சென்ற வாரம் பட்ஜெட் உரை கமென்ட்ரி கேட்ட போது ஒரு முக்கிய விஷயம் பிடிபட்டது.நமது அரசியல் வாதிகள் எல்லாவற்றையும் பேசியே முடித்து விடுவார்கள். செயலில் ஒன்றுமே செய்வதில்லை. பொது மக்களுக்காக சேவை செய்வது என்பது எல்லாம் பொய். முதலாளிகளுக்குத்தான் சேவை செய்வோம் என்று சொல்லாமல் சொல்வது போல இருந்தது.
எனது முந்தய ஒரு பதிவில் ஒரு அன்பர் (அனானிமஸ்) "ஆலோசனை சொன்னது போதும், களத்துக்கு வந்து போராடுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது அதன் அர்த்தம் எனக்கு சரியாக விளங்கவில்லை. ஆனால் இந்த பட்ஜெட் உரையைப் படித்தபோது இதன் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக விளங்குகிறது. இது மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றவது என்ற சிந்தனையுடனே தயாரிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது.
இந்த நிலை மாற வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?? இந்த நிலை மாற அரசியல் மாற்றத்தைவிட ஒரு சமூக மாற்றமே அவசியமாகப் படுகிறது.
களப்போராட்டம் ஒரு முக்கியமான வழி.. அது எல்லாராலும் செய்யப்படுவது சாத்தியமாகாது. ஆனாலும் முடிந்த அளவு அனைவரும் பங்குகொள்ள முயற்சி செய்யவேண்டும். இதில் இரண்டு வகை இருக்கிறது. சாத்வீக வழி. வன்முறை வழி.
சாத்வீக வழியில் போராடும் மக்களுக்கு அரசுவன்முறை பரிசாக வழங்கப் பட்டு சில பல மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் ஆந்திராவில் நடந்த போலீஸ் தாக்குதல். அல்லது போராட்ட உரிமையே மறுக்கப்பட்டு வன்முறைக்குத் தூண்டுகிறார்கள்.
எனவே பொதுமக்களும் பெரும்பாலும் சாத்வீக போராட்டத்துக்கு வரும்போது அரசியல் சார்பு உடைய போராட்டங்களுக்கே வருகிறார்கள். ஏனெனில் அவர்களுக்கு அதில் ஆதாயமாக பணமோ அல்லது உணவோ அல்லது மதுவோ அல்லது இவை அனைத்துமோ வழங்கப்படுகிறது. போராட்டஙகளுக்கு ஆட்கள் சேர்ந்த நாள் போய் ஆட்களை சேர்க்கவேண்டிய நாள் வந்து விட்டது.
மேலும் நம் மக்க்ளுக்கு ஒரு குழு மனப்பான்மை பெரும்பாலும் இல்லாமல் போய்விட்டது. இப்போது நமது நிலை ஒரு நெல்லிக்காய் மூட்டை போலவே இருக்கிறது. ஒரு குழுவாக ஒன்று சேர முனைப்பு என்பதே இல்லை. இதை குழந்தையிலிருந்தே வளர்க்கவேண்டும். திடீரென்று வராது. ஒரு கேரளாவிலோ மேற்கு வங்கத்திலோ இருக்கும் குழு மனப்பான்மை நம் தமிழகத்தில் நிச்சயம் இல்லை.
இதற்கு முக்கிய காரணம் நம்மிடையே தன்னலமற்ற தலைமை இல்லை. ஒரு போராட்டம் நடந்தால் அதனால் ஒரு அரசியல்வாதிக்கு ஆதாயம் என்றால்தான் நடக்கிறது. உண்மையில் பொதுநலம் சார்ந்து எந்தப் போராட்டமும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.இதனாலேயே பொது மக்களுக்கு போராடவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலும் குறைந்துவிட்டது.
இது திட்டமிட்டே செய்யப்பட்டதாகவே தோன்றுகிறது.போராடாத மக்களிடம் ஈசியாக கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணமே காரணம்.
வன்முறை வழியில் செல்லும் மக்களுக்கு நக்ஸலைட் என்ற பட்டமோ, தீவிர வாதி என்ற பட்டமோ கொடுத்து, ஒரு சமூகத்தையே அழிக்கும் அளவுக்கு வன்மத்துடன்தான் நமது அரசாங்கம் இருக்கிறது.
உண்மையில் இப்போது களப்போராட்டத்தில் இருப்பவர்களில் பெரும்பாலோனோர் சுயமாகப் பாதிக்கப்பட்டு வேறு வழி இல்லாமலே போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்களே... இவர்கள் மற்றவர்களை துணைக்கு அழைக்கும் போது உதவி செய்வது நமது கடமை என்றே எண்ணுகிறேன்.
களப்போராட்டம் தவிர வேறு வழி ஒன்றும் உள்ளது. அது ஆன்மீக அறப்போராட்டம். இது ஒவ்வொருவரும் தத்தமது மனதுக்குள் "நன்மைகள் நடைபெறவேண்டும்" என்று தீவிரமாக சிந்திப்பதால் ஏற்படும். நமது இன்றைய சிந்தனைகளே நாளைய செயல்களாக பரிணமிக்கின்றன. எனவே நல்லதையே சிந்திப்போம் நலம் பெறுவோம்.
நமது மனம் என்று தனியாக இருப்பது போல எல்லாருக்கும் பொதுவான ஒரு மனம் என்பதும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.நமது தனிப்பட்ட மனதில் ஏற்படும் சிந்தனைகள் இந்த பொது மனத்தில் பிரதிபலிக்கின்றன. அந்த சிந்தனை சற்று வலிமையானதாக இருக்கும்பட்சத்தில், அதை மேலும் சிலர் கிரகித்து அதே திசையில் சிந்திக்கத் தொடங்குகிறார்கள். சில பல வலிமையான சிந்தனைகள் சேரும்போது அது ஒரு பொது இயக்கமாக , மௌனப் புரட்சியாக, இயற்கை சீற்றமாக வெடிக்கிறது. நிரந்தரமான மாற்றம் மன அளவில்தான் முதலில் ஏற்பட வேண்டும். பிறகு அதுவே செயல்களிலும் எதிரொலிக்கத்தொடங்கும்.
இதைத்தான் நமது வள்ளுவப்பெருந்தகை கீழ்க்கண்டவாறு கூறுகிறார் :
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல்.
கள்ளத்தால் கள்வேம் எனல்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்.
நன்னயம் செய்து விடல்.
இவ்விரண்டு குறள்களும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.ஏனெனில் உள்ளத்தில் நினைக்கும்போதே சரியாக நினைக்கத்தூண்டுவதும் மற்றும் மன்னித்தல் மூலம் மனதளவில் உள்ள பகைமையை முறித்தல் போன்ற கருத்துக்கள் இன்றைய சமூக சூழலில் மிகவும் தேவையாக இருக்கிறது.
நமது சிந்தனைகள் வலிமையாக என்ன செய்யவேண்டும்? இதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன.
1) தெளிந்த மனநிலை எப்போதும் இருந்து, ஆழ்ந்த சமூக சிந்தனையுடன் இருத்தல்.
2) மனதளவில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற தீராத தாகம் போன்ற வேட்கை
3) இயற்கையாக இப்படிப்பட்ட மனநிலை இல்லாதவர்களுக்கு, யோகா, தியானம் கற்றுக் கொண்டால் இவை கைவரப் பெறும்.
4) பக்தியும் பிரார்த்தனைகளும் இதற்கு மேலும் வலிமை சேர்க்கும்.
5) நம் குழந்தைகளுக்கு சமூக சிந்தனையை ஊட்டி வளர்த்தல்.
இவைகளை செய்தால் ஆன்மீக புரட்சி ஏற்பட்டு நிரந்தர மாற்றம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.
ஆண்டவா... சதுரகிரி சுந்தரமஹாலிங்கம்.. நீங்கதான் இப்படிப்பட்ட நிரந்தர மாற்றம் ஏற்பட ஏற்பாடு செய்யணும்.
ஓம் நம சிவாய... சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு அரோகரா....