Friday, January 6, 2012

கடவுள் இருக்கிறாரா?

சில வருட‌ங்களுக்கு முன் எனது நண்பர் ஒருவருடன் காரசாரமான விவாதம். கடவுள் இருக்கிறாரா என்பதைப் பற்றி. கடவுள் இருக்கிறார் என நானும், கடவுள் என்பவர் இல்லவே இல்லை, எல்லாம் ஏமாற்று வேலை என என் நண்பரும்.

வாதங்களும் பிரதி வாதங்களும் மாற்றி மாற்றி சுழற்றி அடிக்க, இருவருமே அவரவர் நிலையில் இருந்து இறங்கவே இல்லை. சலித்து விட்டது. கடைசி வரை என்னால் எனது நண்பரை கடவுள் இருக்கிறார் என நம்ப வைக்க முடியவில்லை. அப்போது மிகவும் வருத்தமாக இருந்தது.

சில நாட்கள் கழித்து எனது இன்னொரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது அவருடன் இந்த நிகழ்வை பகிர்ந்து கொண்டேன். அவர் அப்போது இந்த கடவுள் விவாதம் குறித்து எனக்கு கூறிய சில விசயங்கள் உண்மையில் மிகவும் ஆச்சரியப்படத் தக்கதானதாக இருந்தது. அவற்றில் சில :

1) மனிதன் கடவுளை தன் புலன்களால் உணர நினைக்கிறான். ஆனால் கடவுள் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்.

2) நாம் வேண்டியதை உடனேயே நிறைவேற்றி தரும் கடவுளையே எல்லோரும் தேடுகின்றார்கள். ஆனால் கடவுள் இவற்றுக்கு அப்பாற்பட்டு நிற்கிறார். எல்லோருக்கும் எல்லா வேண்டுதல்களும் எப்போதுமே நிறைவேறுவதில்லை.

3) கடவுளை வணங்கினால் அவர்களுக்கு பிரச்சினைகள் வராது அல்லது குறைவாக வரும் என்பது மூட நம்பிக்கை. அதிகம் கடவுளை வணங்குபவர்களுக்கு அவர்களுடைய கர்ம கணக்கு விரைவில் தீர அதிக கஷ்டங்கள் வரும் வாய்ப்புதான் அதிகம்.

4) எவ்வளவு தவறு செய்தாலும் கடவுளிடம் சென்று ஒரு முறை மன்னிப்பு கேட்டால் அல்லது காணிக்கை செலுத்தினால் எல்லாம் சரியாகி விடும். மீண்டும் அடுத்த தவறு செய்ய தயாராகலாம். இதுவும் ஒரு மடத்தனமான நம்பிக்கை.

5) கர்மா என்று ஒன்று இருக்கிறது, இது பாவம், இது புண்ணியம் என நம்புகின்றவர்களுக்குதான் கடவுள் நம்பிக்கை இருக்கும் அல்லது ஏற்படுத்த முடியும். கர்மாவை நம்பாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கை ஏற்படுத்த முடியாது.

6) கடவுள் என்பதை நம்புவது அவரவர் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களின் அளவையும் அவற்றை தீர்க்க அவரவருக்கு ஏற்படும் சந்தர்ப்பங்களின் நிலையையும் பொருத்தது.

சிலருக்கு கஷ்டங்கள் வரும்போதே அவற்றுக்கான தீர்வும் உடன் வரும். இவர்களுக்கு பல நேரம் ஓரளவுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கும்.

சிலருக்கு கஷ்டங்களை அதிகம் அனுபவித்த பிறகு அவர்கள் நம்பிக்கையின் விளிம்பில் இருக்கும் போது தீர்வு வரும். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கும்.

சிலருக்கு கஷ்டங்களின் விடிவு என்பது அவர்கள் காணும்போது வராமலே போகலாம். இவர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவோ அல்லது ஞானிகளாகவோ ஆக வாய்ப்பு இருக்கிறது.

சிலர் கஷ்டங்களே ஏற்படாத ஒரு வசதியான நிலையில் இருப்பார்கள். இவர்களுக்கு அவரவர் குடும்ப, நட்பு சூழலைப் பொறுத்து கடவுள் நம்பிக்கை இருக்கும் அல்லது இல்லாமல் போகும்.

7) கடவுளை அவரவரே சாதகம் செய்து, கஷ்டப்பட்டு உணரவேண்டும். ஒருவர் வார்த்தைகளில் போதித்து மட்டும் இன்னொருவர் நிச்சயம் உணர முடியாது. எனவே கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. அது அவரவரே உணர்ந்து கொள்ளட்டும். இன்றைக்கு இல்லை என்று சொல்பவர் நாளைக்கே இருக்கிறது என்றும் சொல்லலாம். இன்றைக்கு இருக்கிறது என்று சொல்பவர் நாளைக்கே இல்லை என்றும் சொல்லலாம். அது கடவுள் தன்னை யாரிடம் எப்போது வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறாரோ அதைப் பொறுத்தது.


கடவுளே மஹாலிங்கம்.. நீங்க உங்களை எல்லோரிடத்தும் வெளிப்படுத்திக் கிடணும்னு வேண்டிக்கிறேன்.

சதுரகிரி சுந்தர மஹாலிங்கத்துக்கு அரோஹரா...

8 comments:

Sankar Gurusamy said...

திரு கோவி கண்ணன், தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

shanmugavel said...

கடவுள் இருக்கிறார் என்பதற்கு தங்கள் வாதங்கள் முழுமையாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.

மலரின் நினைவுகள் said...

நாம் கண்டுபிடித்ததெல்லாம் மேலே ஏழு லோகம் கீழே ஏழு லோகம் சிவன், விஷ்ணு, பிரம்மா என்று மூன்று கடவுள்கள் அவர்களுக்கு பெண்டாட்டி மார்கள், வைப்புகள், க்ஷத்திகள், கல்யாணம், குடும்பம், பிள்ளைக் குட்டிகள், குட்டிச்சாமிகள், பெரிய சாமிகள், பல லட்சம் கடவுள்கள், பல கோடி தேவர்கள் என்பதுதான். நம் முடைய அறிவு, போட்டி போட்டுக் கொண்டு இந்த காட்டுமிராண்டித்தனத் திலே சொல்கிறதே தவிர மனித வாழ்வு பற்றியோ அதன் மகத்தான பெருமை பற்றியோ அதற்கான வசதியைப் பற்றியோ சொல்லவில்லை. நீங்கள் பழைய புராணங்களையும் கடவுள் மத சாஸ்திரங்களையும் எடுத்துப் பார்த்தீர்களானால் இமயமலையோடு உலகமே முடிந்து விட்டது என்றுதான் இருக்கும் அதற்குமேலே ஒன்றும் சொல்லப்பட்டிருக்காது. இம்மலையைப் பார்த்தால் அதிலே அடர்ந்து நிற்கிற பனி சூரிய வெயிலிலே வெண்மையான காட்சி அளிக்க கண்டு அதை வெள்ளி மலையாக்கி வெள்ளியங்கிரியாக்கி சிவ கடவுள்வாசம் செய்வது அங்கேதான். கைலயங்கிரி என்று சொல்லி விட்டான் அதற்குமேலே அவன் புத்தி போகவே இல்லை. அந்த காலத்தில் புத்தி அவ்வளவுதான் என்றால் உலகத்தை பறந்து சுற்றுகிற இந்தக் காலத்திலும் அதை கைலயங்கிரி கடவுள் சேஸ்திரம் என்று கருதுகிறவர்களை என்ன பெயரிட்டு அழைப்பதோ தெரியவில்லை.

- பெரியார் ஈ.வே.ராமசாமி

selva said...

powerful high-resolution transmission electron microscope can produce images with resolution below 0.5 angstrom (50 picometres).but it cannot detect measure sound or your thoughts or intensity of it. because it is not designed for that. similarly god cannot be realised by our knowledge or senses however powerful they may be. but by heart alone..

கடவுள் என்பவர் மனிதனின் மற்றொரு முனையே . it's like other end of the stick. but its farther enough that people cannot easily recognise it.

Sankar Gurusamy said...

திரு ஷண்முகவேல், திரு மலர் வண்ணன், திரு செல்வா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Anonymous said...

கடவுள் மறுப்பு என்பதை விட , கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை.... இதனால் என்ன பயன் ??

அந்த கடவுள் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் , யாருக்கு தெரியும் ?

எல்லா மதங்களும் கடவுள்களும் அந்த இடத்துக்கு தகுந்தாற்போல் உருவாக்க பட்டதே தவிர , எங்குமே கடவுள் தான் ஒருவன்தான் என்று சொல்லவில்லை .

இப்படி இல்லாத ஒருவரை நீங்கள் எல்லோரிடமும் வெளிபடுத்தி கொள்ள வேண்டும் என்று வேண்டுவது வேடிக்கையாக இருக்கிறது .

Sankar Gurusamy said...

திரு அனானிமஸ், எல்லா விசயங்களையும் நம் வாழ்வில் ஆதாயத்துக்காக செய்யப் பழகி விட்டதன் விளைவுதான் தங்கள் கேள்வி. இந்த பதிவு எனது அனுபவம் பற்றியது. இது தங்கள் சிந்தனையைத் தூண்டி கடவுளை நோக்கிய சரியான பாதையில் செலுத்தினால் நன்று. இல்லாவிடினும் பாதகமில்லை. கடவுளை நம்பாதவர்கள் யாரும் கெட்டுப் போனதில்லை. அப்படியேயும் இருக்கலாம். நம் மனசாட்சியின்படி நம் வாழ்வை அமைத்தால் வாழ்வில் என்றும் இனிமையே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

ஸ்ரீ ஸக்தி சுமனன் said...

கட+உள் = கடவுள்

தனது ஸ்தூலத்தினை கடந்து சூஷ்ம புலன்களை உள்ளே அறிந்தவனே கடவுளை அறிகிறான்,

நாம் அனைவ‌ரும் இந்திய‌ த‌த்துவ‌ஞான‌த்தினை, வாழ்க்கை முறையை ம‌ற‌ந்து மேலை நாட்டுக்கார‌னின் முறைக‌ளுட‌ன் எம‌து க‌லாச்சார‌த்தினையும் ப‌ண்பாட்டினையும் ஒப்பிட்ட‌தால் வ‌ந்த‌ வினைதான் இது.

கிட்ட‌ட்த‌ட்ட‌ இந்திய‌ சைவ‌ உண‌வு உண்ப‌வ‌ன் சீனாக்கார‌னின் க‌டையில் ச‌மைய‌ல்கார‌னாக‌ சேர்ந்தால் என்ன‌ ந‌ட‌க்குமோ அதுவே எம‌து இன்றைய‌ நிலை! எம‌து க‌லாச்சார‌ விட‌ய‌ங்க‌ளை எம‌து ம‌திம‌ய‌க்க‌தால் வேற்றுக்க‌ண்கொண்டு விள‌ங்க‌ முற்ப‌டுகிறோம்.