Tuesday, January 17, 2012

அடிப்படை ஆரம்பக் கல்வி..

எனது 5 வயது மகனையும் இன்னும் 4 மாணவர்களையும் இந்த கல்வியாண்டில் இருந்து , வகுப்பில் நன்றாக படிப்பதாக சொல்லி,  எல் கே ஜி யில் இருந்து நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர சொல்லி இருந்தார்கள்.

கடந்த சில நாட்களாக அவ‌ன் பள்ளி செல்லும்போது அழுதுகொண்டே செல்கிறான். புதிய வகுப்பில் சேர்ந்ததிலிருந்தே இந்த அவஸ்தைதான். நேற்று, எனது மகனை படிக்க சொன்னபோது அழ ஆரம்பித்து விட்டான். நானும் பொறுமையாக அவனுக்கு எடுத்து சொல்லி படிக்க வைத்தேன். ஆனால் அவனால் எழுத்துக்களை முழுமையாக ஞாபகம் வைக்க முடியவில்லை என்பதையும் எழுத்து கூட்டி படிக்க முடியவில்லை என்பதையும் கவனித்தேன்.

இன்று அவனது பள்ளியில் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து இது குறித்து பேசி சற்று சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் செய்வதாக சொல்லி இருக்கிறார்.

இது சம்பந்தமாக யோசித்துக் கொண்டிருந்தபோது டைம்ஸ் ஆப் இந்தியாவில் கீழ்க்கண்ட செய்தியை படிக்க நேர்ந்தது.


அதாவது நமது நாட்டின் கிராமப்புற ஆரம்பப் பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு படிக்கவும் கணித திறமையிலும் அதிகபட்ச‌ குறைபாடுகள் இருப்பதாக ஒரு சர்வே சொல்கிறது.

இந்த செய்தியையும் இன்றைய எனது மகன் சம்பந்தமாக பள்ளியில் பேசிய நிகழ்வையும் இணைத்து என்னால் இந்த செய்திக்கான மூல காரணங்களை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.

எழுத்துக்களை மாணவர்களுக்கு போதித்து, அடிப்படை வாசிக்கும் பயிற்சி அளிக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியமானது. இந்த திறமையை வைத்துத்தான் மற்ற பாடங்களை மாணவர்கள் கற்க  முடியும். இதிலேயே தகராறு எனும்போது மிகவும் சிரமம்தான். இதற்கு சற்று அதிக காலம் எடுத்துக் கொண்டாலும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த அடிப்படை பயிற்சியை சிறப்பாக கொடுக்க அனைத்து முயற்சியையும் எடுக்க வேண்டியது ஒவ்வொரு ஆரம்பப் பள்ளியின் தார்மீக கடமை.

ஆனால், பள்ளியில் பாடத்திட்டத்தை முடிப்பதில் கவனம் செலுத்தும் ஆசிரியர்கள், அதை எத்தனை மாணவர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதில் கவனம் செலுத்துவதில்லை. மேலும் பெரும்பான்மை மாணவர்களாவது புரிந்து கொள்ளுமளவுக்கு அடிப்படை கல்வியை கவனமாக‌ போதிப்பதில்லை.

இப்போது எழுதப்படிக்க கற்றுத்தரும் ஆரம்பக்கல்வி என்பது சில நாட்களுக்குள் முடித்து மேற்பாடங்களை போதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு அரசு தலையிட்டு சரியான பாடத்திட்டம் உருவாக்கி, அதை முறையாக பின்பற்ற ஆவன செய்ய வேண்டும்.

இன்றைக்கு அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், தனியார் பள்ளிகளில் இப்படிப் பட்ட சம்பளம் தருவதில்லை. இதனால் ஒரு சிலர் தவிர மற்ற ஆசிரியர்களின் கற்பிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

நம் குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்களா என கண்காணிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதில் ஏதேனும் குறைபாடுகள் தெரிந்தால் உடனடியாக பள்ளியில் சென்று வகுப்பு ஆசிரியரிடமும், தலைமை ஆசிரியரிடமும் இது குறித்து ஆலோசனை செய்து ஆரம்பக் கல்வி சரியாக குழந்தைகளை அடைய ஆவன செய்ய வேண்டும்.

இன்றைய சமூக சூழலில் டி வியும், இணையமும், சினிமாவும் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் படிக்கும் குழந்தைகள் வீட்டில் டிவியிலும் கணிணியிலும் தம் கவனத்தை அதிகம் வைக்கிறார்கள். நாம்தான் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது.


மொத்ததில் ஆரம்பக் கல்வியை குழந்தைகளுக்கு அளிப்பதில் அரசு, பள்ளி, ஆசிரியர், பெற்றோர் என்ற நான்கு சமூகமும் இணைந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கம், ஆரம்பக்கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் செம்மையாக கிடைக்க அருள் செய்யுங்க..

சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

2 comments:

shanmugavel said...

தங்கள் மகனுக்கு போகப்போக சரியாகிவிடும் என்று தோன்றுகிறது.என் அண்ணன் மகனுக்கு இப்படி அனுபவம்.கல்வி பற்றி முக்கிய கருத்துக்கள்.பகிர்வுக்கு நன்றி

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், அவனுக்கு சரியாக இன்னும் பல நாட்கள் ஆகும்போல தெரியுது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..