Tuesday, January 25, 2011

மக்கள்தொகை பெருக்கமும்.. தேச வளர்ச்சியும்...

நமது மக்கள்தொகை சீனாவை வெகுவிரைவில் முந்திவிடும் போலத் தெரிகிறது. பாரதியார்காலத்தில்(1920) 30 கோடியாக இருந்த மக்கள்தொகை இப்போது (2011) 115 கோடியாக ஆகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் நமது ஜனத்தொகை 2 கோடி அதிகரித்துவருகிறது. இது நமது தேச வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது. சிறு / பெருநகரங்களில் வாழும் சில கோடி நபர்களைத்தவிர பிறருக்கு இது குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.  

இவ்வளவு வேகமாக வளரும் மக்கள்தொகையால் ஏற்படும் விளைவுகள் என்ன? ஏன் மக்கள்தொகை இவ்வளவு வேகமாக வளர்கிறது? இதன்  நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? நன்மைகளை வளர்த்து தீமைகளைக் களைய என்ன செய்யலாம்? எனது சிந்தனைகள்....

ஏன்? :
ஒரு தம்பதியினர் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெறுவதும், பிறப்பு விகிதம் அதிகமாகவும் இறப்பு விகிதம் குறைவாகவும் இருப்பதும், மக்களின் வாழ்நாள் அதிகரிப்பதும் காரணிகள்.

படித்த/படிக்காத   விழிப்புணர்வு உள்ளவர்களைவிட விழிப்புணர்வு இல்லாதவர்களாலேயே அதிகம் மக்கள்தொகைப் பெருக்கம் ஏற்படுகிறது. இவ்வளவு மக்கள் தொகை பெருகினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அறியாமை.  எனவே மக்கள்தொகை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவேண்டும்.

மத சம்பந்தமான நம்பிக்கைகளும் மக்கள்தொகை பெருக்கத்திற்குக் காரணமாக இருக்கிறது. இதற்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரமும், மத சம்பந்தமான தெளிவு ஊட்டலும் தேவை.

ஆண் குழந்தைகள் மீது இருக்கும் மோகம். ஒரு ஆண் குழந்தைக்காக பல பெண்களைப் பெற்றவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இதிலும் மோசமாக, சில பிறந்த பெண்குழந்தைகளைக் கொல்லும் கொடுமையும் இங்கு நடந்திருக்கிறது. இவ்வாறு ஆண்குழந்தைகளே பெற்றுக் கொண்டு இருந்தால் உலகத்தின் சமநிலை பாதிக்கப்படும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் எதிர்காலத்தில் அதிகரிக்கும். இதற்கும் சரியான விழிப்புணர்வும், சமூக வழிகாட்டலும் அவசியம்.

வறுமையில் வருமானத்திற்காக அதிகக் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளல். இதற்கும் சரியான விழிப்புணர்வும், சமூக வழிகாட்டலும் அவசியம்.


நன்மைகள் :
மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் நன்மைகள் என்ன?

முதல் நன்மை அதிகமான மனித சக்தி நம்மிடம் கிடைக்கிறது. ஒரு ஏழைக் குடும்பத்தில் 5 குழந்தைகள் இருந்தால் ஐவர் சம்பாத்தியம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது. குடும்பம் சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கிறது.

இதை பாதுகாப்புத்துறையிலும் மற்றும் மனித வளம் அதிகம் தேவைப்படுகின்ற துறைகளிலும் உபயோகப்படுத்தலாம்.

அதிக மனிதவளம் உள்ளதால் பல துறைகளில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட சிறந்த மனிதவளத்தை உருவாக்கலாம். தடையற்ற ம்னிதவளம் பல தொழில்கள் சிறக்க தூண்டுகோலாக இருக்கும்.

அதிக மக்கள்தொகை உள்ள இடங்கள் பல பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. குறைந்த செலவில் நிறைய பொருட்கள் தயாரித்து விற்க ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.

தீமைகள் / சவால்கள் :

1) மக்கள்தொகைக்குத் தகுந்தவாறு உணவு உற்பத்தியைப் பெருக்குதல். இது ஒரு பெரிய சவாலாக இப்போது ஆகிவிட்டது. விவசாயம் ஒரு வருமானமில்லாத சிறு தொழிலாக ஆகிவிட்டதால் பெரும்பாலான சிறு / குறு விவசாயிகள் விவசாயத்தை விட்டு நகர்ப் புறங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்ததும், விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக ஆக்கிவருவதும் முக்கியக் காரணிகள்.

தீர்வு :
விவசாயத்தை மீட்டெடுக்கவும், விளச்சலைப் பெருக்கவும், ஆரோக்கியமான உணவு உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கவும் உடனடி நடவடிக்கை தேவை. புதிய  பசுமைப் புரட்சி ஏற்பட வேண்டும்.

இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. நம்மிடம் இருக்கும் வளமான நிலங்களையும், அபரிமிதமான மனித வளத்தையும் வைத்து இதை நாம் மிகவும் சிறப்பாக செய்ய முடியும். செய்தால் உலகிற்கே உணவு அளிக்கும் வகையில் நாம் வளர முடியும்.

இது பற்றிய முந்தய பதிவு :  விவசாயம் முன்னேற.... .


2) அனைவருக்கும் சிறந்த இருப்பிடம் அமைத்தல் :  
தனிவீடுகள் அதிகரித்த்தும், அடுக்குமாடி வீடுகள் குறைவாக இருப்பதுவுமே காரணம். நம்மிடம் இருக்கும் நிலத்தின் ஒவ்வொரு அடியையும் சரியாகப் பயன்படுத்தாததும் முக்கியகாரணம். பெரும்பாலான இடங்களில் சரியான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வசதி சரியாக இல்லை. மானாவாரியாக விவசாய / தரிசு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து சிறு சிறு கட்டிடங்கள் கட்டிக்கொண்டே செல்வதும் ஒரு காரணம். இதனால் நகரங்கள் மிகவும் விரிவடைந்து பொதுமக்கள் போக்குவரத்தும் ஒரு பிரச்சினை ஆக ஆகிவிட்டது.

பல தனியார்கள் தேவையில்லாமல் நிலத்தில் முதலீடு என்ற பெயரில் நில ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தாமல் வைத்திருப்பதால், ஒரு பெரிய நில மதிப்பு உயர்விற்குக் காரணமாகவும் ஆகிவிட்டது. சாமானியர்கள் வீடு /  வீடுகட்டநிலம் வாங்க முடியாத நிலையும் ஆகிவிட்டது.

தீர்வு :
நில உச்ச வரம்புச் சட்டம் கடுமையாக அமல்படுத்தப் பட வேண்டும்.  பயன்படுத்தப்படாத நிலங்களுக்கு வரிவிதிக்கப்படவேண்டும். தொடர்ந்து பல ஆண்டுகள் பயன்படாத நிலங்களுக்கு ஒரு விலை கொடுத்து அரசாங்கம் வாங்கிகொள்ள ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

நகர்ப்புறங்களில் அதிகமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படவேண்டும்.   அனைவருக்கும் சிறப்பான குடிநீர் மற்றும் சாக்கடை வசதி செய்து தரப்படவேண்டும்.

இதற்கு ஆட்சியாளர்களுக்கு அதிகம் தேவை " Political Will" . ஓட்டு அரசியலை மறந்து மக்கள் நலனை சிந்தித்து செயல்படும் தலைவர்கள் தேவை.


3) புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கல் :
இப்போது இருக்ககூடிய அரசுகள் குறுகிய நோக்கில் செயல்பட்டு வருவதால், பெருகும் மக்கள்தொகைக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியவில்லை. மனித வளம் அதிகம் தேவையான தொழில்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததும் ஒரு முக்கியக் காரணி.

இதனால் மக்கள் கிராமங்களிலிருந்து , சிறு / பெரு நகரங்களுக்கு இடம் பெயரத்தொடங்கினார்கள். இது மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிட்டது. நகரங்களில் போதுமான வசதிகள் இல்லாத நிலையில் இந்த இடப்பெயர்ச்சியும் சேர்ந்து கொள்ள இது ஒரு இடியாப்பச்சிக்கலாக நீடிக்கிறது.

தீர்வு :
அதிக மனித சக்தி தேவைப்படும் தொழில்களையும், உள்ளூர் வாசிகளை அதிகம் உபயோகப்படுத்தும் தொழில்களையும் ஊக்குவிக்கவேண்டும். NREG போன்று சிறந்த திட்டங்கள் தீட்டப்பட்டு சிறப்பாக  செயல்படுத்தப்படவேண்டும். இவற்றில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்.

தொழில் வளர்ச்சி நகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களுக்கும் எட்டும்படி செய்ய வேண்டும். இது பற்றிய முந்தய பதிவு : கிராமங்களும்.. நகரமயமாக்கமும்...

4) சிறந்த தொழில் பயிற்சி நிலையங்கள் / கல்விக்கூடங்கள் அமைத்தல். 
மக்கள் தொகைப்பெருக்கத்தை நாம் உபயோகப்படுத்துவதற்கு இவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. சிறந்த தொழில் நுட்ப வல்லுநர்களை அதிக அளவில் ஏற்படுத்தக் கூடிய சிறந்த தொழில் பயிற்சி நிலையங்கள் / கல்விக்கூடங்கள் அதிக அளவில் இல்லை. இருக்கும் சில சிறந்த கல்விக்கூடங்களில் கற்பவர்களும் பெரும்பாலோனோர் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள்.

நமக்குத் தேவையான அளவில் சிறந்த டாக்டர்களை / எஞ்சினீயர்களை ஏற்படுத்தக் கூடிய கல்விக்கூடங்கள் அறுகியே இருக்கின்றன. சிறந்த டெக்னிசியன்களை ஏற்படுத்தும் சிறப்புப் பயிற்சிக் கூடங்களும் மிகக் குறைவே... இருக்கக் கூடிய சில சிறப்பு கல்வி / பயிற்சி நிலையங்களிலும் கட்டணம் மிக அதிகம்.

தீர்வு :
அதிகமான கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

கல்விக்கட்டணங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்துக் கல்விகளுக்கும் முக்கியத்துவம் வழங்கும் சூழல் ஏற்படவேண்டும்.

அதிகமான சிறந்த ஆசிரியர்கள் உருவாக்கப்படவேண்டும். அவர்களுக்கு சிறந்த வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவேண்டும்.

வாழ்க்கைக் கல்வி போதிக்கப்படவேண்டும். படிக்கும்போதே பிற துறைகளில் சிறப்புப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

5) தரமான பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்தல்.மக்கள் தொகை பெருகும்போது, இப்படிப்பட்ட பிரச்சினைகள் எழுவது நிச்சயம். இதற்கு சிறந்த தரக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட வேண்டும். இதில் தவறு செய்யும் நபர்கள் / அதிகாரிகள் கடுமையாக உடனடியாக தண்டிக்கப்படவேண்டும். உடனடியான கடுமையான தண்டனையே இதற்கு உடனடித் தீர்வு.

6) தரமான மருத்துவ வசதி கிடைப்பதை உறுதி செய்தல்
அதிக  சிறந்த மருத்துவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாக மருத்துவ வசதி உறுதி செய்யப்படவேண்டும்.

அதிகப் படியான அரசு மருத்துவமனைகள் ஏற்படுத்தப் பட்டு, சிறப்பாகப் பராமரிக்கப்படவேண்டும். இதுபற்றிய முந்தய பதிவு அரசு மருத்துவமனைகள் - ஒரு தேவை.....

7) குற்றங்கள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துதல்
மக்கள்தொகை பெருகும்போது பெருகும் குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்புப் படைகள் அமைக்கப்படவேண்டும். அதிகப் படியான போலீசார் நியமிக்கப்பட வேண்டும். இருக்கும் போலீஸ் நிலையங்கள் நவீனப் படுத்தப்படவேண்டும்.  போலீசாருக்கு சிறந்த புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். இவர்கள்  பொதுமக்களுடன் கலந்து பணியாற்ற சிறப்புப் பயிற்சிகள் ஏற்படுத்தப் படவேண்டும்.

சிறைகளில் கைதிகளுக்கு மனநலப் பயிற்சிகள் வழங்கப் படவேண்டும். திகார் சிறையில் இருப்பதைப் போல கைதிகள் மறுவாழ்வுக்கு சிறப்பு ஏற்படுகள் நாடு முழுவதும் செய்யப்படவேண்டும். குற்றவாளிகள் திருந்தி வாழ வழிவகை செய்யவேண்டும்.


மக்கள்தொகை  குறைய / பெருகுவதைக் குறைக்க என்ன செய்யலாம் ?
இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்பட சிறந்த பிரச்சாரங்கள் தொடர்ந்து செய்யப்படவேண்டும்.

ஒவ்வொரு தம்பதியும் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொளவதை ஊக்குவிக்கலாம்.

இரண்டுக்கு மேற்பட்ட குழந்தை இருப்பவர்களுக்கு...

அரசு சலுகைகள் மறுக்கப்படல்
தேர்தலில் போட்டியிடத் தடை
அரசுப் பணியில் சேரத் தடை

இப்படிப்பட்ட தண்டனைகள் தரப்படலாம்.


பரம்பொருளே!! இத்தனை குடைச்சல் தரும் மக்கள்தொகை கட்டுக்குள் வர நீங்கள் தான் ஒரு வழி செய்யவேண்டும். ஓம் நம சிவாய....

4 comments:

G Gowtham said...

பிரச்னைகளை மட்டும் சொல்வதோடு நிறுத்திவிடாமல், தீர்வுகளையும் குறிப்பிடும் உங்கள் பாணி பிடித்திருக்கிறது.. வாழ்த்து(க்)கள்..

Sankar Gurusamy said...

Dear Sir, Thanks for your visit and comments. Keep visiting my blog... :-)

Sriakila said...

பிரச்சினைகளையும் சொல்லி அதற்கு தீர்வையும் நீங்களே தெளிவாகக் கொடுத்திருப்பதால் படிப்பவர்களுக்கு வேலையே இல்லை...உங்கள் பதிவைப் படித்து மனதில் ஏற்றிக்கொள்வதைத் தவிர...

இருக்கிற மக்கள் தொகையையும், விலைவாசியையும் பார்த்து 'ஒரு குழந்தையே போதும்' என்று இருந்தால் அதற்கும் சுற்றியிருப்பவர்கள் விடுவதே இல்லை. ஒரே குழந்தை கடைசிக் காலத்தில் தனி ஆளாகத் தவிக்கும் என்றெல்லாம் சொல்லி (பயமுறுத்தி)அதை செயல்படுத்திப் பார்க்கவே ஆசைப்படுகிறார்கள்.

Sankar Gurusamy said...

Sriakila... This scenario is true. The same thing is happening in my life also... Even the Hospitals are denying to do the Family planning for the single child parents... :-(

Now a new trend of DINK is coming (Doble Income No Kid)... This is also dangerous. Can spoil our social system...

So a balance needs to be achieved for this...

Thanks for your visit and comments...