Tuesday, August 16, 2011

அரசாங்கத்திடம் இருந்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி..

இன்று (16 ஆகஸ்ட் 2011) காலை திரு அன்னா ஹசாரே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுடன் திரு கிரண்பேடி, திரு அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் நம் அரசாங்கம் நாட்டு மக்களுக்கு அனுப்பும் மறைமுக செய்தியை இப்போது எழுத்தில் வடிக்கிறேன். இது நாட்டு நடப்பை உற்று கவனிக்கும் ஒரு சாமானியனின் பார்வையே :

என் அன்பான குடி மக்களே, இந்த ஜனநாயகம் என்பது வோட்டுப் போட்ட வுடன் உங்களுக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாது. ஒரு ஓட்டு போட்டவுடன் உங்கள் ஜனநாயக கடமை முற்றிலும் முடிந்து விட்டது. அதன் பிறகு உங்களுக்கு அரசாங்கமாகிய எங்களை கேள்விகேட்க எந்த அதிகாரமும் இல்லை.

எங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதுவே சரி. அது உங்களை குழி தோண்டிப் புதைப்பதாக இருந்தால்கூட அதை நீங்கள் கேள்வி கேட்க உரிமை அற்றவர்கள். நாங்கள் விஷத்தை அமிர்தம் என்று கூறிக் கொடுத்தால்கூட அதை கேள்வி கேட்காமல் நீங்கள் குடிக்கத்தான் வேண்டும். அது இந்த தேசத்தின் குடிமகனாகிய உங்கள் ஜனநாயக கடமை. இதை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், நீங்கள் தீவிரவாதிகள், ஜனநாயக விரோதிகள், நக்சலைட்டுகள.

உங்களுக்காக அரசாங்கத்தின் ஜெயில்கள் காத்திருக்கின்றன. உங்கள் பொருளாதார ஆதாரங்கள் நசுக்கப்படும். நீங்கள் ஊழல்வாதிகளாக விளம்பரப்படுத்தப் படுவீர்கள். உங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப்படும். உங்கள் அனைத்து வங்கிக் கணக்குகளும், பாஸ்போர்ட்டும் முடக்கப்படும்.  திடீரென்று நீங்கள் வெளிநாட்டுக்காரராகவும் ஆக்கப்படலாம். நீங்கள் எங்கள் வீட்டு வாசலில் வந்து எங்களை விட்டு விடுங்கள் என்று பிச்சை எடுக்கவேண்டும். அது வரை நீங்கள் துரத்தப்படுவீர்கள்.

இதற்கு தயாராக இருப்பவர்கள் மட்டும் போராட்டங்கள் நடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களும் நாங்கள் கொடுக்கும் அனைத்து கட்டுப் பாடுகளும் நிறைந்த 100 பக்க பாண்டு பேப்பரில் கையொப்பமிட வேண்டும். அதை கடைபிடிக்கவும் வேண்டும்.

சட்டம் என்ன சொல்லி இருந்தாலும் நாங்கள் சரி என்று நினைப்பதை மட்டுமே செய்வோம். மேலதிக விவரங்களுக்கு நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம். அதன் தீர்ப்பு சில பத்தாண்டுகளில் அல்லது நூற்றாண்டுகளுக்குள் வழங்க ஆவன செய்யப்படும். அதுவரை நீங்கள் எது செய்தாலும் கைது செய்து மேற்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதன் பின்னும் போராட்டம் நடத்த முன்வரும் தைரிய சாலிகளுக்கு ஒரு முன் எச்சரிக்கை. பின் விளைவுகளுக்கு அரசாங்கம் பொறுப்பாகாது. அதை முன் கூட்டியே எச்சரிக்கவே இந்த செய்தி...



கடவுளே மஹாலிங்கம். நாட்டு மக்களைப் பற்றியும் சிந்திக்கிற ஒரு அரசாங்கம் அமைய அருள் செய்யுங்க.

சதுரகிரி நாதனே போற்றி!! சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா !!!!

5 comments:

காந்தி பனங்கூர் said...

ஓட்டு போட்ட மக்களை இப்படி ஏமாளிகளாக்குகிறார்களே இந்த அரசியல்வாதிகள். இங்கு புரட்சி வெடிக்க வேண்டும்.

Sankar Gurusamy said...

திரு காந்தி பனங்கூர், புரட்சி எல்லாம் பெரிய வார்த்தை.. முதலில் ஒரு போராட்டம் நடத்த முடியுமா பார்க்கலாம்.

வருத்தமாகத்தான் இருக்கிறது.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

shanmugavel said...

அத்தனையும் கசப்பான உண்மையே!அவ்ர்களுக்கு மக்கள் பாடம் புகட்டத்தான் போகிறார்கள்.பகிர்வுக்கு நன்றி

Suresh S said...

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக சர்வாதிகார நாடு. தங்களது சர்வாதிகாரியை இந்திய மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்வார்கள்.

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், சுரேஷ், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..