Wednesday, August 22, 2012

வீடு வாங்கப் போனேன்

சென்னைக்கு வந்ததும் ஒரு வீடு (அடுக்கு மாடிக் குடியிருப்பில்தான்) வாங்கலாம் என முடிவு செய்து கடந்த 5 மாதங்களாக தேடி வருகிறேன். அடேங்கப்பா.. எத்தனை விதமான பிரச்சினைகள்.. எத்தனை விதமான அனுபவங்கள்..

முதலில், இனி சென்னையில் சாமானியன் வீடோ அடுக்கு மாடி குடியிருப்போ வாங்க முடியாது. குறைந்த பட்சம் ஒரு 800 சதுர அடி வீடு வாங்க கூட ஒரு நடுத்தர வர்க்கத்தவரால் முடியாமல் போயிற்று. குறைந்த பட்சம் ரூ 20 லட்சம். இது ஊருக்கு மிக தொலைவில் ஏதோ ஒரு குடியிருப்பில் தினமும் ஒரு 3 அல்லது 4 மணி நேரம் அலுவலகத்துக்கு பயணம் செய்ய தயாராக இருந்தால். மேலும் சொந்த வாகனம் இல்லாவிட்டால் இந்த வீடுகளில் குடியிருக்க முடியாது.

நான் பல இடங்களில் வீடு தேடியபோது கவனித்த மிக முக்கிய விசயம். யாருமே குடியிருப்பதற்கு வீடு கட்டுவதுபோல தெரியவில்லை. பெரும்பாலும் எல்லோருமே ஒரு முதலீடாக வீடு வாங்குபவர்களுக்காகவே கட்டுகிறார்கள். என்னைப்போல‌ குடியிருக்க‌ வீடு வாங்குப‌வ‌ர்க‌ள் த‌னியாக‌தான் அதில் குடியிருக்க‌ வேண்டி இருக்கும். (ம‌ற்ற‌வ‌ர்க‌ள் வாட‌கைக்கு வ‌ரும்வ‌ரை)

இந்த‌ வார‌ம் ஒரு ப‌த்திரிக்கையில் ஒருவ‌ர் எழுதி இருந்தார்.சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்புக‌ளின் மாடிகளின் எண்ணிக்கையை அதிக‌ப்ப‌டுத்தினால் விலை குறையும் என்று. இது முற்றிலும் த‌வ‌றான‌ கணிப்பு. நான் தேடிய‌வ‌ரை மாடிக‌ளின் எண்ணிக்கை அதிக‌ரிக்கும்போது வீடுக‌ளின் விலையும் அதிக‌ரித்தே இருக்கிற‌து. 4 அல்ல‌து 5 மாடிக‌ளுக்கு மேல் ஒவ்வொரு மாடிக்கும் குறைந்த‌து ரூ 50 முத‌ல் ரூ 500 வ‌ரை விலை உய‌ர்த்தியே விற்கிறார்க‌ள்.

இன்னொரு முக்கிய‌மான‌ பிர‌ச்சினை அர‌சு அனும‌தித்த‌ அள‌வைவிட‌ அதிக‌ அள‌வில் வீடுக‌ள் க‌ட்டுவது, அர‌சிட‌ம் அனும‌தி வாங்கிய‌தை விட‌ அதிக‌ ச‌துர‌ அடிக‌ளில் வீடுக‌ளைக் க‌ட்டுவ‌து, அனும‌தியே வாங்காம‌ல் அனும‌தி வாங்கிய‌துபோல‌ க‌ட்டுவ‌து, இன்னும் இந்த‌ அர‌சு அனும‌தி விச‌ய‌த்தில் எவ்வ‌ள‌வு த‌கிடு த‌த்த‌ம் இருக்கோ தெரிய‌வில்லை.

நான் பார்த்த‌வ‌ரை இதுவ‌ரை யாருமே அர‌சு அனும‌தி அளித்த‌ வ‌ரைப‌ட‌ம் ப‌டி வீடு க‌ட்ட‌வில்லை. ஓர‌ள‌வுக்கு அந்த‌ வ‌ரைப‌ட‌த்தை ஒட்டி வீடு க‌ட்ட‌ப்ப‌டுமானால் அந்த‌ பில்ட‌ர் கேட்கும் ப‌ண‌த்துக்கு நாம் இர‌ண்டு வீடு வாங்கி விட‌முடியும். அவ்வ‌ள‌வுக்கு கொள்ளை விலை வைத்து விற்கிறார்க‌ள்.

என‌க்குத் தெரிந்த‌ வ‌க்கீல் ந‌ண‌ப‌ரிட‌ம் இது ப‌ற்றி விசாரித்த‌போது அவ‌ர் சொன்ன‌ த‌க‌வ‌ல்க‌ள் இன்னும் பகீரென்று இருந்த‌து. 1999க்குப் பிற‌கு க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ விதி முறை மீறிய‌ க‌ட்டிட‌ங்க‌ளை இடிக்க‌ சுப்ரீம் கோர்ட் உத்த‌ர‌வு இருப்ப‌தாக‌ கேட்ட‌து வ‌யிற்றில் புளியைக் க‌ரைக்கிறது. ந‌ம‌து அர‌சுக‌ள்தான் அந்த‌ உத்த‌ர‌வை ந‌டைமுறைப்ப‌டுத்தாம‌ல் த‌ள்ளிவைத்துவிட்டு மேலும் மேலும் இப்ப‌டி விதிமுறை மீறிய‌ குடியிருப்புக‌ளை அனும‌திப்ப‌து வ‌ருத்த‌மாக‌வே இருக்கிற‌து.

தி ந‌க‌ரில் இருக்கும் வ‌ணிக‌ வ‌ளாக‌ங்க‌ள் விதிப்ப‌டி க‌ட்ட‌ப்ப‌ட‌வில்லை என‌ குதிக்கும் ந‌ம‌க்கு, நாம் குடியிருக்கும் வீடுக‌ளே விதிப்ப‌டி க‌ட்ட‌ப்ப‌ட‌வில்லை என்ப‌து எப்போது உறைக்கும் என‌ தெரிய‌வில்லை. இதில் எல்லோரும் கூட்டுக்க‌ள‌வாணிக‌ள் போல‌த்தான் தெரிகிற‌து.

சுருக்க‌மாக‌ சொன்னால் பேசாம‌ல் வாட‌கை வீட்டிலேயே இருந்துவிட‌லாம் போல‌ தோன்றுகிற‌து. யாராவ‌து பூனைக்கு ம‌ணி க‌ட்டுவ‌துபோல், ஏதாவ‌து ஒரு அர‌சாங்க‌ம் விதிக‌ளைத் த‌ள‌ர்த்தியோ அல்ல‌து புதிய‌ விதிக‌ளை க‌டுமையாக‌ பின்ப‌ற்ற‌ ஆவ‌ன‌ செய்தாலோ அல்ல‌து அத்தி பூத்தாற்போல் யாராவ‌து நியாய‌மான‌ உண‌ர்வுடைய ஒரு பில்ட‌ர் அமைந்தாலோ தான் வீடு வாங்க‌ முடியும்போல‌ தெரிகிற‌து.

இல்லாவிட்டால் எல்லாருக்கும் விதிச்ச‌து ந‌ம‌க்கும் அப்பிடின்னு முடிவு ப‌ண்ணி ஏதாவ‌து ஒரு பில்ட‌ர்கிட்ட‌ வீடு வாங்கிவிட‌லாமான்னும் ஒரு யோச‌னை இருக்கு..

 
கால‌மும் ந‌ம்ம‌ ம‌ஹாலிங்க‌மும் தான் இதுக்கு பதில் சொல்ல‌ணும். ஓம் ச‌துர‌கிரி சுந்த‌ர‌ மஹாலிங்க‌மே ச‌ர‌ண‌ம்.

Friday, March 16, 2012

இலங்கை போர்க் குற்றங்கள்.. யார் பொறுப்பு??

நேற்று சானல்4 ஒளிபரப்பிய அந்த இலங்கை போர்க் குற்ற வீடியோவைப் பார்த்த பிறகு நெஞ்சு அடைத்ததுபோல இருந்தது. முதல் பாகம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இதை சற்று விட்டு விட்டுத்தான் பார்க்க முடிந்தது. கண்கள் பனித்தது. இதற்கு யார் பொறுப்பு என அந்த விடியோவில் காட்டினார்கள். எனக்கு அவர்கள் காட்டியவர்களுடன் இன்னும் அதிக பொறுப்புடையவர்களாக சிலர் தெரிந்தார்கள். அவர்கள் பற்றி..

 
இந்த போர்க் குற்றங்கள் நடைபெற்றபோது அதுபற்றி தெரிந்தும் முழுமையாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடாமல், நடிகைகளின் அங்கங்களையும், சினிமா/அரசியல் கிசுகிசுகளையும் பக்கத்துக்கு பக்கம் பதிப்பிற்று விற்றுக் கொண்டிருந்த நம் தமிழகத்துப் பத்திரிக்கைகள் / இதர ஊடகங்கள்.

இன்னும்கூட இதில் கள்ளமௌனம் சாதிக்கும் நம் ஊடகங்கள்தான் முதல் குற்றவாளி.

 
இதே நேரத்தில், அரசியல் பதவி பேரம் பேசிக்கொண்டும், வாரிசுச்சண்டையில் சமாதானம் பேசிக் கொண்டும், சொகுசு பங்களாக்களில் நிரந்தர ஓய்வு எடுத்துக்கொண்டும் இருந்த நம் தமிழக முன்னணி அரசியல் தலைவர்கள் இரண்டாவது குற்றவாளி.

இவர்களுக்கும் இதுபற்றி நன்றாக தகவல்கள் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மக்களை திசை திருப்பி இலங்கை அரசாங்கம் சொன்ன பொய்களை நம்மை நம்பவைத்த நயவஞ்சகர்கள். இன்று இதற்காக இவர்கள் சிந்தும் நீலிக் கண்ணீர் அவர்கள் குடும்பததை எரியாய் எரிக்கப் போகும் நெருப்புத் துண்டங்கள் என்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை.

 
இந்த இறுதிப் போரில் இலங்கைக்கு தார்மீக உதவிகளும், தளவாட உதவிகளும் செய்து போரை முடித்துவைக்க உதவியதாக சொல்லப்படும் நம் இந்திய மத்திய அரசாங்கம் இதில் மூன்றாவது குற்றவாளி.

நம் தமிழகத்தை முதலிலேயே நீர் மேலாண்மையில் வஞ்சித்துக் கொண்டிருந்த இந்திய மத்திய அரசு, ராஜீவ் கொலைக்குப் பிறகு முற்றிலும் கைகழுவி விட்டது. இன்னும் நம் வங்கக்  கடலில் தினமும் தாக்கப்படும் /  கொல்லப்படும் தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கில்லாத இந்த மத்திய அரசு, இப்போது ஒவ்வொரு தமிழனும் இனி இந்தியன் என சொல்லிக் கொள்ளவே வெட்கப்பட வைத்துவிட்டது.

 
இந்த போர்க் குற்றங்கள் நடைபெற்றபோது அதைத் தடுக்கத் தவறிய ஐநா சபையும் அதன் உறுப்பு நாடுகளும் நான்காவது குற்றவாளிகள்.

லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்த ஒரு சமூகமே அழிக்கப்பட்டதை இவர்கள் தத்தமது சாட்டிலைட்டுகள் வழியாக அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு இன்று படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெட்கக்கேடு. உண்மையில் நம் கம்யூனிஸ்ட் தோழர்கள் சொல்வதுபோல ஐநா சபை என்பது  அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் ஏவலை செய்து முடிக்கும் நாய்தான் போலிருக்கிறது.

 
இந்த போர்க்குற்றங்கள் நடந்ததை அறிந்தும் இன்னும் ஒன்றும் செய்யாமல் / செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கும் ஒவ்வொரு தமிழ்க் குடிமகனும், நான் உட்பட, ஐந்தாவது குற்றவாளிகள்.

இன்னும் நம்மால் சாந்தமான மனநிலையில் வாழ முடிகிறது. ஒன்று நாம் முற்றிலும் காயடிக்கப்பட்டிருக்கிறோம், அல்லது முழு ஞானியாகி விட்டோம். இதில் முன்னதுதான் சரியானது என நினைக்கிறேன்.


ஒரு குற்றத்தை செய்பவனுடன் உடந்தையாக இருந்தவர்களும் பெரிய குற்றவாளிதான். இந்த வகையில் மேற்கண்ட அனைவருமே குற்றவாளிகளே.


கடவுளே மஹாலிங்கம், இந்த படுகொலையில் உயிர் நீத்த ஆன்மாக்களுக்கு நற்கதியைக் கொடுங்க. இன்னும் பிழைத்து இருப்பவர்களுக்கு எதையும் தாங்கும் மனோபலத்தையும் ஆத்ம பலத்தையும் கொடுங்க. என்னைப் போன்ற தமிழனுக்கு கொஞ்சமாவது வீரத்தைக் கொடுங்க..

சதுரகிரி சுந்தரனே சரணம்...

Friday, March 2, 2012

பயமாக இருக்கிறது....

நேற்று என் மகன் பள்ளி விட்டு வந்ததும் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்னு சொன்னான். என்னடான்னு கேட்டா அவன் வகுப்பில் கூட படிக்கும் ஒரு பையன் சக மாணவியை லவ் பண்ணுவதாக சொன்னான்.

சற்று பகீரென்று இருந்தது. சமாளித்துக் கொண்டு இது எப்பிடி உனக்கு தெரியும்னு கேட்டேன். அந்த பையனே அவனிடன் சொன்னதாக சொன்னான். பிறகு அவனிடம் அந்த பையன் ஒரு பேட்பாய் (Bad Boy) , அவனோட சேராதேன்னு சொல்லி சமாளிச்சு டாபிக்க மாத்தினேன்.

இதில் முக்கியமான விசயம் என் பையன் வயது 5, படிப்பது ஒன்னாவது வகுப்பில்.

இந்த வயதில் இந்த குழந்தைகளுக்கு லவ் பண்ணுவது பற்றி தெரிவதும் அதை நடைமுறைப்படுத்த இறங்குவதும் ஒரு பெற்றோராக பயமாக இருக்கிறது.

பிரச்சினை பள்ளிகளில் மட்டும் இருப்பதாக தெரியவில்லை. வீடுகளிலும், நாம் பார்க்கும் டிவி சீரியல்களிலும், பார்க்கும் சினிமாக்களிலும்தான் முக்கியமான பிரச்சினை இருக்கிறது.

பெரியவர்கள் பார்க்கும் அதே சீரியலையும், சினிமாவையும்தான் குழந்தைகளும் பார்க்கிறார்கள். அதை அவர்கள் பக்குவத்துக்கு ஏற்ப புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்த இறங்கி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட குழந்தைகள் வளர்ந்தவுடன் எப்படி இருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்க்கவே பயமாக இருக்கிறது.

என்ன செய்றதுன்னு தெரியல. நம்மாலயும் வீட்டுல டீவி பார்க்காம இருக்க முடியாது. இனிமேல் அந்த பசங்க பார்க்கர படங்களாகவே புரோகிராம்களாகவே நாமளும் பார்க்க பழகிக்கணும்னு நினைக்கிறேன்.

எல்லாம் அவன் செயல்.. இயற்கை ஏதோ சமூக மாற்றத்தை செய்யுது. இந்த மாற்றம் என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்னு சத்தியமா புரியல. அதை புரிஞ்சுக்கிற சக்தி நமக்கு இல்லையோன்னு தோணுது. நம்மால முடிஞ்சது எல்லாருக்காகவும் பிரார்த்தனை பண்றது மட்டும்தான்.

கடவுளே மஹாலிங்கம், எல்லாரும் எப்போதும் நிம்மதியா இருக்கணும்..

சதுரகிரி நாயகனே போற்றி. சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Thursday, March 1, 2012

கடலளவு அன்பு...

நம் ஆழ்மனதில் கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற பல எதிர்மறை உணர்வுகள் ஆழமாக படிந்து கிடக்கிறது.

இவற்றை தூண்ட வெளியிலிருந்து வரும் ஒரு எதிர்மறை சொல்லோ அல்லது நமக்குப் பிடிக்காத சிறிய செயலோ போதுமானதாக இருக்கிறது. உடனடியாக இந்த உணர்வுகள் மின் அலைகளாக நம் உடல் முழுதும் பரவ ஆரம்பித்துவிடுகிறது.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, நாம் இந்த சந்தர்ப்பத்தில் செய்யும் எதிர்வினைகளைத்தான். இநத உணர்வுகளுக்கு உயிர் கொடுப்பது இந்த எதிர்வினைகள்தான்.

இதுதான் நம் உறவுகளைப் பேணுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

நம் வாழ்வில் பலவித மனிதர்களை பலவித சந்தர்ப்பங்களில் சந்திக்கிறோம். அவர்களுடனான நமது தகவல் பரிமாற்றங்களின் போது ஏற்படும் சில தவறான புரிதல்களால் நாம் செய்யும் எதிர்மறையான உணர்வு வெளிப்பாடுகள் நமக்கு பலவித இழப்புகளை ஏற்படுத்தி விடும். இது நமது உறவுகளில் மட்டுமல்ல; அலுவலக நிமித்தங்களிலும், தொழில் நிமித்தங்களிலும் மிகவும் முக்கியமானதுகூட‌.

நமக்கு சமமானநிலையில் இருக்கும் எதிரியிடமோ அல்லது நண்பருடனோ அல்லது சக ஊழியருடனோ இப்படிப்பட்ட எதிர்வினைகளால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு விடுவதில்லை. ஆனால் இது தவறாவனவர்கள் / நமக்கு சமமில்லாதவர்கள் முன்னிலையில், ஒரு தவறான சூழலில் வெளிப்படும்போது பிரளயமே எற்படுமளவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்த வல்லது.

ஒருவர் எவ்வளவுதான் நம் எதிர்மறை உணர்வுகளைத் தூண்டினாலும் ஒரு நேர்மறையான‌ எதிர்வினை செய்வது ஒரு சாமானிய செயல் அல்ல. ஆனால் இதை கற்றுக் கொள்ளவேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்றுதான் நான் நினைக்கிறேன்.

இதை எப்படிக் கற்றுக் கொள்வது? நல்ல கேள்விதான்.

இதை கற்றுக் கொள்ளும் முன் நமக்கு ஒரு முன் தகுதி தேவைப்படுகிறது. அது நம் மனதை அன்பால் நிறைப்பது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்பு நம் மனதில் நிறைத்துக் கொள்ளவேண்டும். கடலளவு, அந்த ஆகாயம் அளவுக்கு.

ஒரு குடம் நீரில் ஒரு துளி விசம் விழுந்தால் அந்த ஒரு குடம் நீரும் விசமாகிப்போகும்.

ஆனால் அதே ஒரு துளி விசம் கடலில் விழுந்தால்??? கடல் கடலாகவே இருக்கும். விசம் அதில் கரைந்துபோகும்.

இதுதான் சூட்சுமம். நம் மனம் அன்பால் நிறைந்திருக்கும்போது எதிரில் வரும் எதிர்மறை சொல்லாலோ செயலாலோ நம் மனம் எதிர்மறை உணர்வுகளை வெளியிடுவது குறைந்துபோகும். இன்னும் அன்பால் நம் மனம் நிறையும்போது மறைந்தே போகும்.

அன்பால் மனதை நிறைப்போம்... உலகை வெல்வோம்...

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே போற்றி...

Tuesday, February 14, 2012

நம் சுய ஆத்ம தரிசனம்...

நம் சுயத்தை தேடி நமக்குள் நாம் பயணிக்கும்போது நமக்கு அதிர்ச்சி தரும் பல விசயங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். நம் சுயம் என்பது நம் நடத்தைதான். அது உண்மையானதாக இருக்கிறதா அல்லது போலியாக இருக்கிறதா என உணரவேண்டிய தருணம்தான் நம் ஆத்ம/சுய‌ தரிசனம்.

உண்மையில் நாம் ஒருவராக இருந்தாலும் பலவிதமான சமூக‌ செயல்பாடுகளை செய்யவேண்டிய‌வர்களாக இருக்கிறோம். ஒரு தாய்/தந்தைக்கு மகனாக/மகளாக‌, ஒரு மனைவிக்கு கணவனாக அல்லது கணவனுக்கு மனைவியாக, நம் குழந்தைகளுக்கு தாய்/தகப்பனாக, நண்பர்களுக்கு நண்பராக, சுற்றத்தார்களுக்கு ஒரு சக சுற்றத்தாராக இப்படி பல விதங்களில்.

இந்த சமூக சூழல்களில் நாம் சந்திக்கும் சில அசாதாரணமான சந்தர்ப்பங்களில் நம் அசல் சுயம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என நமக்கு சில‌ குறிப்புகள் கிடைக்கும். அந்த சில சந்தர்ப்பங்கள் :

* நமக்கு பிடிக்காதவர்கள் முன் நம் தேவைகளுக்காக கையேந்தி நிற்கும் நிலையில்

* நமக்கு பிடிக்காதவர்கள் நம் முன் அவர்கள் தேவைக்காக கையேந்தி நிற்கும் நிலையில்

* நமக்கு பிரியமானவர்களுக்கு நாம் உதவ முடிந்து உதவாமல் இருக்கும் பொழுது

* நமக்கு பிரியமானவர்களுக்கு நாம் உதவ நினைத்தும் முடியாமல் போகும்போது

* நமக்கு பிரச்சினையின் போது உதவாதவர்களுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்போது

* நமக்கு பிரச்சினையின் போது உதவியவர்களுக்கு உதவ நமக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்க்கும்போது நம் உதவ முடியாமல் போகும்போது

இப்படி இன்னும் பல அசாதாரண சூழல்களில் நம் மனதில் ஏற்படும் சிந்தனையின் செரிவுகள், நம்மை பண்படுத்தவோ அல்லது பாழ்படுத்தவோ செய்யும். அது நம் உண்மையான சுயத்தின் தரிசனமாகவும் பல நேரங்களில் அமைவதுண்டு.

நம் சுயத்தின் பிரச்சினை எங்கு இருக்கிறது என நாம் காணும் சில அபூர்வ சந்தர்ப்பங்கள் இவை. அவற்றை நாம் சற்று நிதானமாக அணுகி சிறப்பாக அந்த சூழலைக் கையாண்டால் நமக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தி அளவிட முடியாதது.

ஆனால் பெரும்பாலும் நமக்கு இருக்கும் அப்போதைய மனநிலை சுய ஆத்ம ஆராய்ச்சியைவிட சுய ஆதாய ஆராய்ச்சியிலேதான் கவனம் செலுத்தும். இந்த இயல்பை விடுத்து வெளியேறும் ஆத்ம பலம் இருப்பவர்கள் உண்மையிலேயே பெரியவர்கள்தான்.

கடவுளே மஹாலிங்கம், நீங்கதான் எங்க எல்லோருக்கும் இப்படிப்பட்ட ஆத்ம சுய சோதனைகளை செம்மையாக கடக்க அருள் செய்யுங்க..

சதுரகிரி சுந்தர மஹாலிங்கமே சரணம்! சரணம்!!

Monday, February 13, 2012

வாழ்க்கைத் தேடுதல்...

நம் வாழ்வில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைத்தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

பிறந்ததும் தாயைத் தேடுகிறோம்
வளரும்போது அறிவைத் தேடுகிறோம்
இளைஞனானதும் காதலைத் தேடுகிறோம்
நடு வயதில் பணத்தைத் தேடுகிறோம்
முதுமையில் பாசத்தை / அரவணைப்பைத் தேடுகிறோம்

தேடுதல் என்பது வாழ்வின் அங்கமாகி விட்டது. நமது எந்தத் தேடுதலும் முடிவடைவதில்லை என்பதே நிஜம். இதை நான் தேடி முடித்து விட்டேன் என யாராலும் முழு மனதுடன் சொல்ல முடிவதில்லை.

தாயைத் தேடுவதன் தொடர்ச்சியே காதலியை/மனைவியைத் தேடுதல்...
பணம் தேடுதல் நிறுத்தப்படுவதே இல்லை..
அறிவுத் தேடல் என்பது முடிவில்லாதது...
பாசத்தை எவ்வளவு தேடினாலும் உண்மையான பாசம் அதுதானா என்ற பரிதவிப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறதே...

இவ்வாறு மனிதன் பல விசயங்களைத் தேடிக் கொண்டிருந்தாலும் எதிலும் முழுமை அடைய முடியாதவனாகவே இருக்கிறான்.

ஞானிகளும் யோகிகளும் சொல்லும் தேடுதல் வேறு விதமானதாக இருக்கிறது. அவர்கள் நம்மையே தேடச் சொல்கிறார்கள். இந்த தேடலின் முடிவு நம் எல்லாத் தேடல்களின் முடிவு எனவும் கூறுகிறார்கள். நம்மை அறிந்தால் நாம் அனைத்ததையும் அறிந்தவர்களாகிறோம் என்கிறார்கள்.

இதற்கு பக்தி, யோகா, தியானம், கர்மயோகம், மானுடசேவை  என பல வழிகளை சொல்கிறார்கள். "நம்மை அறிதல்" என்பது இந்த வழிகளின் மூலம் சாத்தியமே என்றும் உரைக்கிறார்கள்.

எந்த ஒரு மனிதனும் முழுமை பெற்றால்தான் வாழ்வில் ஒரு நிலைத்தன்மை ஏற்படும். அவ்வாறு முழுமை பெற இந்த ஆத்ம சாதகங்கங்கள் மிகவும் அவசியம்.

இதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. இருந்தால் இந்த தேடுதல் பயணம் சுலபமாக இருக்கும். அவ்வளவே..

கடவுளே மஹாலிங்கம்.. உங்க கடாட்சத்தினால் எல்லோருக்கும் இந்த "தன்னை அறிதல்" என்கின்ற விசயம் விரைவில் கைகூட அருள் செய்யுங்க..

சதுரகிரி சுந்தரனே போற்றி!! போற்றி!!

Wednesday, February 8, 2012

எது அன்பு??!!

அன்பு செலுத்துதல் என்பது எல்லோரும் செய்யும் ஒரு சாதாரண நிகழ்வு என்றாலும் எனக்கு சில நாட்களாக இதில் பெருத்த மனக் குழப்பம். பல கேள்விகள் என்னுள் எழுந்து ஆட்டிப்படைக்கின்றன. அதில் சில...

*  எது அன்பு?
*  எந்த‌ விஷயத்தை நாம் அன்பு என சொல்கிறோம்?
*  கருணையும் அன்பும் ஒன்றா?
* அன்பும்/ கருணையும் உடையவரையே பெரும்பாலும் எளிதாக ஏமாற்றுகிறார்களே? அது ஏன்?
* அன்பு இருப்பவர்கள் மீது அதிகம் கோபம் கொள்வது இயல்பானதாக இருக்கிறதே அது ஏன்?
* அன்பு பலமுள்ளது என்றால் ஏன் அன்புள்ளவர்களை பலவீனமானவர்களைப் போல் நடத்துகிறார்கள்?
* கடமைக்கு பிரியமாக இருப்பது என்பது இருக்கிறதா? அதுவும் அன்பு ஆகுமா?

இந்த குழப்பக் கேள்விகளுக்கு எல்லாம் நேரடியாக விடைகள் கிடைக்காவிட்டாலும், ஓரளவுக்கு அடிப்படையான சில கேள்விகளுக்கு விடை கிடைத்தாலே குழப்பம் தீரும் என்று எண்ணுகிறேன்.

எது அன்பு?

நம் மனதில் சக மனிதன் மேல், உயிரின் மேல் ஏற்படும் ஒருவித மகிழ்ச்சியான ஈடுபாடுதான் அன்பு என நான் அனுமானிக்கிறேன். மேற்கண்ட குழப்பக் கேள்விகளுக்கான பதில் இந்த அனுமானத்தில்தான் அடங்கி இருக்கிறது.

நம் வாழ்வியலை நிர்ணயிக்கும் மற்றும் பல சந்தேகங்களுக்கான விடைகாண உதவும் கிளைக்கேள்வி இதிலிருந்துதான் பிறக்கிறது.

இந்த பிறர் மீது வெளிப்படும் மகிழ்ச்சியான ஈடுபாடு இயல்பாக இருக்கிறதா அல்லது அது ஒரு போலியான நடிப்பாக இருக்கிறதா அல்லது ஒரு கயமைத்தனத்துடன் வெளிப்படுகிறதா அல்லது கடனே என்று வெளிப்படுகிறதா அல்லது ஏதாவது ஆதாயத்துக்காக நடிக்கும்போது வெளிப்படுகிறதா?

இந்த கிளைக் கேள்விக்கான நம் ஆத்மார்த்தமான உண்மையான பதில் என்ன என்பதில்தான் நமக்கு இந்த அன்பினால் கிடைக்கும் பிரதி பலிப்புகளின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது.

எதை நாம் எண்ணுகிறோமோ அதுவாகவே ஆகிறோம் என உளவியல் சொல்கிறது. அதுபோல் நாம் என்ன நினைத்து எப்படி அன்பு செலுத்துகிறோமோ அதுபோன்ற பிரதிபலிப்புதான் நமக்கும் கிடைக்கும். அன்பு செலுத்துவதால் நமக்கு ஏற்படும் பின் விளைவுகளுக்கு நாம் தான் மூல காரணம்.

பிறர் மேல் காட்டப்படும் அன்பு மட்டும் அன்பு அல்ல.. நம்மை நாமேயும் அன்பு செய்து கொள்ள வேண்டும். அதாவது சற்று சுய நலமாகவும் சிந்திக்க பழகவேண்டும்.

சுயநலமும் பொதுநலனும் நம் சிந்தனையில் கலந்தே இருக்க வேண்டும். இதில் ஒரு சமநிலை அல்லது சரிவிகித நிலை ஏற்படும்போதுதான் அன்பினால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாக குறைக்கமுடியும். அந்த சரிவிகிதம் என்பது ஒவ்வொருவரின் சுற்றத்தையும் சூழலையும் வாழ்வியலையும் வளர்ப்பையும் பொறுத்தே அமையும்.

இயல்பாக செலுத்தப்படும் சரிவிகித அன்புதான் பாதுகாப்பான சுபிட்சமான வாழ்வின் சூட்சுமம்.

உண்மையில் பிரதிபலன் பாராமல் செய்யப்படும் அன்புக்கு எப்போதும் பாதிப்பு குறைவுதான்.ஆனால் இது இந்த காலத்தில் சாத்தியமா என்றால் என் பதில் முயன்றால் முடியாயது ஒன்றும் இல்லை என்பதே..

இனி.. இயல்பாக அன்பு செலுத்த முடியாதவர்கள் அதை செய்வது எப்படி?

முதலில் அன்பு செலுத்துவதை ஒரு கடமை போல நினைத்து செய்து பழக‌ ஆரம்பிக்க வேண்டும். இதனால் சில பல பாதிப்புகள் இருந்தாலும் இதுதான் முதல்படி. இது படிப்படியாக நம் இயல்பான பழக்கமாக மாறும்.

அந்த இயல்பான அன்பு காலப்போக்கில் ஒரு மிகப் பெரிய பிராண / ஆத்ம சக்தியாக உருவெடுக்கிறது. இந்த சக்தி எந்த ஒரு எதிர்மறை விளைவையும் முறியடிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கடவுளே மஹாலிங்கம், உங்க அருளால இந்த அன்பு என்னும் அற்புதம் இயல்பா வெளிப்பட எனக்கும் எல்லோருக்கும் அருள் செய்யுங்க...

சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Friday, January 27, 2012

நம் குடியரசுக்கு வந்த வியாதிகள்..

நம் தேசம் சுதந்திரமடைந்து, புதிய அரசியலமைப்பு சட்டத்தை கைக்கொண்ட நினைவு தினம் நம் குடியரசு தினம். இந்த நாளில் நமது தேசத்தின் முன்னேற்றத்தினை தடுத்துக்கொண்டிருக்கும் சில பிரச்சினைகளை பற்றிய எனது அனுமானத்தை முன் வைக்கிறேன்..


தனிமனித ஒழுக்கமும், கடமை உணர்வும், நேர்மையும், சத்தியமும் அபாயமான அளவுக்கு குறைந்துபோனது.

மக்களிடையே குறைந்துவரும் சமூக பொறுப்பும், அதிகரிக்கும் வடிகட்டிய சுயநல சிந்தனைகளும்.

பணம் பிரதானமாகவும், மனிதம் கடைசியாகவும் கருத்தப்படும் ஒரு வாழ்வியலை கைக்கொள்ளும் ஒரு தலைமுறை உருவெடுத்தது.

அதிகரித்துவரும் குடி/போதைப்பழக்கமும், அதுதான் நாகரீகம் என இளைய சமுதாயம் தீவிரமாக நம்புவதும்.

சிதைந்துவரும் விவசாயத்தை அடியோடு புறக்கணிக்கும் அரசாங்கம்.

அரசாங்கத்தில் மலிந்துவிட்ட லஞ்சமும் ஊழலும்.

அதிகரிக்கும் விலைவாசியும், உயரும் வறுமையும்.

சட்டங்கள் சரியான முறையில், எல்லோருக்கும் சமமாக அமல் படுத்தப்படாதது. வலுத்தவனுக்கு ஒருவிதமாகவும், இளைத்தவனுக்கு ஒருவிதமாகவும் அமலாகும் சட்டங்களும் அதை அமல்படுத்துபவர்களும்.

சட்டங்களில் இவ்வளவு ஓட்டைகள் இருப்பது தெரிந்தும் அதை அடைக்க யாரும் பெரிய அளவில் முயற்சி செய்யாதது. மற்றும் புதிய சட்டங்கள் செய்யும்போதும் பொத்தல்களுடனேயே செய்ய  முனைவது.


கடவுளே, மஹாலிங்கம், நினைக்கையிலேயே கண்ணைக் கட்டுதே.. ஏதாவது செஞ்சு நம்ம தேசத்து மக்களை காப்பாத்துங்க..

சதுரகிரி நாயகனே சரணம்.. சரணம்..

Tuesday, January 17, 2012

அடிப்படை ஆரம்பக் கல்வி..

எனது 5 வயது மகனையும் இன்னும் 4 மாணவர்களையும் இந்த கல்வியாண்டில் இருந்து , வகுப்பில் நன்றாக படிப்பதாக சொல்லி,  எல் கே ஜி யில் இருந்து நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர சொல்லி இருந்தார்கள்.

கடந்த சில நாட்களாக அவ‌ன் பள்ளி செல்லும்போது அழுதுகொண்டே செல்கிறான். புதிய வகுப்பில் சேர்ந்ததிலிருந்தே இந்த அவஸ்தைதான். நேற்று, எனது மகனை படிக்க சொன்னபோது அழ ஆரம்பித்து விட்டான். நானும் பொறுமையாக அவனுக்கு எடுத்து சொல்லி படிக்க வைத்தேன். ஆனால் அவனால் எழுத்துக்களை முழுமையாக ஞாபகம் வைக்க முடியவில்லை என்பதையும் எழுத்து கூட்டி படிக்க முடியவில்லை என்பதையும் கவனித்தேன்.

இன்று அவனது பள்ளியில் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து இது குறித்து பேசி சற்று சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் செய்வதாக சொல்லி இருக்கிறார்.

இது சம்பந்தமாக யோசித்துக் கொண்டிருந்தபோது டைம்ஸ் ஆப் இந்தியாவில் கீழ்க்கண்ட செய்தியை படிக்க நேர்ந்தது.


அதாவது நமது நாட்டின் கிராமப்புற ஆரம்பப் பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு படிக்கவும் கணித திறமையிலும் அதிகபட்ச‌ குறைபாடுகள் இருப்பதாக ஒரு சர்வே சொல்கிறது.

இந்த செய்தியையும் இன்றைய எனது மகன் சம்பந்தமாக பள்ளியில் பேசிய நிகழ்வையும் இணைத்து என்னால் இந்த செய்திக்கான மூல காரணங்களை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.

எழுத்துக்களை மாணவர்களுக்கு போதித்து, அடிப்படை வாசிக்கும் பயிற்சி அளிக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியமானது. இந்த திறமையை வைத்துத்தான் மற்ற பாடங்களை மாணவர்கள் கற்க  முடியும். இதிலேயே தகராறு எனும்போது மிகவும் சிரமம்தான். இதற்கு சற்று அதிக காலம் எடுத்துக் கொண்டாலும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த அடிப்படை பயிற்சியை சிறப்பாக கொடுக்க அனைத்து முயற்சியையும் எடுக்க வேண்டியது ஒவ்வொரு ஆரம்பப் பள்ளியின் தார்மீக கடமை.

ஆனால், பள்ளியில் பாடத்திட்டத்தை முடிப்பதில் கவனம் செலுத்தும் ஆசிரியர்கள், அதை எத்தனை மாணவர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதில் கவனம் செலுத்துவதில்லை. மேலும் பெரும்பான்மை மாணவர்களாவது புரிந்து கொள்ளுமளவுக்கு அடிப்படை கல்வியை கவனமாக‌ போதிப்பதில்லை.

இப்போது எழுதப்படிக்க கற்றுத்தரும் ஆரம்பக்கல்வி என்பது சில நாட்களுக்குள் முடித்து மேற்பாடங்களை போதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு அரசு தலையிட்டு சரியான பாடத்திட்டம் உருவாக்கி, அதை முறையாக பின்பற்ற ஆவன செய்ய வேண்டும்.

இன்றைக்கு அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், தனியார் பள்ளிகளில் இப்படிப் பட்ட சம்பளம் தருவதில்லை. இதனால் ஒரு சிலர் தவிர மற்ற ஆசிரியர்களின் கற்பிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

நம் குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்களா என கண்காணிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதில் ஏதேனும் குறைபாடுகள் தெரிந்தால் உடனடியாக பள்ளியில் சென்று வகுப்பு ஆசிரியரிடமும், தலைமை ஆசிரியரிடமும் இது குறித்து ஆலோசனை செய்து ஆரம்பக் கல்வி சரியாக குழந்தைகளை அடைய ஆவன செய்ய வேண்டும்.

இன்றைய சமூக சூழலில் டி வியும், இணையமும், சினிமாவும் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் படிக்கும் குழந்தைகள் வீட்டில் டிவியிலும் கணிணியிலும் தம் கவனத்தை அதிகம் வைக்கிறார்கள். நாம்தான் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது.


மொத்ததில் ஆரம்பக் கல்வியை குழந்தைகளுக்கு அளிப்பதில் அரசு, பள்ளி, ஆசிரியர், பெற்றோர் என்ற நான்கு சமூகமும் இணைந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கம், ஆரம்பக்கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் செம்மையாக கிடைக்க அருள் செய்யுங்க..

சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Monday, January 9, 2012

கடவுள் மறுப்பு ஏன்?

கடவுளைப் பற்றிய பல விவாதங்களில் என்னிடம் எழுப்பட்ட பல சந்தேகங்களில் இருந்து ஏன் சிலர் கடவுளை மறுக்கிறார்கள் என ஆராய முற்பட்டதன் விளைவுதான் இந்த பதிவு. கடவுள் மறுப்பு என்பது அவர்களின் விருப்பம் என்றாலும், அவர்கள் இதுகுறித்து எழுப்பிய சில கேள்விகள் மிகவும் சங்கடமானவையே. அது குறித்து :

1) கடவுள் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்தான் கடவுள் மறுப்பின் ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. இதில் கடவுள் பங்கு நேரடியாக‌ இல்லை எனினும், கடவுளை முன்னிறுத்தி சில சமூகத்தினர் விளையாடிய அரசியல் விளையாட்டில் வாழ்வையும் உரிமையையும் பல தலைமுறைகளாக பறிகொடுத்தனர் பலர். அந்த அழுத்தத்தின் விளைவு கடவுள் மறுப்பாக வெளிப்பட்டது.

2) கடவுள் என்பவர் மந்திர / மாய சக்தி கொண்ட இன்னொரு மனிதராக அடையாளப்படுத்தி எண்ணுதல். அப்படிப்பட்ட யாரும் இங்கு வெளியில் இல்லை. நமக்குள்ளே இருக்கும் கடவுளை வெளிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட அடையாளக் குறியீடுகள்தான் இந்த கடவுளர்கள். இது கடவுளை தவறாக புரிந்துகொண்டதன் விளைவே.

3) கடவுள் என்று ஒருவர் இருந்தால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வோ, ஊழல், லஞ்சம், துரோகம், போர், இயற்கை சீற்றம் இவை இருக்க முடியாது/ கூடாது என எண்ணுதல். அந்தர் யாமியாக நமக்குள் இருக்கும் கடவுள் நம் மூலம்தான் செயல்படுகிறார். மேலும் கடவுள் நன்மை மட்டுமே செய்பவர் என்ற மாய தோற்றமும் இருக்கிறது. நாம் செய்யும் நல்ல வினைகளுக்கு நல்ல செயல்களும், தீய வினைகளுக்கு தீய செயல்களையும் தரும் கருவியாகவே கடவுள் இருக்கிறார். நம்மைப் போன்ற மனிதர்களாலும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கர்ம வினைகளாலும்தான் இந்த சமூக அரசியல் இவ்வாறு இருக்கிறதே ஒழிய இது கடவுளின் விருப்பப்ப‌ட்ட நேரடி செயல் அல்ல. இதுவும் கடவுளை தவறாக புரிந்து கொண்டதன் விளைவுதான். மனிதன் செய்யும் வினைகளுக்கு கடவுளை பலிகடா ஆக்கி விட்டார்கள்.

4) நம் வாழ்வில் ஏற்படு நல் / தீய கர்மங்கள் பற்றிய குறுகிய அறிவு. நாம் காணும் வாழ்க்கை / பிறப்பு என்பது இப்போது இருப்பது மட்டுமல்ல. நம் ஆன்மா பயணப்பட்ட பல உடல்களில் நாம் இருந்தபோது செய்த வினைகளின் பயன் தான் நாம் இப்போது அனுபவிப்பது. ஆனால் இந்த பல பிறவிகளைப் பற்றிய தேற்றம் பொதுவில் நிறுவ முடியாதபடி இருப்பதால் இந்த குழப்பம் வந்து கடவுள் மறுப்பாக மறுவி விட்டது.

5) இறுதியாக சமூக சூழல் சம்பந்தப்பட்டது. சேரும் நட்பும் சுற்றமும் கடவுள் மறுப்பில் இருக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு தானும் கடவுள் மறுப்பை கைகொள்வது. எப்படி ஒரு மதத்தினரின் குடும்ப சூழலில் வளரும் குழந்தை அந்த மதத்தை கைகொள்கிறதோ அதுபோல.மொத்தத்தில் கடவுள் மறுப்பு என்பதும் இப்போது இன்னொரு மதம்போல ஆகிவிட்டது.

மனிதன் கடவுளை மறுப்பதில் தவறு எதுவும் இல்லை. தன் வாழ்வில் நேர்மையும், தன்னம்பிக்கையும், மனசாட்சிப்படி நடக்கும் வல்லமையும், சக மனிதனின் மேல் அக்கரையும், அன்பும் உடைய எவரும் கடவுளை நம்ப அவசியமில்லை. ஒவ்வொரு மதமும், கடவுளும் மனிதனுக்கு இதை சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத்தத்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன‌.

கடவுளே மஹாலிங்கம், இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும், நேர்மையோடும், சக மனிதன் மேல் அன்பும், அக்கரையும் கொண்டு, மனசாட்சிப்படி நடக்க நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தமஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Friday, January 6, 2012

கடவுள் இருக்கிறாரா?

சில வருட‌ங்களுக்கு முன் எனது நண்பர் ஒருவருடன் காரசாரமான விவாதம். கடவுள் இருக்கிறாரா என்பதைப் பற்றி. கடவுள் இருக்கிறார் என நானும், கடவுள் என்பவர் இல்லவே இல்லை, எல்லாம் ஏமாற்று வேலை என என் நண்பரும்.

வாதங்களும் பிரதி வாதங்களும் மாற்றி மாற்றி சுழற்றி அடிக்க, இருவருமே அவரவர் நிலையில் இருந்து இறங்கவே இல்லை. சலித்து விட்டது. கடைசி வரை என்னால் எனது நண்பரை கடவுள் இருக்கிறார் என நம்ப வைக்க முடியவில்லை. அப்போது மிகவும் வருத்தமாக இருந்தது.

சில நாட்கள் கழித்து எனது இன்னொரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவருடன் இந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டேன். அவர் அப்போது இந்த கடவுள் விவாதம் குறித்து எனக்கு கூறிய சில விசயங்கள் உண்மையில் மிகவும் ஆச்சரியப்படத் தக்கதானதாக இருந்தது. அவற்றில் சில :

1) மனிதன் கடவுளை தன் புலன்களால் உணர நினைக்கிறான். ஆனால் கடவுள் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்.

2) நாம் வேண்டியதை உடனேயே நிறைவேற்றி தரும் கடவுளையே எல்லோரும் தேடுகின்றார்கள். ஆனால் கடவுள் இவற்றுக்கு அப்பாற்பட்டு நிற்கிறார். எல்லோருக்கும் எல்லா வேண்டுதல்களும் எப்போதுமே நிறைவேறுவதில்லை.

3) கடவுளை வணங்கினால் அவர்களுக்கு பிரச்சினைகள் வராது அல்லது குறைவாக வரும் என்பது மூட நம்பிக்கை. அதிகம் கடவுளை வணங்குபவர்களுக்கு அவர்களுடைய கர்ம கணக்கு விரைவில் தீர அதிக கஷ்டங்கள் வரும் வாய்ப்புதான் அதிகம்.

4) எவ்வளவு தவறு செய்தாலும் கடவுளிடம் சென்று ஒரு முறை மன்னிப்பு கேட்டால் அல்லது காணிக்கை செலுத்தினால் எல்லாம் சரியாகி விடும். மீண்டும் அடுத்த தவறு செய்ய தயாராகலாம். இதுவும் ஒரு மடத்தனமான நம்பிக்கை.

5) கர்மா என்று ஒன்று இருக்கிறது, இது பாவம், இது புண்ணியம் என நம்புகின்றவர்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இருக்கும் அல்லது ஏற்படுத்த முடியும். கர்மாவை நம்பாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்த முடியாது.

6) கடவுள் என்பதை நம்புவது அவரவர் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களின் அளவையும் அவற்றை தீர்க்க அவரவருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களின் நிலையையும் பொருத்தது.

சிலருக்கு கஷ்டங்கள் வரும்போதே அவற்றுக்கான தீர்வும் உடன் வரும். இவர்களுக்கு பல நேரம் ஓரளவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும்.

சிலருக்கு கஷ்டங்களை அதிகம் அனுபவித்த பிறகு அவர்கள் நம்பிக்கையின் விளிம்பில் இருக்கும் போது தீர்வு வரும். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும்.

சிலருக்கு கஷ்டங்களின் விடிவு என்பது அவர்கள் காணும்போது வராமலே போகலாம். இவர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவோ அல்லது ஞானிகளாகவோ ஆக வாய்ப்பு இருக்கிறது.

சிலர் கஷ்டங்களே ஏற்படாத ஒரு வசதியான நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு அவரவர் குடும்ப, நட்பு சூழலைப் பொறுத்து கடவுள் நம்பிக்கை இருக்கும் அல்லது இல்லாமல் போகும்.

7) கடவுளை அவரவரே சாதகம் செய்து, கஷ்டப்பட்டு உணரவேண்டும். ஒருவர் வார்த்தைகளில் போதித்து மட்டும் இன்னொருவர் நிச்சயம் உணர முடியாது. எனவே கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. அது அவரவரே உணர்ந்து கொள்ளட்டும். இன்றைக்கு இல்லை என்று சொல்பவர் நாளைக்கே இருக்கிறது என்றும் சொல்லலாம். இன்றைக்கு இருக்கிறது என்று சொல்பவர் நாளைக்கே இல்லை என்றும் சொல்லலாம். அது கடவுள் தன்னை யாரிடம் எப்போது வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாரோ அதைப் பொறுத்தது.


கடவுளே மஹாலிங்கம்.. நீங்க உங்களை எல்லோரிடத்தும் வெளிப்படுத்திக் கிடணும்னு வேண்டிக்கிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Wednesday, January 4, 2012

ஆனந்த வாழ்வின் சூத்திர‌ம்..

நம் பிரார்த்தனைகள், நமக்கு எது இன்பம் தரும் என எண்ணுகிறோமோ, அதை வேண்டியே இருக்கின்றன. ஆனால் அவை நிறைவேறும்போது பல நேரங்களில் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏனெனில் நமக்கு என்ன தேவை என்பதை சரியாக கணிப்பதில் பல நேரங்களில் தவறி விடுகிறோம். எனவே நமது பிரார்த்தனைகள் நிறைவேறும்போது வரும் இன்பத்தைவிட அதனால் ஏற்பட்ட துன்பம் பெரிதாக இருக்கின்றது.

புதிய வீடு வாங்கவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் அதிக கடன்சுமை வரும்போது கவலை கொள்கிறோம். பிரமோஷன் வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கே நமக்கான‌ நேரம் நம்மை விட்டு போகும்போது துக்கமடைகின்றோம்.

நாம் ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் நாம் ஆனந்தத்தைப் பெறவேண்டும் என்பதற்காகவே செய்கிறோம். ஆனால் பல நேரங்களில் துக்கம் உண்டாக்கி விடுகின்றன.

குடும்பம், குழந்தை, வேலை, அயல்நாடு, ஆடம்பரப் பொருட்கள்... எல்லாவற்றிலும் இன்பமும் இருக்கின்றது.. துன்பமும் இருக்கின்றது.

வாழ்வில் எல்லாமே ஆனந்தமும் துக்கமும் கலந்தே இருக்கின்றன. ஆனந்தம் மட்டுமே தருவது என்றோ, துக்கம் மட்டுமே தருவது என்றோ எதுவுமே இல்லை.

நம் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு செயலிலும் ஆனந்த மயமான ஒரு பகுதி உண்டும். அதை பார்க்க கற்றுக் கொண்டு துக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள நம் மனம் பழக வில்லை என்பதுதான் நிஜம்.

உண்மையில் யோசித்துப் பார்த்தால், இந்த ஆனந்தமும் துக்கமும் வெளியுலக விஷயங்களுக்கு தொடர்பு இல்லாதது புரியும். உண்மையில் நம் மனம் நம் அகங்காரத்துடன் கை கோர்த்து நமக்குள் நடத்தும் நாடகம் தான் ஆனந்தமும் துக்கமும்.

மனித ஆத்மாவின் இயல்பு ஆனந்தம்தான். எனவேதான் நாம் அந்த ஆனந்தத்தை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கின்றோம். அது வெளியில் எங்கும் இல்லை. நம் மனதில்தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. மனம் ஆழ்ந்த அமைதி பெறும்போது இந்த ஆனந்தம் தானே வெளி வருகிறது.

நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் லட்சியமே இந்த உள்ளிருக்கும் ஆனந்தத்தை எப்படி கண்டு பிடிப்பது என்பதுதான். ஆன்மீகம் அதற்கு பெரிதும் துணை புரிகிறது.  தியானமும் யோகமும் நமக்கு இந்த ஆனந்தத்தை கண்டுபிடித்து தருகின்றன.

வெளிச்சம் போன்ற இந்த ஆன்ம ஆனந்தம் இருக்கும்போது மனம் தானாகவே துக்கம் எனும் இருளை விரட்டி விடுகிறது. இந்த ஆனந்த வெளிச்சம் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நீக்கமற நிறைகிறது. இதுதான் ஆனந்த வாழ்வின் சூத்திரம்.

கடவுளே மஹாலிங்கம்.. எல்லோரும் ஒரு ஆனந்தமயமான வாழ்வை வாழ அருள் செய்யுங்க..

சதுரகிரி நாயகனே சரணம்..