Friday, January 27, 2012

நம் குடியரசுக்கு வந்த வியாதிகள்..

நம் தேசம் சுதந்திரமடைந்து, புதிய அரசியலமைப்பு சட்டத்தை கைக்கொண்ட நினைவு தினம் நம் குடியரசு தினம். இந்த நாளில் நமது தேசத்தின் முன்னேற்றத்தினை தடுத்துக்கொண்டிருக்கும் சில பிரச்சினைகளை பற்றிய எனது அனுமானத்தை முன் வைக்கிறேன்..


தனிமனித ஒழுக்கமும், கடமை உணர்வும், நேர்மையும், சத்தியமும் அபாயமான அளவுக்கு குறைந்துபோனது.

மக்களிடையே குறைந்துவரும் சமூக பொறுப்பும், அதிகரிக்கும் வடிகட்டிய சுயநல சிந்தனைகளும்.

பணம் பிரதானமாகவும், மனிதம் கடைசியாகவும் கருத்தப்படும் ஒரு வாழ்வியலை கைக்கொள்ளும் ஒரு தலைமுறை உருவெடுத்தது.

அதிகரித்துவரும் குடி/போதைப்பழக்கமும், அதுதான் நாகரீகம் என இளைய சமுதாயம் தீவிரமாக நம்புவதும்.

சிதைந்துவரும் விவசாயத்தை அடியோடு புறக்கணிக்கும் அரசாங்கம்.

அரசாங்கத்தில் மலிந்துவிட்ட லஞ்சமும் ஊழலும்.

அதிகரிக்கும் விலைவாசியும், உயரும் வறுமையும்.

சட்டங்கள் சரியான முறையில், எல்லோருக்கும் சமமாக அமல் படுத்தப்படாதது. வலுத்தவனுக்கு ஒருவிதமாகவும், இளைத்தவனுக்கு ஒருவிதமாகவும் அமலாகும் சட்டங்களும் அதை அமல்படுத்துபவர்களும்.

சட்டங்களில் இவ்வளவு ஓட்டைகள் இருப்பது தெரிந்தும் அதை அடைக்க யாரும் பெரிய அளவில் முயற்சி செய்யாதது. மற்றும் புதிய சட்டங்கள் செய்யும்போதும் பொத்தல்களுடனேயே செய்ய  முனைவது.


கடவுளே, மஹாலிங்கம், நினைக்கையிலேயே கண்ணைக் கட்டுதே.. ஏதாவது செஞ்சு நம்ம தேசத்து மக்களை காப்பாத்துங்க..

சதுரகிரி நாயகனே சரணம்.. சரணம்..

Tuesday, January 17, 2012

அடிப்படை ஆரம்பக் கல்வி..

எனது 5 வயது மகனையும் இன்னும் 4 மாணவர்களையும் இந்த கல்வியாண்டில் இருந்து , வகுப்பில் நன்றாக படிப்பதாக சொல்லி,  எல் கே ஜி யில் இருந்து நேரடியாக ஒன்றாம் வகுப்பில் சேர சொல்லி இருந்தார்கள்.

கடந்த சில நாட்களாக அவ‌ன் பள்ளி செல்லும்போது அழுதுகொண்டே செல்கிறான். புதிய வகுப்பில் சேர்ந்ததிலிருந்தே இந்த அவஸ்தைதான். நேற்று, எனது மகனை படிக்க சொன்னபோது அழ ஆரம்பித்து விட்டான். நானும் பொறுமையாக அவனுக்கு எடுத்து சொல்லி படிக்க வைத்தேன். ஆனால் அவனால் எழுத்துக்களை முழுமையாக ஞாபகம் வைக்க முடியவில்லை என்பதையும் எழுத்து கூட்டி படிக்க முடியவில்லை என்பதையும் கவனித்தேன்.

இன்று அவனது பள்ளியில் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து இது குறித்து பேசி சற்று சிறப்பு கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டேன். அவரும் செய்வதாக சொல்லி இருக்கிறார்.

இது சம்பந்தமாக யோசித்துக் கொண்டிருந்தபோது டைம்ஸ் ஆப் இந்தியாவில் கீழ்க்கண்ட செய்தியை படிக்க நேர்ந்தது.


அதாவது நமது நாட்டின் கிராமப்புற ஆரம்பப் பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு படிக்கவும் கணித திறமையிலும் அதிகபட்ச‌ குறைபாடுகள் இருப்பதாக ஒரு சர்வே சொல்கிறது.

இந்த செய்தியையும் இன்றைய எனது மகன் சம்பந்தமாக பள்ளியில் பேசிய நிகழ்வையும் இணைத்து என்னால் இந்த செய்திக்கான மூல காரணங்களை ஓரளவுக்கு கணிக்க முடிகிறது.

எழுத்துக்களை மாணவர்களுக்கு போதித்து, அடிப்படை வாசிக்கும் பயிற்சி அளிக்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியமானது. இந்த திறமையை வைத்துத்தான் மற்ற பாடங்களை மாணவர்கள் கற்க  முடியும். இதிலேயே தகராறு எனும்போது மிகவும் சிரமம்தான். இதற்கு சற்று அதிக காலம் எடுத்துக் கொண்டாலும் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த அடிப்படை பயிற்சியை சிறப்பாக கொடுக்க அனைத்து முயற்சியையும் எடுக்க வேண்டியது ஒவ்வொரு ஆரம்பப் பள்ளியின் தார்மீக கடமை.

ஆனால், பள்ளியில் பாடத்திட்டத்தை முடிப்பதில் கவனம் செலுத்தும் ஆசிரியர்கள், அதை எத்தனை மாணவர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதில் கவனம் செலுத்துவதில்லை. மேலும் பெரும்பான்மை மாணவர்களாவது புரிந்து கொள்ளுமளவுக்கு அடிப்படை கல்வியை கவனமாக‌ போதிப்பதில்லை.

இப்போது எழுதப்படிக்க கற்றுத்தரும் ஆரம்பக்கல்வி என்பது சில நாட்களுக்குள் முடித்து மேற்பாடங்களை போதிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு அரசு தலையிட்டு சரியான பாடத்திட்டம் உருவாக்கி, அதை முறையாக பின்பற்ற ஆவன செய்ய வேண்டும்.

இன்றைக்கு அரசு ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும், தனியார் பள்ளிகளில் இப்படிப் பட்ட சம்பளம் தருவதில்லை. இதனால் ஒரு சிலர் தவிர மற்ற ஆசிரியர்களின் கற்பிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

நம் குழந்தைகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்களா என கண்காணிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. இதில் ஏதேனும் குறைபாடுகள் தெரிந்தால் உடனடியாக பள்ளியில் சென்று வகுப்பு ஆசிரியரிடமும், தலைமை ஆசிரியரிடமும் இது குறித்து ஆலோசனை செய்து ஆரம்பக் கல்வி சரியாக குழந்தைகளை அடைய ஆவன செய்ய வேண்டும்.

இன்றைய சமூக சூழலில் டி வியும், இணையமும், சினிமாவும் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் படிக்கும் குழந்தைகள் வீட்டில் டிவியிலும் கணிணியிலும் தம் கவனத்தை அதிகம் வைக்கிறார்கள். நாம்தான் சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டி இருக்கிறது.


மொத்ததில் ஆரம்பக் கல்வியை குழந்தைகளுக்கு அளிப்பதில் அரசு, பள்ளி, ஆசிரியர், பெற்றோர் என்ற நான்கு சமூகமும் இணைந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்க முடியும்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கம், ஆரம்பக்கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் செம்மையாக கிடைக்க அருள் செய்யுங்க..

சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Monday, January 9, 2012

கடவுள் மறுப்பு ஏன்?

கடவுளைப் பற்றிய பல விவாதங்களில் என்னிடம் எழுப்பட்ட பல சந்தேகங்களில் இருந்து ஏன் சிலர் கடவுளை மறுக்கிறார்கள் என ஆராய முற்பட்டதன் விளைவுதான் இந்த பதிவு. கடவுள் மறுப்பு என்பது அவர்களின் விருப்பம் என்றாலும், அவர்கள் இதுகுறித்து எழுப்பிய சில கேள்விகள் மிகவும் சங்கடமானவையே. அது குறித்து :

1) கடவுள் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்தான் கடவுள் மறுப்பின் ஒரு ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. இதில் கடவுள் பங்கு நேரடியாக‌ இல்லை எனினும், கடவுளை முன்னிறுத்தி சில சமூகத்தினர் விளையாடிய அரசியல் விளையாட்டில் வாழ்வையும் உரிமையையும் பல தலைமுறைகளாக பறிகொடுத்தனர் பலர். அந்த அழுத்தத்தின் விளைவு கடவுள் மறுப்பாக வெளிப்பட்டது.

2) கடவுள் என்பவர் மந்திர / மாய சக்தி கொண்ட இன்னொரு மனிதராக அடையாளப்படுத்தி எண்ணுதல். அப்படிப்பட்ட யாரும் இங்கு வெளியில் இல்லை. நமக்குள்ளே இருக்கும் கடவுளை வெளிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட அடையாளக் குறியீடுகள்தான் இந்த கடவுளர்கள். இது கடவுளை தவறாக புரிந்துகொண்டதன் விளைவே.

3) கடவுள் என்று ஒருவர் இருந்தால் சமூகத்தில் ஏற்றத்தாழ்வோ, ஊழல், லஞ்சம், துரோகம், போர், இயற்கை சீற்றம் இவை இருக்க முடியாது/ கூடாது என எண்ணுதல். அந்தர் யாமியாக நமக்குள் இருக்கும் கடவுள் நம் மூலம்தான் செயல்படுகிறார். மேலும் கடவுள் நன்மை மட்டுமே செய்பவர் என்ற மாய தோற்றமும் இருக்கிறது. நாம் செய்யும் நல்ல வினைகளுக்கு நல்ல செயல்களும், தீய வினைகளுக்கு தீய செயல்களையும் தரும் கருவியாகவே கடவுள் இருக்கிறார். நம்மைப் போன்ற மனிதர்களாலும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கர்ம வினைகளாலும்தான் இந்த சமூக அரசியல் இவ்வாறு இருக்கிறதே ஒழிய இது கடவுளின் விருப்பப்ப‌ட்ட நேரடி செயல் அல்ல. இதுவும் கடவுளை தவறாக புரிந்து கொண்டதன் விளைவுதான். மனிதன் செய்யும் வினைகளுக்கு கடவுளை பலிகடா ஆக்கி விட்டார்கள்.

4) நம் வாழ்வில் ஏற்படு நல் / தீய கர்மங்கள் பற்றிய குறுகிய அறிவு. நாம் காணும் வாழ்க்கை / பிறப்பு என்பது இப்போது இருப்பது மட்டுமல்ல. நம் ஆன்மா பயணப்பட்ட பல உடல்களில் நாம் இருந்தபோது செய்த வினைகளின் பயன் தான் நாம் இப்போது அனுபவிப்பது. ஆனால் இந்த பல பிறவிகளைப் பற்றிய தேற்றம் பொதுவில் நிறுவ முடியாதபடி இருப்பதால் இந்த குழப்பம் வந்து கடவுள் மறுப்பாக மறுவி விட்டது.

5) இறுதியாக சமூக சூழல் சம்பந்தப்பட்டது. சேரும் நட்பும் சுற்றமும் கடவுள் மறுப்பில் இருக்கும்போது கண்ணை மூடிக் கொண்டு தானும் கடவுள் மறுப்பை கைகொள்வது. எப்படி ஒரு மதத்தினரின் குடும்ப சூழலில் வளரும் குழந்தை அந்த மதத்தை கைகொள்கிறதோ அதுபோல.மொத்தத்தில் கடவுள் மறுப்பு என்பதும் இப்போது இன்னொரு மதம்போல ஆகிவிட்டது.

மனிதன் கடவுளை மறுப்பதில் தவறு எதுவும் இல்லை. தன் வாழ்வில் நேர்மையும், தன்னம்பிக்கையும், மனசாட்சிப்படி நடக்கும் வல்லமையும், சக மனிதனின் மேல் அக்கரையும், அன்பும் உடைய எவரும் கடவுளை நம்ப அவசியமில்லை. ஒவ்வொரு மதமும், கடவுளும் மனிதனுக்கு இதை சொல்லிக் கொடுத்து பக்குவப்படுத்தத்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன‌.

கடவுளே மஹாலிங்கம், இந்த உலகத்தில் இருக்கிற எல்லோரும், நேர்மையோடும், சக மனிதன் மேல் அன்பும், அக்கரையும் கொண்டு, மனசாட்சிப்படி நடக்க நீங்கதான் அருள் செய்யணும்.

சதுரகிரி சுந்தமஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Friday, January 6, 2012

கடவுள் இருக்கிறாரா?

சில வருட‌ங்களுக்கு முன் எனது நண்பர் ஒருவருடன் காரசாரமான விவாதம். கடவுள் இருக்கிறாரா என்பதைப் பற்றி. கடவுள் இருக்கிறார் என நானும், கடவுள் என்பவர் இல்லவே இல்லை, எல்லாம் ஏமாற்று வேலை என என் நண்பரும்.

வாதங்களும் பிரதி வாதங்களும் மாற்றி மாற்றி சுழற்றி அடிக்க, இருவருமே அவரவர் நிலையில் இருந்து இறங்கவே இல்லை. சலித்து விட்டது. கடைசி வரை என்னால் எனது நண்பரை கடவுள் இருக்கிறார் என நம்ப வைக்க முடியவில்லை. அப்போது மிகவும் வருத்தமாக இருந்தது.

சில நாட்கள் கழித்து எனது இன்னொரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவருடன் இந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டேன். அவர் அப்போது இந்த கடவுள் விவாதம் குறித்து எனக்கு கூறிய சில விசயங்கள் உண்மையில் மிகவும் ஆச்சரியப்படத் தக்கதானதாக இருந்தது. அவற்றில் சில :

1) மனிதன் கடவுளை தன் புலன்களால் உணர நினைக்கிறான். ஆனால் கடவுள் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்.

2) நாம் வேண்டியதை உடனேயே நிறைவேற்றி தரும் கடவுளையே எல்லோரும் தேடுகின்றார்கள். ஆனால் கடவுள் இவற்றுக்கு அப்பாற்பட்டு நிற்கிறார். எல்லோருக்கும் எல்லா வேண்டுதல்களும் எப்போதுமே நிறைவேறுவதில்லை.

3) கடவுளை வணங்கினால் அவர்களுக்கு பிரச்சினைகள் வராது அல்லது குறைவாக வரும் என்பது மூட நம்பிக்கை. அதிகம் கடவுளை வணங்குபவர்களுக்கு அவர்களுடைய கர்ம கணக்கு விரைவில் தீர அதிக கஷ்டங்கள் வரும் வாய்ப்புதான் அதிகம்.

4) எவ்வளவு தவறு செய்தாலும் கடவுளிடம் சென்று ஒரு முறை மன்னிப்பு கேட்டால் அல்லது காணிக்கை செலுத்தினால் எல்லாம் சரியாகி விடும். மீண்டும் அடுத்த தவறு செய்ய தயாராகலாம். இதுவும் ஒரு மடத்தனமான நம்பிக்கை.

5) கர்மா என்று ஒன்று இருக்கிறது, இது பாவம், இது புண்ணியம் என நம்புகின்றவர்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இருக்கும் அல்லது ஏற்படுத்த முடியும். கர்மாவை நம்பாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்த முடியாது.

6) கடவுள் என்பதை நம்புவது அவரவர் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களின் அளவையும் அவற்றை தீர்க்க அவரவருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களின் நிலையையும் பொருத்தது.

சிலருக்கு கஷ்டங்கள் வரும்போதே அவற்றுக்கான தீர்வும் உடன் வரும். இவர்களுக்கு பல நேரம் ஓரளவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும்.

சிலருக்கு கஷ்டங்களை அதிகம் அனுபவித்த பிறகு அவர்கள் நம்பிக்கையின் விளிம்பில் இருக்கும் போது தீர்வு வரும். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும்.

சிலருக்கு கஷ்டங்களின் விடிவு என்பது அவர்கள் காணும்போது வராமலே போகலாம். இவர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவோ அல்லது ஞானிகளாகவோ ஆக வாய்ப்பு இருக்கிறது.

சிலர் கஷ்டங்களே ஏற்படாத ஒரு வசதியான நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு அவரவர் குடும்ப, நட்பு சூழலைப் பொறுத்து கடவுள் நம்பிக்கை இருக்கும் அல்லது இல்லாமல் போகும்.

7) கடவுளை அவரவரே சாதகம் செய்து, கஷ்டப்பட்டு உணரவேண்டும். ஒருவர் வார்த்தைகளில் போதித்து மட்டும் இன்னொருவர் நிச்சயம் உணர முடியாது. எனவே கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. அது அவரவரே உணர்ந்து கொள்ளட்டும். இன்றைக்கு இல்லை என்று சொல்பவர் நாளைக்கே இருக்கிறது என்றும் சொல்லலாம். இன்றைக்கு இருக்கிறது என்று சொல்பவர் நாளைக்கே இல்லை என்றும் சொல்லலாம். அது கடவுள் தன்னை யாரிடம் எப்போது வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாரோ அதைப் பொறுத்தது.


கடவுளே மஹாலிங்கம்.. நீங்க உங்களை எல்லோரிடத்தும் வெளிப்படுத்திக் கிடணும்னு வேண்டிக்கிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

Wednesday, January 4, 2012

ஆனந்த வாழ்வின் சூத்திர‌ம்..

நம் பிரார்த்தனைகள், நமக்கு எது இன்பம் தரும் என எண்ணுகிறோமோ, அதை வேண்டியே இருக்கின்றன. ஆனால் அவை நிறைவேறும்போது பல நேரங்களில் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏனெனில் நமக்கு என்ன தேவை என்பதை சரியாக கணிப்பதில் பல நேரங்களில் தவறி விடுகிறோம். எனவே நமது பிரார்த்தனைகள் நிறைவேறும்போது வரும் இன்பத்தைவிட அதனால் ஏற்பட்ட துன்பம் பெரிதாக இருக்கின்றது.

புதிய வீடு வாங்கவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் அதிக கடன்சுமை வரும்போது கவலை கொள்கிறோம். பிரமோஷன் வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கே நமக்கான‌ நேரம் நம்மை விட்டு போகும்போது துக்கமடைகின்றோம்.

நாம் ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் நாம் ஆனந்தத்தைப் பெறவேண்டும் என்பதற்காகவே செய்கிறோம். ஆனால் பல நேரங்களில் துக்கம் உண்டாக்கி விடுகின்றன.

குடும்பம், குழந்தை, வேலை, அயல்நாடு, ஆடம்பரப் பொருட்கள்... எல்லாவற்றிலும் இன்பமும் இருக்கின்றது.. துன்பமும் இருக்கின்றது.

வாழ்வில் எல்லாமே ஆனந்தமும் துக்கமும் கலந்தே இருக்கின்றன. ஆனந்தம் மட்டுமே தருவது என்றோ, துக்கம் மட்டுமே தருவது என்றோ எதுவுமே இல்லை.

நம் வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு செயலிலும் ஆனந்த மயமான ஒரு பகுதி உண்டும். அதை பார்க்க கற்றுக் கொண்டு துக்கத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள நம் மனம் பழக வில்லை என்பதுதான் நிஜம்.

உண்மையில் யோசித்துப் பார்த்தால், இந்த ஆனந்தமும் துக்கமும் வெளியுலக விஷயங்களுக்கு தொடர்பு இல்லாதது புரியும். உண்மையில் நம் மனம் நம் அகங்காரத்துடன் கை கோர்த்து நமக்குள் நடத்தும் நாடகம் தான் ஆனந்தமும் துக்கமும்.

மனித ஆத்மாவின் இயல்பு ஆனந்தம்தான். எனவேதான் நாம் அந்த ஆனந்தத்தை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கின்றோம். அது வெளியில் எங்கும் இல்லை. நம் மனதில்தான் ஒளிந்து கொண்டிருக்கிறது. மனம் ஆழ்ந்த அமைதி பெறும்போது இந்த ஆனந்தம் தானே வெளி வருகிறது.

நம் ஒவ்வொருவரின் வாழ்நாள் லட்சியமே இந்த உள்ளிருக்கும் ஆனந்தத்தை எப்படி கண்டு பிடிப்பது என்பதுதான். ஆன்மீகம் அதற்கு பெரிதும் துணை புரிகிறது.  தியானமும் யோகமும் நமக்கு இந்த ஆனந்தத்தை கண்டுபிடித்து தருகின்றன.

வெளிச்சம் போன்ற இந்த ஆன்ம ஆனந்தம் இருக்கும்போது மனம் தானாகவே துக்கம் எனும் இருளை விரட்டி விடுகிறது. இந்த ஆனந்த வெளிச்சம் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நீக்கமற நிறைகிறது. இதுதான் ஆனந்த வாழ்வின் சூத்திரம்.

கடவுளே மஹாலிங்கம்.. எல்லோரும் ஒரு ஆனந்தமயமான வாழ்வை வாழ அருள் செய்யுங்க..

சதுரகிரி நாயகனே சரணம்..

Friday, December 30, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍- 4a குருவைத் தேடி-2

குரு அடையாளம் தெரிந்த சில நாட்களில் மீண்டும் குழப்பம் தலை தூக்க ஆரம்பித்தது. நம் குருவுக்கும் நாம் கும்பிடும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம்? இருவரையும் அருவமாகவே உணர முடிகிறது. நேரில் இருக்கும் குரு இருந்தால் நன்றாக இருக்குமே என்ற சிந்தனை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

எனது குருதேவரிடமே மீண்டும் பிரார்த்தனை ஆரம்பித்தது. எனக்கு தங்கள் ஆசியை கொண்டுவந்து கொடுப்பவர் இன்னார்தான் என அடையாளம் காட்ட வேண்டினேன்.

இந்த நேரத்தில், எனக்கு மஞ்சள் காமாலை நோய் தாக்கியது. உண்மையில் மனம் உடைந்து விட்டது. பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட காலம் என்பதால், மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டேன். 45 நாட்கள் அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு ஊர் சென்றுவிட்டேன்.  சம்பளம் தருவார்களா என தெரியவில்லை.  சோதனை மேல் சோதனை. குருவின் மீது பாரத்தைப் போட்டு இருந்தேன்.

அப்போது மன அழுத்தம் மிக அதிகமாகி கடவுள், குரு, சுற்றம்,  நட்பு எல்லாம் என்னை விட்டு விலகி அனாதை ஆகிவிட்டதுபோன்ற ஒரு உணர்வு ஆட்கொண்ட நேரம்.

அப்போது ஆனந்த விகடன் புத்தகத்தில் ஒரு ராஜ யோக பயிற்சியாளர் பண சம்பத்தை அளிக்கும் பூஜை கற்றுத்தர ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். ஜாதகத்துடன் விண்ணப்பிக்க சொல்லி இருந்தது.

இதற்கு விண்ணப்பித்து, அந்த பூஜைகள் செய்து ஏதாவது மாறுதல் ஏற்படாதா? என்ற நப்பாசையில் ஒரு விண்ணப்பம் தட்டி விட்டேன். சில நாட்களில் அதை மறந்தும் விட்டேன்.

உடல்நிலை ஓரளவு தேறி, மீண்டும் அலுவலகம் செல்ல ஆரம்பித்த சில நாட்களில் எனக்கு அந்த ராஜ யோக பயிற்சியாளர், அந்த பூஜை முறை கற்றுக்கொள்ள எனக்கு தகுதி இருப்பதாகவும், உடனடியாக கிளம்பி வரவும் என கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த கடிதத்தை படித்த விநாடியில் இருந்து எனக்கு ஏதோ ஆகிவிட்டது. மனம் ஒரு நிலையில் இல்லை. கட்டுப்பாடு இழந்து சிந்திக்க ஆரம்பித்தது. எப்படியாவது போக வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக‌ இருந்தது. ஆனால் பணம் செலவளித்து இதை கற்றுக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்ற சிந்தனை அலைக்களித்தது.

மறுநாள் மீண்டும் மனதில் ஒருவிதமான வித்தியாசமான உணர்வு பரவுவதை உணர்ந்தேன். இப்போது உடலிலும் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது. நரம்புகளில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டதைப் போன்ற ஒரு உணர்வில் மயக்கமான நிலைக்கு போய்விட்டேன்.

எனது அலுவலக நண்பர் ஒருவர் என்னை கவனித்து, உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டினார். நான் நடந்த விசயங்களை சொல்லி அந்த ராஜ யோக பயிற்சியாளர் அனுப்பிய கடிதத்தை காண்பித்தேன்.

அவர் உடனடியாக ஒரு ஆஞ்சனேய உபாசகரின் முகவரியைக் கொடுத்து அவரிடம் சென்று பார்க்கும்படி கூறினார். அங்கு சென்றதும் அவர் என்னிடம் அந்த கடிதத்தை வாங்கி பார்த்து, எனக்கு திருஷ்டி பாதிப்பு இருப்பதாகவும், சில பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் கூறி அது செய்ய வைத்தார்.

அப்போதிலிருந்து தொடர்ந்து சுமார் 10 நாட்கள், அந்த பயம் போன்ற  உணர்வு தொடர்ந்து கொண்டிருந்தது. எங்கள் தியான ஆசிரியரிடம் ஏதாவது தியானம் மூலம் இதை சரி செய்ய முடியுமா என்று வினவினேன். அவர் அந்த ஆஞ்சனேய பக்தரிடம் தொடர்ந்து சென்று வர ஆலோசனை வழங்கினார்.

இந்த நிலையில் எனது சகஜ மார்க்க நண்பர்கள் மூலம் அவர்களின் தியானமுறையில் இதை சரி செய்ய முடியுமா என முயற்சித்தேன். ஆனால் அவர்கள் தியானம் கற்றுக் கொண்டால்தான் அது குறித்து முயற்சி செய்ய முடியும் என்று எனக்கு சுமார் ஒரு மணிநேரம் அதன் முக்கியத்துவதுவம் குறித்து விளக்க உரையும் கொடுத்தார்கள். எனக்கு தியானம் புதிதாக கற்றுகொள்ள விருப்பம் இல்லை என கூறி விட்டு அப்போது வந்து விட்டேன்.

ஆனால் மறுநாள் என்னால் வீட்டில் இருக்க முடிய வில்லை. எப்படியாவது சகஜ மார்க்க தியானம் கற்று கொள்ள வேண்டும் என்று என் மனதில் இருந்து திரும்ப திரும்ப சிந்தனை வந்து கொண்டிருந்தது. அது ஒரு மிகப் பெரிய உந்து சக்தி போல என்னைத் தள்ள ஆரம்பித்தது. தாங்க முடியவில்லை என்னால்.

உடனடியாக எனது தியான ஆசிரியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு இருக்கும் நிலவரம் குறித்து விரிவாக எடுத்துரைத்து, சில நாட்கள் சகஜ மார்க்க தியானம் செய்து பார்த்துவிட்டு வருகிறேன். அதற்கு தங்கள் அனுமதி தேவை என விண்ணப்பித்தேன். அவர் என்னை நேரில் வரும்படி பணித்தார்.

எங்கள் குழு தியான அறையில் தியான ஆசிரியர் வருகைக்காக காத்திருந்தேன். அங்கிருந்த அனைத்து பொருட்களையும் ஒரு முறை நன்றாக பார்த்துக் கொண்டேன். மானசீகமாக என் குருநாதர் விக்கிரகத்துக்கு முன் மண்டியிட்டு என்னை இந்த இக்கட்டிலிருந்து விடுவிக்கவும் எந்த நிலையிலும் எனக்கு துணையாக இருக்கும்படியும் வேண்டினேன்.

சிறிது நேரத்தில் தியான ஆசிரியர் அந்த அறைக்குள் வந்தார். நேராக குருவின் மூர்த்திக்கு ஆரத்தி காண்பித்து என் எதிரில் வந்து அமர்ந்தார். என்னை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து, எந்த தியானமானாலும் விடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி பாதியில் விட்டு செல்லக்கூடாது. மாற்றி மாற்றி தியானம் செய்தால் அது நல்லதல்ல என அறிவுரை கூறினார். பிறகு வேறு தியானம் செய்வது என் சொந்த விருப்பம் எனவும், சிறிது நேரம் தியான அறையில் ஓய்வு எடுத்துவிட்டு செல்லும் படியும் பணித்து சென்றுவிட்டார்.

அவர் தியான அறையை விட்டு அகன்ற விநாடியில் என் மனதில் இருந்த அந்த அரிப்பு அகன்று விட்டது. சுமார் 15 நிமிடங்கள் அந்த தியான அறையில் அமைதியாக இருந்த பிறகு எனக்கு எல்லாம் சரியாகிவிட்டது போன்ற ஒரு உணர்வு. மனதில் ஒரு தெளிவு. என் குருநாதரின் பரிபூரண ஆசி எங்கள் தியான ஆசிரியர் மூலம் எங்களுக்கு வருவதை குறிப்பால் உணர்த்தவே இந்த நிகழ்ச்சி நடந்ததுபோன்ற ஒரு தோற்றம் மனதில் ஏற்பட்டது. வாழ்வோ சாவோ இனி நம் குருதேவருடன் தான் என மன தெளிவு வந்தது.

அன்று முதல் எங்கள் தியான ஆசிரியரை காணும் பார்வை மாறியது. அவர் வெறும் தியானம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மட்டுமல்ல. குருதேவரின் அருளை அனைவருக்கும் ஏற்று தரும் ஒரு கருவி எனவும் தெளிவாக புரிந்தது. என் பிரார்த்தனைக்கு விடை என் கண்முன்னால் இருந்தது.

பிறகு தொடர்ந்து 3 மாதங்கள் சில பரிகாரங்கள் வீட்டில் செய்து அந்த ஆஞ்சனேயர் உபாசகர் மூலம் தாயத்து செய்து அணிந்த பிறகு பூரண குணம் கிடைத்தது.

சதுரகிரி நாயகனே சரணம்... சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா..

Friday, December 23, 2011

ஆண்டவன் திருவிளையாடல் ‍- 4 ‍- குருவைத் தேடி.. 1

என்னதான் நாம் கடவுள்மீது பக்தி செலுத்தினாலும் ஒரு குரு இருந்தால் இன்னும் நன்றாக இருக்குமே என மனதில் அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனாலும் யாரை குருவாகக் கொள்வது எனவும் மனதில் ஒரே குழப்பமாகவும் இருந்தது.

அப்போது எனது நண்பர்கள் சிலர் சகஜ மார்க்கம் எனப்படும் ராமச்சந்திரா மிஷனில் தியானம் செய்பவர்களாக இருந்தார்கள்(இன்னும் இருக்கிறார்கள்). அவர்களை அவ்வப்போது சென்று அவர்கள் மணப்பாக்கம் ஆசிரமத்தில் சந்திப்பேன்.

அந்த ரம்யமான சூழல் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவர்கள் மார்க்கம் சார்ந்த சில புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தேன். இருந்தாலும் தியானம் கற்றுக்கொள்ள மிகவும் தயக்கமாக இருந்ததால் கற்றுக் கொள்ளவில்லை. பலவிதமான விசயங்களைப்பற்றி விவாதங்கள் செய்வோம். அதில் கடவுள், பக்தி, தியானம், யோகம் இவைதான் அதிகம் இருக்கும்.

இந்த சூழலில் எனது குரு தேடலைப் பற்றி தெரிந்த அந்த நண்பர், கடவுளிடம் தீவிரமாக பிரார்த்தனை செய்தால் நல்ல குரு அமைவார் என அறிவுறுத்தினார். நான் அப்போதெல்லாம், சைதை காரணீஸ்வரர் ஆலயத்துக்கு அடிக்கடி செல்வதுண்டு. அங்கேயே இந்த பிரார்த்தனையை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன்.

இந்த இடைப்பட்ட காலத்தில் ஆங்கில மருந்துகளை அறவே நிறுத்திவிட்டு ஒரு ஹோமியோபதி மருத்துவரிடம் மருந்து எடுத்து வந்தேன்.

அலுவலகத்தில் ஏற்பட்ட மன அழுத்தம், உடல் நிலையை அடிக்கடி பாதித்துக் கொண்டே வந்தது. சுமார் இரண்டு ஆண்டுகள் ஹோமியோபதி மருந்துகள் எடுத்தும் ஒன்றும் பெரிய முன்னேற்றம் இல்லை.

எனது ஹோமியோபதி மருத்துவர் ஒரு முறை எனது ரத்த அழுத்தத்தை சோதித்தபோது மிக அதிகமாக இருந்தது. அதற்கு மருந்தாக ஆழ்நிலை தியானம் கற்றுக் கொள்ள அறிவுறுத்தினார். வேறு மருந்து எதுவும் தரவில்லை.

உடனடியாக மறுநாள் 23 ஜனவரி 1997 அன்று, மஹரிஷி வித்யா மந்திர் சென்று ஆழ்நிலை தியானம் கற்றுக் கொண்டேன். அப்போதும் எனக்கு ஒரே குழப்பம். இந்த தியானம் சொல்லிக் கொடுப்பவர் தான் எனது குருவா?? இருந்தாலும் ஒரு தெளிவு. நம் பிரார்த்தனைக்கு கடவுள் எப்படி செவி சாய்க்கிறார் என‌ பார்க்கலாம் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.

தியானம் கற்றுக் கொண்ட சில நாட்களிலேயே எனது ரத்த அழுத்தம் சீராகி விட்டது. இருந்தாலும் மருத்துவர் அறிவுரைப்படி தொடர்ந்து தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

அடுத்த ஆறு மாதங்களில் ஆழ்நிலை தியானத்தின் அடுத்த நிலையான சித்திப் பயிற்சி எடுத்துக் கொண்டேன். இப்போது எனக்கே ஒரு ஆர்வம் வர ஆரம்பித்து விட்டது. தொடர்ந்து ஆர்வமுடன், தியானம் செய்ய ஆரம்பித்தேன்.

தியானம் தொடர்ந்து செய்துவர எனக்கு மனதின் ஆழத்தில் இவர்தான் எனது குரு என அடையாளம் தெரிந்தது. ஆம்!! ஆழ்நிலை தியானம் செய்வதற்காக பூஜை செய்யும் தவத்திரு பிரம்மானந்த சரஸ்வதி சுவாமிகள்தான் அது.

மனதில் மிக ஆழமாக என் குரு பதிந்துவிட்டார். அவர் அப்போது தன் பூத உடலில் இல்லாவிட்டாலும் அவர்தம் கருணை பூரணமாக வியாபித்திருப்பதை உணர முடிந்தது.

ஜெய் குரு தேவ்...