Wednesday, December 29, 2010

இந்தியா முன்னேற.....

நமது தேசிய, மாநில தலைவர்களும், கட்சிகளும் போட்டிபோட்டுக்கிட்டு நம்ம நாட்டக் கொள்ள அடிக்கரதப்பாத்து, இந்தியா என்னிக்காவது முன்னேறுமான்னு எனக்கு சந்தேகம் ஏற்படுது.. அப்பிடி முன்னேறணும்னா அதுக்கு என்ன செய்யணும்... எதெல்லாம் நடக்கணும்னு இந்த சாமானியனின் கனவு...

இதெல்லாம் நடக்கணும் :

பஞ்சாயத்து லெவெல்ல ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நல்ல தன்னலமில்லாத , உண்மையான சேவை மனப்பான்மை உள்ள சிறு / பெருந்தலைவர்கள் உருவாகணும்.

பொதுமக்கள் தேர்தலப்போ, இந்த மாதிரித் தலைவர்கள கண்டுபிடிச்சு கட்சிபாகுபாடு இல்லாம தேர்ந்தெடுக்கணும்..

இவர்களுக்கும் அரசாங்க ஊழியர்களுக்கும் ஒரு கார்பரேட் கம்பெனியில குடுக்கிற நல்ல சம்பளம் தரப்படவேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தவறு செய்தால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். கீழ்க்கண்ட தண்டனைகள் சில சாம்பிள்கள் :

1) தவறு செய்யும் தலைவர்கள்/அதிகாரிகள் மற்றும் அவர்களின் சொந்த பந்தங்களின் பதவி , பாஸ்போர்ட் மற்றும் சொத்துக்கள் உடனே பறிக்கப்படவேண்டும்.

2) அவர்களின் மக்கள் பிரதிநிதித்துவமும் பறிக்கப்பட வேண்டும்.

3) அவர்களோ அல்லது அவர்களின் நேரடி உறவினர்களோ / சந்ததியினரோ மீண்டும் தேர்தல்களில் போட்டியிட / அரசுபதவிகளுக்குவர நிரந்தரத்தடைவிதிக்க வேண்டும்.

4) அவர்களுக்கு சட்டப்படி கடுமையான ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

அரசாங்க வேலைகளை எடுத்து நடத்தும் மற்றும் அரசுக்குப் பொருள்களை சப்ளை செய்யும் காண்ட்ராக்டர்கள் பொறுப்புடன் வேலைகளை செய்யவேண்டும். தவறுபவர்களுக்கு கடும் தண்டணை விதிக்கப்பட வேண்டும். மேற்கண்ட அரசியல்வாதி மற்றும் அரசு அதிகாரிகளுக்கான தண்டனையே இவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். கூடுதலாக அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளும் இதேமுறையில் தண்டிக்கப்படவேண்டும்.

தேவைஇல்லாத சட்டங்கள், சலுகைகள் ரத்து செய்யப்பட வேண்டும். மற்றும் தேவையான சட்டங்கள், சலுகைகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.

தேர்தல்களில் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் ஒருவர் மட்டும் தேர்ந்தெடுக்கப்படும் முறை ஒழிக்கப்பட்டு, அதிகமான வாக்குகள் (ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அல்லது சதவீதம்) வாங்கும் அனைவருக்கும் பிரதிநிதித்துவம் தரப்படவேண்டும்.

விவசாயம் தேசியத்தொழிலாக அங்கீகரிக்கப்படவேண்டும். இதற்கு கீழ்கண்டவைகளை செய்யவேண்டும் :

1) விவசாயநிலங்கள் / நீர் ஆதாரங்களும் அரசுடைமை ஆக்கப்பட வேண்டும். அவற்றை வேறு உபயோகங்களுக்கு மாற்றுவது தடை செய்யப்பட வேண்டும். அப்படி மாற்று உபயோகத்துக்கு விற்பவர்களிடம் இருந்து, இப்போது இருக்கக்கூடிய உரிமையாளர்களிடம் மார்க்கெட் விலையில் நிலங்களை அரசே வாங்கிக்கொள்ளலாம்.

2) விவசாயிகளுக்கு அரசாங்கம் அனைத்து வசதிகளும் செய்துதரவேண்டும். வீடு, வசதி, உணவுப்பொருள்கள், பென்சன், வாரிசுகளுக்குப் படிப்பு அனைத்தும்   இலவசமாகத் தரப்பட வேண்டும். அவர்களுக்கு இவைகளை செய்வதற்கு மற்ற விவசாயப்பொருள் நுகர்வோரிடம் தனி வரி வசூலித்துக்கொள்ளலாம்.

3) புதிதாக விவசாயம் செய்ய விரும்பும் அன்பர்களுக்கு களப்பயிற்சியும் வேலையும் தர அரசு தேவையான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

4) ஒவ்வொரு கம்பெனியும் ஒரு குறிப்பிட்ட அளவு விவசாயிகளை பணியில் அமர்த்தி, சம்பளம் கொடுத்து விவசாயம் செய்ய ஊக்குவிக்க வேண்டும். அரசாங்கம் இதை சட்டப்பூர்வமாக்கி கடுமையாக அமல் படுத்த வேண்டும்.

5) விவசாயிகளின் விளைபொருள்களின் வியாபாரத்துக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். விளைபொருள்களைப் பாதுகாக்க சரியான ஏற்பாடுகளை அந்தந்த ஏரியாக்களிலேயெ செய்து தர வேண்டும்.

6) விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அரசு முழுமையான ஊக்குவிப்பும் உதவிகளும் வழங்கவேண்டும்.

தேசத்தின் நீர் ஆதாரங்களான   நதிகள்,   ஏரிகள்,   கால்வாய்கள்   தேசியமயமாக்கப்பட்டுப்   பாதுகாக்கப்பட  வேண்டும்.


நம் ஆன்மீகப்பாரம்பரியம் சரியான பாதைக்கு செலுத்தப்பட்டு, ஒரு ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும்.

மக்களின் பசிப்பிணி ஒழிக்கப்பட்டு ஆன்மீகவழி காண்பிக்கப்பட வேண்டும்.

மதமாற்ற முறைகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்.

ஆன்மீகத்தின் பெயரால் தவறு செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.



என்ன பண்றது, என்னால இதுகளப்பத்திக் கனவுதான் காணமுடியுது...

அந்த சதுரகிரி சுந்தரமஹாலிங்கம் தான் இதுக்கு ஏதாவது ஒரு வழிபண்ணனும்..

அரோஹரா....

Tuesday, December 14, 2010

முடியல !! - நாட்டு நடப்பு !!! - ஒரு சாமானியனின் புலம்பல் !!!!

இப்பொல்லாம் பத்திரிக்கைகளை பிரிச்சா வெறுப்பா இருந்தது... ஏன்னா முதல் பக்கத்துல ஊழல் இத்யாதி விஷயங்க அதிகமா இருக்கு...அப்புறம் இது பயமா மாறிடுச்சு... ஏன்னா இந்த ஊழல்களின் பிரம்மாண்ட மதிப்புகள்... (நாம வாங்குற சம்பளத்த நினச்சா கேவலமா இருக்கு... இதுக்கு வரிவேற...இந்த ஊழல்களைப் பாக்குற எவனுக்கும் வரிகட்ட மனசு வராது.. )

வேற வழி இல்லாம இதை எல்லாம் பாத்துக்கிட்டு இருக்கோம்... இதுல நம்ம கைல இருக்கறது, வோட்டுப்போடுறப்ப சரியான ஆளுகளா தேர்ந்தெடுத்துத் தொலைக்குறதுதான்.

ஆனா இதுல ஒரு சிக்கல் இருக்கு. ரொம்ப அபூர்வமாதான் நல்லவங்க அரசியலுக்கு வராங்க. இப்பிடிப்பட்ட ஆட்கள அரசியல் கட்சிகள் தேர்தல்ல நிறுத்துறதும் ரொம்ப அபூர்வம். இப்பல்லாம் பெரும் பணக்காரர்கள், அரசியல் பினாமிக்கள், சமூக விரோதிகள், பெருமுதலாளிகளின் சேவகர்கள் இவர்கள் மட்டுமே தேர்தல்ல நிக்கிறாங்க. ஏன்னா இவங்களால மட்டும் தான் கோடிகளக் கொட்டி தேர்தல் செலவு செய்ய முடியுது. செலவு செய்யமுடியாதவங்க சுயேச்சையாத்தான் நிக்கணும்.

ஆனாலும் ஒருசில நல்லவங்க இப்பிடி சுயேச்சையா நிக்கறாங்க. ஆனா அவங்களாலயும் இப்பிடிப்பட்ட ஓட்டப்பந்தயம் மாதிரியான தேர்தல்கள்ல ஜெயிக்கிரது முடியாத காரியமா ஆயிருச்சு.

இப்போ வோட்டுப் போடுற ஜனங்களுக்கும், கட்சிகள் நல்லது பண்ணும்னு நம்பிக்கை கொறஞ்சிபொச்சு. இதுனாலதான் யாரு அதிகமா இலவசம் / கவர் தருறாங்களோ அவங்களுக்கு ஓட்ட விக்க ஆரம்பிச்சுட்டாங்க. "நம்மளால லச்சம் / கோடி அடிக்கமுடியாட்டியும் கொறஞ்சது இந்த இலவசம் / கவர் லெவெலுக்கு நாமளும் எடுத்துக்கலாம்" னு நினைக்குறாங்க.

எல்லாருக்கும் நல்லா தெறிஞ்சிருக்கு. "இது அவங்க குடுத்த வரிப்பணம்." "போனமுறை ஆட்சியில இருந்தப்போ அடிச்ச பணம்". "இப்பிடி வாங்கினாத்தான் உண்டு" "திரும்பவும் யார் ஜெயிச்சாலும் நமக்கு எந்த பிரயோசனமும் இல்ல"

உண்மைல ஒரு சிறந்த தலைவன உருவாக்குறதுக்கான களம்  / பட்டறை இப்பொ இல்ல. இப்பொ இருக்கிர சூழல்ல ஒரு அரசியல் தலைவர் நேர்மையா இருந்தாத்தான் அதிசயம். அவருக்குக்கூட நம்ம சமூகம் ஒரு நல்ல பேர் குடுத்து இருக்காங்க - "பொழக்கத் தெரியாதவர்"

நம்ம ஜனநாயகம் இப்பிடி சீறழிஞ்சு போனது ஏன்?

1) பேராசை. ஆடம்பர மோகம்.  இது தலைவர்கள் கிட்ட முதல்ல வந்தது. அவுங்களப் பாத்து படிப்படியா தொண்டர்கள்கிட்ட பரவுச்சு. அப்பிடியே இப்போ ஜனங்ககிட்ட ஊறிக்கிட்டு இருக்கு.

2) ஒரே இடத்துல அதிகமா பவர் குவிஞ்சு இருக்கறது. அந்த இடத்துல நல்லவங்க இருந்தவரை நமக்கு ஒண்ணும் தெரியல. அந்த தலைவர்கள பேராசையும் ஆடம்பர மோகமும் ஆக்கிரமிச்சபிறகு, இந்த நிலம ஆயிருக்கு.

3)  தராதரம் பாக்காம சொந்த பந்தங்களுக்கு / பந்து மித்திரர்களுக்கு பவர் இருக்குற பதவிகள குடுக்கறது.

4) பணத்தால என்ன வேணும்னாலும் சாதிக்கலாம்னு இருக்கற சூழல். மற்றும் பணத்துக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம்ங்ற மனோபாவம்.

5) தேர்தல் / அரசியல் -ங்றது அதிக பண முதலீடு தேவைப்படுற ஒரு தொழிலா ஆகிப் போனது.

6) பாவம் புண்ணியம் போன்ற வார்த்தை எல்லாம் கெட்டவார்த்தையா ஆனது.

7) பணமும் புகழுமே வாழ்க்கை லட்சியமா ஆனது. அதுக்காக எதுவும் செய்யலாங்கற மனோபாவம் வந்தது. இதுனால தனி மனித ஒழுக்கமெல்லாம் அர்த்தம் இல்லாமப் போனது.

8) ஜனங்க மேல நம்பிக்கை இல்லாமப் போனது. இதுக்காகத்தான் வி ஏ ஓ, தாசில்தார்னு பல அதிகாரிக நாம சொல்ற விஷயங்கள்லாம் சரி ன்னு சொல்றதுக்கு இருக்காங்க.


இன்னும் நிறய பட்டியல் போடலாம். ஆனா எதுக்கும் தீர்வுன்னு ஒண்ணும் உருப்படியா நினைக்க முடியல்ல.

இருந்தாலும் இந்த நிலமைல நாம என்ன செய்யலாம் ???

1) நம்ம அளவுக்கு சரியா இருக்கலாம். தனிமனித ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் தரலாம். தரணும்.

2) நாம கொஞ்சம் ஏமாந்தாலும், அடுத்தவன / அரசாங்கத்த ஏமாத்தாம இருக்கலாம். நேர்மையா இருக்கலாம்.

3) கண்டிப்பா எல்லா தேர்தல்லயும் நல்லவங்கள கண்டுபிடிச்சு(?)  கண்டிப்பா வோட்டுப்போடலாம். இந்த ஊழல் செய்ற ஆளுங்கள புறக்கணிக்கலாம். இல்லன்னா 49ஓ போடலாம்.

4) பாவ புண்ணியங்களப்பத்தி நாமளாவது யோசிக்கலாம். பக்தி மார்க்கத்த அதிகமா கடப்பிடிக்கலாம். (அங்கயும் இந்த மாதிரி ஆட்கள் அதிகமாயிட்டுவர்ராங்க :-(     )

5) நம்ம பிரார்த்தனைக்கு நல்ல சக்தி இருக்குன்னு சொல்றாங்க. அதுனால கடவுளே! இந்த நாட்டயும் எங்களயும் இந்தமாதிரியான ஆளுங்க கிட்ட இருந்து காப்பாத்துன்னு தீவிரமா பிரார்த்தனை பண்ணலாம்.

6) சோத்துல போடுற உப்போட அளவ நல்லா கொரச்சுக்கலாம். இதுனால சொரண கொஞ்சம் கொரயும். இந்த மாதிரியான் விஷயங்களப் பார்க்கரதுனால / கேக்குரதுனால வர்ர டென்சன் கொஞ்சம் கொரயும்.


கடவுளே! எங்களக் காப்பாத்து... 

Monday, December 13, 2010

ஆண்டவன் திருவிளையாடல் - 1 - கணபதி

ஒவ்வொருவர் வாழ்க்கைலயும் கடவுள் அவர் திருவிளையாடல நடத்திக்கிட்டுத்தான் இருக்கார். அவர் என் வாழ்க்கைல நடத்திய திருவிளையாடல இங்க பகிர்ந்துக்கிரேன்.

-----------------------------------------------------------------------------------------------

எனக்கு முதலில் அறிமுகமான கடவுள் கணபதி. என் பள்ளிப் பருவத்தில் அறிமுகமானார்.

அப்போதெல்லாம் ஒரு விளையாட்டுத்தனமாத்தான் கடவுளை கும்புடுவேன். கும்புடுவேன்னு சொல்றதவிட, கிண்டல்பண்ணிக்கிட்டு கும்பிடுர மாதிரி பாவலாபண்ணுவேன்.

என் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பிள்ளயார் கோவில்தான் அவர் இருப்பிடம். அவரைப் பார்க்க சும்மா வேடிக்கையாக இருக்கும். இதுக்காகவே இவர் என் இஷ்ட தெய்வம் ஆனார். 

ஓருமுறை என்னிடம் வகுப்பு ஆசிரியர் குடுத்த ஒரு முக்கியமான பேப்பர் காணாமல் போக இவரிடம் வேண்டிய பிறகு
மறுநாளே ஒரு நண்பன்மூலம் கிடைத்தது. அதன்பின் பக்தி ரொம்பவும்
கரைபுரண்டது. முதல்முறையா மனம் ஒன்றி சாமி கும்பிட்டேன்.

பிறகு அடுத்த வேண்டுதல். ஆனா இப்போ முழுசாப் பலிக்கலை. ஆனாலும் ஒரு நமபிக்கை. தொடர்ந்து அவரை கவனித்து வந்தேன். ஆனா அவருக்கு இருக்கற ஆயிரம் வேலைல என்ன சரியா கவனிக்க முடியலபோல.

பின்னால் இந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சுகிட்டே
வந்தது.காலேஜுக்கு போனதும், சுத்தமா போயிருச்சு. திரும்பவும் பழய மாதிரி ஆயிட்டேன்.

காலேஜ் படிச்சது திருப்பரங்குன்றத்துல.  ஒருமுறை முருகன் கோயிலுக்கு நண்பர்களோடு போயிருனந்தப்ப எனக்கும் கடவுளுக்கும் ஒரு சவால் ஆகிப் போச்சு.

"நாமளே எத்தனைதடவை இந்த கடவுளை வந்து பார்க்குறது. ஒருதடவையாவது இந்த கடவுள் நம்மள வந்து பார்க்கமாட்டாரா? இனி சாமிய நான் போயி பார்க்கனும்னா, முதல்ல அவர் என்ன வந்து பாக்கட்டும். அப்புறமா அவர நான் போயி பாக்கிறேன். "

அப்போ நினைக்கல. இந்த கடவுள் எப்பவுமே நம்ம பாத்துக்கிட்டு, நாம பேசுரத கேட்டுட்டு இருப்பார்னு. அவர் வந்தா எனக்கு எப்பிடி கண்டுபிடிக்கிறதுன்னுகூட தெரியாது. சும்மா ஒரு திமிர். ஒரு உதார். அவ்வளவே.

ஆனா இது என் வாழ்க்கைல எப்பிடி திரும்பிவரும்னு சத்தியமா அப்போ நான் நினைக்கவே இல்லை. ஆனா வந்தது. எல்லாம் விதி.

-அடுத்த பதிவுல தொடர்வேன்.