Wednesday, January 5, 2011

நாடாளுமன்றம் - தேவையா? - நமது தேர்தல் முறை சரியா?

சமீபத்தில் எதிர்க்கட்சியினரின் போராட்டத்தால் நாடாளுமன்றம் செயல்படவில்லை. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் பண இழப்பு ஏற்பட்டதாக செய்தி பார்த்தோம்.

நன்றாக யோசித்தால் நமக்கு இந்த நாடாளுமன்றம் எதுக்கு? வெறும் சட்டமன்றம் மற்றும் பஞ்சாயத்துக்கள் மட்டும் போதாதா? இங்கு இருப்பவர்களும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தானே. இப்போதய கட்சிகள் மற்றும் தேர்தல் முறைகள் சரியா? இதுபற்றி எனது சிந்தனைகள்.

இன்று ஓட்டுப்போடுவதோடு ஒரு சாமானியனின் ஜனநாயகக் கடமை முடிந்துவிடுகிறது. இந்த நிலையை மாற்றவேண்டும். "Participatory Democrocy" - எல்லோரும் பங்குபெறும் ஜனநாயகம் தேவை.


கட்சிகள் :

1) அனைத்து கட்சிகளின் சொத்துக்களும் தேசியமயமாக்கப்பட வேண்டும்.

2) கட்சிகளின் அடிப்படைக்கட்டமைப்புக்கள் பொதுமயக்கப்பட்டு(generalise), அவை ஜனநாயகமுறையில் தேர்தலில் குறைந்த பட்சம் ஒர் அளவு வாக்குகள் பெறும் பட்சத்தில்(மாநிலத்தில் 10% ஓட்டு அல்லது 10,00,000 வாக்குகள் - இதுபோல)  அரசோ அல்லது அரசு சார்ந்த அமைப்போ, கட்சி அமைப்புக்களுக்கு  சம்பளமும்   தேர்தல் செலவுகளுக்கு பணமும் வழங்கலாம்.

3) கட்சிகளின் தேசிய / மாநிலத்திட்டங்கள் வரையறுக்கப்பட்டு, அவை அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு, வருமான ஆதாரங்கள் முடிவுசெய்யப்பட்டு, அவைகளின் செயல்படுத்துதல் தன்மை(practicability) முடிவு செய்யப்படவேண்டும்.  இந்தத் திட்டங்கள் மட்டுமே manifesto - வில் சேர்க்கப்பட்டு, குறைந்த பட்ச செயல்திட்டம் வகுக்கப்படவேண்டும்.

4) ஆட்சிக்கு வரும் கட்சியின் செயல்பாடுகள் அறிஞர்களால் கண்காணிக்கப்பட வேண்டும்.

தேர்தல் :


மாநிலத்தேர்தலில் (தொகுதிகள் பெரிதாக்கப்பட்டு- ?), ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 10,000 வோட்டு வாங்கும் அனைவரும் சட்டமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட வேண்டும். மாநில முதல்வராக கட்சி சார்பு இல்லாத ஒருவர் மாநிலப் பொதுத்தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படவேண்டும். இந்த முதல்வர் தேர்தலில் அடுத்த 10 இடங்களில் வருபவர்கள் துணை முதல்வர்களாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இவர்களே மாநில அமைச்சர்களாக பதவி வகிக்கவேண்டும்.

இந்தியாவில் ஒரு தேசியப் பொதுத் தேர்தல் மட்டுமே நடத்தப்படவேண்டும். ஒரு தலைவர் மட்டும் தேர்வு செய்யப்படவேண்டும். ஓரு அமெரிக்க ஜனாதிபதிபோல. இதில் கட்சி சார்புடையவர்கள் போட்டியிட தடைவிதிக்கவேண்டும். இவரே ஜனாதிபதி. இந்தத் தேர்தலில் அடுத்த 10 இடங்களில் வருபவர்கள் துணை ஜனாதிபதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். இவர்களே மத்திய அமைச்சர்களாக பதவி வகிக்கவேண்டும்.

நாடாளுமன்றத்துக்குப் பதிலாக :

நாடாளுமன்றத்துக்குப் பதிலாக மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் மாநிலத்தின் பிரதிநிதிகளாக மத்திய அவையினரிடம் விவாதிக்க அனுமதிக்கப்படவேண்டும்.

ஊராளுமன்றங்கள் :

ஒவ்வொரு பள்ளி, கல்லூரி சார்ந்த பகுதிகளில் தொகுதி முன்னேற்றத்தில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொள்ளும் ஊராளுமன்றங்கள் அமைக்கப்படவேண்டும். இவற்றில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்களிப்பு ஊக்குவிக்கப்படவேண்டும். ஒவ்வொரு மாதமும் விடுமுறை நாட்களில் சில நாட்கள் இந்த ஊராளுமன்றங்கள் கூடி தொகுதியின் பிரச்சினைகள், தேவைகள், அரசுத்திட்ட செயல்பாடுகளின் தரம் மற்றும் இப்போதய நிலை இவைபற்றி விவாதிக்கவேண்டும். ஒவ்வொரு பகுதியின் அரசு அதிகாரியும் இவை பற்றிய விவரங்களை ஊராளுமன்றங்களுக்கு அளிக்கவேண்டும். ஊராளுமன்றங்களில் தொகுதியின் தேர்ந்த்டுக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவாதிக்கவேண்டும். இவற்றின் விவாதத்தின் தீர்மானங்கள் /தீர்க்கப்படாத விஷயங்கள் உடனடியாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் பணியை இந்தப் பிரதிநிதிகள் செய்யவேண்டும்.  சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு இவை எடுத்துச்செல்லப்பட்டு குறைகள் களையப்படவேண்டும்.

இதில் முடியாத விஷயங்கள் சட்டமன்றத்தில் எழுப்பப்படவேண்டும். சட்டமன்றத்தில் முடியாத விஷயங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படவேண்டும்.

சரியாகச் செயல்படாத மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெற மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும்.


நமது தேசத்தில் புதிய சட்டங்களின் தேவையைவிட, இருக்கும் சட்டங்களை சரியாக அமல்படுத்தினாலே நமது தேசம் உன்னத நிலையை அடையும். நமது கண்காணிப்பு அமைப்புகள் சீர்குலைந்ததே நமது இன்றைய நிலைக்கு மூலகாரணம். இவற்றை சரியாக்கினால் நாமும் வல்லரசுதான். இவற்றின் அதிகாரிகள் சரியானால் நமது வளர்ச்சிப்பாதை ராஜபாட்டைதான்.

வாழ்க பாரதம்... ஜெய் ஹிந்த்...

0 comments: