிரதிபலன் பாராமல் செய்யப்படும் அன்புக்கு எப்போதும் பாதிப்பு குறைவுதான்.ஆனால் இது இந்த காலத்தில் சாத்தியமா என்றால் என் பதில் முயன்றால் முடியாயது ஒன்றும் இல்லை என்பதே..

இனி.. இயல்பாக அன்பு செலுத்த முடியாதவர்கள் அதை செய்வது எப்படி?

முதலில் அன்பு செலுத்துவதை ஒரு கடமை போல நினைத்து செய்து பழக‌ ஆரம்பிக்க வேண்டும். இதனால் சில பல பாதிப்புகள் இருந்தாலும் இதுதான் முதல்படி. இது படிப்படியாக நம் இயல்பான பழக்கமாக மாறும்.

அந்த இயல்பான அன்பு காலப்போக்கில் ஒரு மிகப் பெரிய பிராண / ஆத்ம சக்தியாக உருவெடுக்கிறது. இந்த சக்தி எந்த ஒரு எதிர்மறை விளைவையும் முறியடிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கடவுளே மஹாலிங்கம், உங்க அருளால இந்த அன்பு என்னும் அற்புதம் இயல்பா வெளிப்பட எனக்கும் எல்லோருக்கும் அருள் செய்யுங்க...

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...