Tuesday, November 15, 2011

லஞ்சத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா?

இன்றைய சூழலில் லஞ்சம் என்பது பரவலாக காணப்படுகிறது. பிறப்பு  / இறப்பு சான்றிதழ் வாங்க, ரேஷன் அட்டை வாங்க / மாற்ற, சாதி சான்றிதழ் வாங்க, சில அரசு அனுமதிகள் வாங்க, மற்றும் பல சந்தர்ப்பங்களில் லஞ்சம் என்பது நீக்கமற நிறைந்துவிட்டது.  சில இடங்களில் நேரடியாகவும், சில இடங்களில் இடைத்தரகர்கள் மூலமும் இது வாங்கப்படுகிறது. 

லஞ்சமே கொடுக்காமல் ஒரு மனிதன் நம் தேசத்தில் வாழ முடிந்தால் உண்மையில் அவர் ஒரு மிகப்பெரிய லட்சியவாதிதான். ஆனால் இதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை நினைத்து என்னைப் போன்ற பலருக்கு பயமாக இருக்கிறது.

லஞ்சம் எப்போதெல்லாம் கொடுக்கப்படுகிறது ?

1) தங்களுக்கு நேர்மையாக ஆகவேண்டிய காரியம் தாமதமில்லாமல் குறித்த நேரத்தில் ஆவதற்கு

2) அதே காரியம் குறித்த நேரத்துக்கு முன்பாகவே சற்று விரைவாக ஆவதற்கு

3) சட்ட விரோதமாக சில காரியங்கள் செய்வதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு.

4) சில அதிகாரிகளின் பேராசையால அலைக்களிக்கப்படாமல் இருப்பதற்கு அல்லது அலைக்களிக்கப்பட்டு லஞ்சம் தர தூண்டுவது 

இவற்றில் 2 வது காரணத்துக்கு லஞ்சம் கொடுப்பதை பெரும்பாலான நிறுவனங்கள் / தனி மனிதர்கள் விரும்புகின்றனர்.  இவ்வாறு காரியம் ஆகிவிடாதா என்ற நப்பாசையில் லஞ்சம் கொடுத்து ஏமாந்தவர்கள் பலர்.

நான் பார்த்தவரை, 4 வது காரணம்தான் லஞ்சம் வாங்கும் உத்தியாக பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது. காரியம் ஆவதற்காக பலரை ”இன்றுபோய் நாளை வா” பாணியில் அலைக்களிப்பது சர்வ சாதாரணமாக நமது அரசு அலுவலங்களில் நடைபெறுகிறது. மேலும் பொறுப்பாக பதில் சொல்லும் அதிகாரிகளும் மிகக் குறைவே.

இந்த நிலையில் போராட மனமும் நேரமும் இல்லாத பலர் லஞ்சம் கொடுத்துதான் இன்றும் காரியம் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் (கொண்டிருக்கிறோம்). 

இவ்வாறு லஞ்சம் கொடுப்பதும் குற்றமே எனினும் கொடுக்காமல் கஷ்டப்படுவதைவிட கொடுத்து சற்று நிம்மதியாக இருக்கலாமே என்ற எண்ணம்தான் காரணம்.

இந்த சூழ்நிலையில் நேற்றைய செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி - இந்த லஞ்சத்தை சட்டப்பூர்வமாக ஆக்கிவிடவேண்டும் என்ற வேண்டுகொள் நம் தனியார் நிறுவன முதலாளிகளிடம் இருந்து வந்திருக்கிறது. ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்கபோல இருக்கு. அதன் சுட்டி கீழே :

'Payment of Rs 5-10k speed money can be legitimised'



பொதுஜனமாகிய நாம் கரடியாக கத்தினாலும் கண்டுகொள்ளாத நம் அரசு இவர்கள் சொன்னால் கொஞ்சம் கேட்பார்கள். 

ஆனால் இந்த விசயத்தில்  லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கினால் இதற்கு மேலும் யார் லஞ்சம் தருவார்கள் என்றுதான்  பெரும்பாலான அதிகாரிகள் அலைவார்கள். எனவே நம் அரசாங்கம் இந்த கோரிக்கையை நிராகரிக்கத்தான் செய்ய வேண்டும்.

ஆனால் நம் நாடு ஜனநாயக நாடு . என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கும். என்ன நடந்தாலும் நாம்தான் சகித்துக்கொண்டு வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சங்குதான். போன பதிவு அந்த சங்கொலியின் ஒரு எதிரொலிதான். எல்லாம் விதி..


கடவுளே மஹாலிங்கம், இந்த லஞ்சம் இல்லாமல் இருந்தா நல்லாத்தான் இருக்கும். ஏதாவது செஞ்சு அதை ஒழிச்சுக் கட்ட உங்களாலதான் முடியும். தயவு செய்து மனசு வையுங்க.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

5 comments:

shanmugavel said...

சட்டத்தால் விதிக்கப்பட்டதற்கு மேல் லஞ்சம் கேட்பார்களே!அப்போதும் சிக்கல்தான்.பகிர்வுக்கு நன்றி.

நிகழ்காலத்தில்... said...

லஞ்சத்தை சட்டமாக்குதல் என்றால் நேரடியான பொருள் அதுவல்ல..

எந்த வேலைக்கு எவ்வளவு கட்டணம் செலுத்தவேண்டும். அப்படி செலுத்தும் பட்சத்தில் எத்தனை மணி நேரத்தில் அந்த வேலை முடிக்கப்படும் என்கிற உத்தரவாதம்.,

எப்பவும் போல் என்றால் இலவசமாக செய்ய 15 நாள் என்றால் கட்டணம் கட்டினால் 3 நாள் என மாற்றினால் அரசுக்கும் வருமானம் அரசு அதிகாரிகள் அடங்கி விடுவார்கள்.

ஆனால் காசுள்ளவனே காரியம் செய்யமுடியும் ஏழைகள் என்ன செய்யமுடியும்., என்ற கேள்விக்கு பதில் இல்லை..

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல் / திரு நிகழ்காலத்தில் சிவா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

ஸ்ரீ ஸக்தி சுமனன் said...

அன்புள்ள நண்பரே,

இது தங்களது பதிவுடன் தொடர்புடையதல்ல, தங்களுடைய மெயில் இல்லாததால் பின்னூட்டமிடுகிறேன்.

பல காலமாக தங்களுடன் தொடர்பு கொள்ளவேண்டு என் மனதில் எண்ணம் இருந்த போதும் தொடர்ச்சியான வேலை, பதிவு எழுதுவது, குடும்ப கடமைகள் தடங்கல்கள் இருந்ததால் முடியாமல் போய் விட்டது.

முதற்கண் தாங்கள் எனது பதிவுகளை அனுதினமும் படித்து பின்னூட்டமிடும் பண்பு, நேரம், மற்றவரை உற்சாகப்படுத்தும் உயரிய எண்ணம் என்பன தற்போதைய காலத்தில் மிகவும் போற்றப்பட வேண்டியது. இதற்காக எனது முதற்கண் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுக்கு எல்லாம் வல்ல தேவியும், குரு நாதரும் உடனிருந்து அருள் புரிய அனுதினமும் வேண்டுகிறேன்.

தங்களுடைய மெயில் ID: sumanenthiran@gmail.com அனுப்பவும்!

நன்றி
சுமனன்

Sankar Gurusamy said...

திரு சுமனன், தங்களுக்கு தனி மடல் அனுப்பி இருக்கிறேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..